10ம் வகுப்பு கணிதத்தில் சென்டம் பெற சூப்பர் டிப்ஸ்!



* பொதுத்தேர்வு டிப்ஸ்

தேர்வு என்றாலே பள்ளிக் குழந்தைகளுக்கு எப்போதும் பயம்தான், அதோடு கணக்குப் பாடத்தில் தேர்வு என்றால் கூடுதல் பயம்  அவர்களைத் தொற்றிக்கொள்கிறது என்றால் அது மிகையாகாது. ஆம் மொழிப் பாடங்களை அவர்கள் எளிதாக எதிர்கொள்வதற்கும்,  அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை ஓரளவு எளிதாகக் கடந்து விடுவதற்கும் தங்களைத் தயார்படுத்திக்கொண்டாலும்  கணக்குப் பாடத்தைப் பெரும் சுமையாகவும் பயத்துடனும் வெறுப்புடனும் அணுகும் மனநிலையை பெரும்பாலான மாணவர்களிடம் நாம்  காணலாம். ஆகவே, மாணவர்கள் கணக்குத் தேர்வை எவ்வாறு அணுகலாம் என சில பகிர்தல்களை இங்கு காணலாம்.

இதுவரை கணக்குப் பாடத்தை சரியாகப் படிக்காமல் இருந்தால்கூட பரவாயில்லை, இன்றிலிருந்து கூடுதல் கவனம் செலுத்த  ஆரம்பித்தால் சுலபமாக 75 மதிப்பெண்கள் வரை பெற்றுவிடும் வழிமுறைகள் கணக்குப் பாடத்தில் உண்டு.  புத்தகத்தில் மொத்தம் 12  தலைப்புகள் உள்ளன. அதில் செய்முறை வடிவியல் மற்றும் வரைபடம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி பயிற்சி செய்தால் 20  மதிப்பெண்கள் முழுமையாகப் பெற்றுவிடலாம். இதில் வரைபடக் கணக்கில் படம், அளவுத் திட்டம், அளவுகள் சரியாகக் குறிக்கப்படுதல்   மற்றும் அட்டவணை மதிப்புகள் இவற்றை சரியாகச் செய்தால் 10 மதிப்பெண்கள் பெற முடியும்.    

செய்முறை வடிவியல் பகுதியில் உதவிப் படம் சரியாக வரைந்தால் 2 மதிப்பெண்களும் உண்மைப் படம் சரியாக வரைந்து அளவீடுகள்  சரியாகக் குறித்து பெயரிட்டு முழுமையாக்கினால்  மீதமுள்ள 8 மதிப்பெண்கள், ஆக முழுமையான 10 மதிப்பெண்கள்  பெற்றுவிடலாம்.தினந்தோறும் 15 நிமிடங்கள் செலவிட்டு மேற்சொன்ன 2 தலைப்புகளிலும் உள்ள புத்தகக்கணக்குகளை போட்டுப்  பார்த்துப் பயிற்சி செய்தால் பொதுத் தேர்வுக்குள் தயாராகிவிடலாம்.

அடுத்து , மீதியுள்ள 10 பாடத் தலைப்புகளிலும் ஒவ்வொரு பாடத் தலைப்பின் இறுதியிலும் ஒரு மதிப்பெண் வினா விடைகள் 20 - 25  எண்ணிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஒரு மதிப்பெண் வினா - விடை பகுதிகளை தினமும் படித்து, செய்து பார்த்து சிறு  தேர்வு போல எழுதிவந்தால் 15 மதிப்பெண்கள் நிச்சயமாகப் பெற்றுவிடலாம். இதுவரை குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 35-க்கு இவை  போதுமானது. ஆனால், இன்னும் கூடுதல் நேரம் ஒதுக்கினால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.

