கணினி மூலம் கணக்கு கற்பிக்கும் அரசுப் பள்ளி!



புது முயற்சி

சமீப காலமாக தமிழகத்தின் ஊடக செய்திகளில் பள்ளிக்கல்வித் துறை தகவல்கள் பெரும்பாலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவருவது, மூடப்படும் அரசுப் பள்ளிகள் பற்றியதாகவே இருப்பது நாம் அறிந்ததுதான். இந்தச் சூழலில் ஒரு சில பள்ளிகள் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தரமான கல்வியை மாணவருக்கு அளித்திடவும் பள்ளிகள் தங்களை பல வழிகளில் புனரமைத்து, மாற்றங்களை முன்னெடுத்து கற்பித்தலில் புதுமையை நோக்கிச் செல்கின்றன.

தொழில்நுட்ப வழிக் கல்வியையும், புதிய பாடநூலில் QR கோடு செயலியைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படும் நிலையும் கொண்ட காலகட்டமாக இருக்கும் இவ்வேளையில், கணக்குப் பாடத்தை கணினி வழியாகக் கற்க குரோம்பேட்டை எம்.பி.என். (MBN) அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘கணக்கு கணினி ஆய்வகம்’ எனப் பொருள்படும் ‘Math Computer Lab’ சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வகம் பற்றி கணித ஆசிரியை உமா நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களைப் பார்ப்போம்…

‘‘பொதுவாக மேல்நிலைப் பள்ளிகளில், பதினொன்று , பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குத்தான் கணினி ஆய்வகம் பயன்படுத்தி வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், நடுநிலை வகுப்புகளான 6,7,8ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்படுத்த இந்தக் கணக்குப் பாட கணினி ஆய்வகம் மிக நவீன முறையில் அமைக்கப்பட்டு செயல்பட்டுவருகின்றது.

தொழில்நுட்ப வகுப்பறைகளை ஊக்குவிக்கும் பள்ளிக் கல்வித்துறையின் செயல்முறைகளுக்கிணங்க, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதியின்பேரில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவிகளின் நலன் கருதி, கணக்கு கணினி ஆய்வகமாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளார்” என்று ஆய்வகம் அமைவதற்கான அடித்தளத்தை கூறினார்.

மேலும் அவர், ‘‘காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே, ஏன் தமிழகத்திலேயே இப்படி ஒரு புதுமை வகுப்பறை, அரசுப் பள்ளி களில் இவ்வளவு கணினிகளுடன் இருக்கின்றதா எனில் சந்தேகம்தான், ஏனெனில், மாணவிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணினி என 53 கணினிகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்தக் கணினிகளில் பயன்படுத்தப்படும் மென்பொருள் கற்க மேத் எனப் பெயர் கொண்டது என்பதால் இதற்கு கற்க மேத் லேப் (Karka Math Lab) என்றே பெயரிடப்பட்டுள்ளது.

இங்கு கணினி ஆய்வக  வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னர், கணக்குப் பாடத்தில் அடிப்படை செயல்களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றில் மாணவர்களைப் பயிற்சித் தாள் (Work Sheet) வழியாக சோதித்து அவர்களது நிலைப்பாட்டை கணினிக்குள் குறித்து வைத்து அதன் பிறகே வகுப்புகள் ஆரம்பமாயின. எந்த ஒரு மாணவியும் எந்தத் திறனும் விடுபடாமல் கற்றுக்கொள்ள கற்க மேத் லேப் 100% உதவுகிறது’’ நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

இந்த கணினி ஆய்வகத்தின் பயிற்சி முறை குறித்து கூறும்போது, ‘‘ஒருவருக்கு கூட்டல் கணக்குத் திறன்கள் தெரிந்த பிறகு, கழித்தலில் அடிப்படை சாதாரண கழித்தல், கடன் வாங்கிக் கழித்தல், 100-லிருந்து, 1000-த்திலிருந்து கழித்தல், பிறகு ஒரு இட மதிப்புப் பெருக்கல், இரு இட மதிப்புப் பெருக்கல், அதேபோல் வகுத்தல் கணக்குகள் தரப்பட்டு இம்மென்பொருள் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த வரிசை அடிப்படையில் மாணவர்கள் தானே கற்றலுக்கு இவ்வகுப்பறை வழி வகுக்கிறது. ஒவ்வொரு கணக்குகளும் நோட்டுகளில் போட்டு தீர்வு காணப்பட்டு பின்னர் கணினியில் அதற்கான தலைப்புகளில் விடையினை அளிக்க, (சரி) அல்லது  (தவறு) என்ற குறியீடுகள் திரையில் வருகின்றன.
இதில் ஒரு சுற்று கணிதத்தில் விடைகளை அளித்து முதல் படிநிலை முழுமையடைந்த பிறகுதான் மாணவர்கள் அடுத்த நிலைக்குச் செல்ல இயலும். அவ்வாறு அந்த நிலையில் முழுமையடையவில்லை என்றால், அதே படிநிலையில் பின்தங்கியிருப்பர்.

இதுபோன்று ஒவ்வொரு படிநிலையிலும் ஆசிரியர்கள் அவர்களுக்கு வழிகாட்டி முன்னேறிச் செல்ல உதவ வேண்டும். நான்கு அடிப்படை செயல்பாடு
களிலும் திறன் பெற்றவர் தொடர்ந்து முன்னேறி பாடநூலில் உள்ள கணிதப் பிரிவுகளை ஒவ்வொன்றாக கற்க வழிவகை செய்யப்படுமாறு மென்பொருள் அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார் உமா.

கணித ஆய்வக நடைமுறைகள் பற்றி விவரிக்கும்போது, ‘‘இந்த முறையில் பாட அறிமுகம் (Introduction), கணக்கு விளக்கங்கள் (Explanations), பயிற்சிகள் (Exercises), முயற்சி செய் (Try These) பகுதி என பாடநூலில் உள்ள அனைத்தும் பவர்பாயின்ட் (Power Point presentation) காணொலிகள் (Video lessons), மதிப்பீட்டு பகுதி (Evaluation Portion) ஆகியவற்றின் துணைகொண்டு  மென்பொருளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களில் ஒரு குழுவினர் கழித்தல் படிநிலையிலும், ஒரு குழுவினர் பெருக்கல் படிநிலையிலும், மற்றொரு குழுவினர் வகுத்தல் செயல்பாடுகள், மீத்திறனுள்ள ஒரு குழுவின் குழந்தைகள் பாடநூலின் பாடப் பகுதியிலும் இருப்பர். உதாரணத்திற்கு, 47 மாணவர் உள்ள ஒரு ஆறாம் வகுப்பில் 12 பேர் இயற்கணிதம் என்ற பாடநூல் பாடப் பிரிவில் கற்க ஆரம்பிக்கின்றபோது 15 பேர் வகுத்தல் கணக்குகளையும், 15 பேர் பெருக்கல் கணக்குகளையும் மீதமுள்ள 5 பேர் கழித்தல் கணக்குகளை செய்பவராகவும் இருக்கின்றனர்.

இந்த 15 பேர் வகுத்தல் கணக்குகளில் திறன் பெற்று அடுத்து இயற்கணித வகுப்பிற்குச் செல்ல வேண்டும். இதேபோல ஒவ்வொரு நிலையிலிருந்தும் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும். இந்த முறையில் கற்றுக்கொள்ளுதல் மாணவரின் தானே கற்றலுக்கு வழி வகுத்தாலும், ஆசிரியர்கள்  சிறு குழுக் கற்பித்தல் (Small Group Teaching) தொடர்ந்து நிகழ்த்த வேண்டும்.

ஆசிரியர்களுக்கும் ஒரு சவாலான வகுப்பறை இது. ஏனெனில்,  ஆசிரியர்கள் முன்கூட்டியே இப்பாடப்பகுதிகளை ஆய்வகத்தில் சென்று கணினி வழியே ஒருமுறை பார்த்து அதன் பிறகுதான் மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றனர்.

இங்கு நான்கு வரிசைகளுடன் கூடிய இரு பிரிவுகளாக மாணவர்கள் பிரிக்கப்பட்டிருப்பர். ஒரு தலைப்பில் திறன் பெற்றவுடன் எழுந்து சென்று தங்கள் பிரிவின் பகுதியில் இருக்கும் தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருக்கும் தாளில் தங்கள் பெயருக்கு நேராக எந்தத் தேதியில், எந்தத் தலைப்பு திறன் பெற்றுள்ளனர் என்பதை அவர்கள் பென்சிலால் குறிப்பிட வேண்டும்.

இதில் கற்கும் படிநிலைகளில் காணொலிகள் பார்க்க, கேட்க அவரவர் கணினிக்கு தனியாக ஹெட் செட் பொருத்தப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தவும் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். இதுதான் கற்க மேத் கணினி ஆய்வகத்தில் கற்றல் கற்பித்தல் நடைபெறும் முறை’’என்றார்.

‘‘கணினியில் அமர்ந்து அதை இயக்கப் பழக்குவது, தங்களது பயன்பாட்டுப் பெயர் (User Name), கடவுச்சொல் (Password) பயன்படுத்தி Log in, Log Out செய்து முடிப்பது என அனைத்தும் பயிற்சி தருவதாக அமைந்தது தொடக்க நாட்களில். இந்தக் கற்க மேத் ஆய்வகக் கற்றலானது மாணவர்களிடம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக பள்ளிக்கு ஒருவரும் விடுப்பு எடுக்காமல் வந்துவிடுகின்றனர்.

அதிக ஆர்வம் காட்டி கணக்கு வகுப்பை எதிர்கொள்கின்றனர். தாங்கள் இருக்கும் நிலைகளை உணர்ந்து, அவர்களாகவே முன்வந்து வீட்டில் பயிற்சி பெற்று வர ஆரம்பித்துள்ளனர். வரும் காலங்களில் எங்கள் பள்ளியில் கணக்குப் பாடத்தில் அடிப்படைத் திறன் இல்லாமல் எந்த மாணவியும் இருக்கமாட்டார் என்பதை உறுதியுடன் கூறலாம். இதன் வழிக் கற்கும் மாணவர்கள், தன்னம்பிக்கை பெற்றவராகவும் கணினிகளை இயக்கும் கூடுதல் திறன் பெற்றவர்களாகவும், சிந்தனை ஒருமுகப்படுத்தும் பயிற்சி பெற்றவராகவும் மாற்றம் பெற்றுவருகின்றனர்.

கரும்பலகை வழிக் கற்பித்தலை விட இது சிறந்ததா? என ஒரு சந்தேகம் வரலாம். அப்படிக் கூறிவிட இயலாது. அது ஒரு வழி, இது ஒரு வழி அவ்வளவே. ஆனால், தனிக்கவனம் செலுத்துவது கணினி வகுப்பறைக் கற்பித்தலில் அதிகம். ஆகவே, கணினி வழிக் கணிதக் கற்பித்தல் ஆய்வகம் சிறப்பானதாகக் கொள்ளப்படுகிறது.

மாணவர்களுக்கு கற்க மேத் லேப் பயன்படுத்தும் பல கணக்கு ஆசிரியர்களுள் நானும் ஒரு கணக்கு ஆசிரியராக இருப்பது எனக்கு மகிழ்வாக உள்ளது. மிகப் பெரிய கூட்டு முயற்சியால் விதைக்கப்பட்டுள்ள இந்த நற்செயல் இன்னும் சில வருடங்களில் மிகப் பெரிய விருட்சமாகும் என்பதில் பெரிய நம்பிக்கை கொள்கிறேன்’’ என்று பெருமிதத்தோடு பேசி முடித்தார் கணக்கு ஆசிரியை உமா.

- தோ.திருத்துவராஜ்