எளிய பகுதியான கணங்களும் சார்புகளும், இதில் எடுத்துக்காட்டுக் கணக்குகள், வெண் படம், டி மார்க்கன்ண நிரப்பி, வெட்டு, சேர்ப்பு  இவற்றிற்கான சூத்திரங்கள், கணக்குகள் இவற்றில் பயிற்சி பெறலாம். அதனைத் தொடர்ந்து மாணவருக்கு எளிதான பகுதியும்  மதிப்பெண் பெறக்கூடியதும் அணிகள் தலைப்பு, இதில் மிக எளிமையான பயிற்சிக் கணக்குகளும் எடுத்துக்காட்டுகளும் உள்ளன.  இத்தலைப்பில் சற்று பயிற்சி செய்தால்  எளிதில் மதிப்பெண்கள் கூடும்.

இதுவரை நாம் கூறிய தலைப்புகளே 50 மதிப்பெண்களைத் தாராளமாகப் பெற்றுத் தரும். அடுத்ததாக ஆயத் தொலை வடிவியல் என்ற  தலைப்பில், பிரிவுச் சூத்திரங்கள், முக்கோணத்தின் பரப்பு, நாற்கரத்தின் பரப்பு, சாய்வு, கோட்டின் சமன்பாடுகள் இவற்றைப் பயிற்சி  செய்யலாம் . இத்தலைப்பையும் மேற்சொன்ன தலைப்புகளையும் நன்றாகப் பயிற்சி செய்யும் ஒரு மாணவர் எந்தத் தடங்கலும் இன்றி  60 மதிப்பெண்கள் வரைப் பெறலாம்.

அடுத்து நிகழ்தகவு, புள்ளியியல் இவ்விரு தலைப்புகளிலும் கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள், பயிற்சிக் கணக்குகளையும் சேர்த்து  தயாராகும்போது 70 மதிப்பெண்களைக் கடந்த நிலையில் வெற்றி பெறலாம். அதோடு அளவியல் தலைப்பில் வளைபரப்பு, கணஅளவு,  மொத்தப் பரப்பு - கூம்பு, உருளை, கோளம் இவற்றில் பயிற்சி செய்து பார்க்கலாம்.
அடுத்து வடிவியல் தலைப்பு, இதில் பிதாகரஸ் தேற்றம், தேல்ஸ் தேற்றம், எடுத்துக்காட்டு கணக்குகள், வடிவொத்த முக்கோணங்கள்,  தொடு கோட்டின் நீளங்கள் இதற்கான
புரிதலும் கணக்குகளும் பயிற்சி செய்தால், இதுவரை உள்ள தலைப்புகள் 80 மதிப்பெண்களை எளிதாகப் பெற்றுத் தரும்.

மீதமுள்ள இயற்கணிதம், முக்கோணவியல் மற்றும் மெய்யெண்களின் தொடர் வரிசைகளும் தொடர்புகளும் என இம்மூன்று  தலைப்புகளும் கூட நல்ல முறையில் பயிற்சி செய்யப்படின் ஒரு மாணவன் /மாணவி 100 மதிப்பெண்களை எளிதாகப் பெற இயலும்.  மாணவர்கள் தினமும் 2 மணி நேரம் கணக்குப் பாடத்திற்கு ஒதுக்குவது நல்ல மதிப்பெண் பெற வழி வகுக்கும். ஒவ்வொரு முறை  கணக்கைப் போட்டுப் பார்க்கும்போதும் சிக்கல் தீரும். என்றுமே கணக்கை மனப்பாடம் செய்யக் கூடாது. படங்கள், குறியீடுகள்  ஆகியவற்றை எழுதிப் பார்த்து சுயமாகப் புரிந்துகொள்ள முயல வேண்டும்.

கணக்கின் மற்றொரு சிறப்பு இப்பாடத்தில் மட்டும்தான் சரிபார்த்தல் செய்ய முடியும். ஆகவே, மாணவர் ஒரு கணக்கைத் தேர்வு  விடைத்தாளில் போட்ட பிறகு அதன் வலப்பக்கத்தில் ஏற்கனவே போட்டுக் கொள்ளும் Rough work பகுதியில் சரிபார்த்தல் போட்டுப்  பார்ப்பது நல்லது. தேர்வறையை விட்டு வெளியே வரும் முன்னரே தான் எத்தனை மதிப்பெண் வாங்குவோம் என தெரிந்துவிடும்.

வழிகள் தெளிவாகவும், எண்கள் சரியாகவும் குறிப்பிடப்பட வேண்டும். அளவியல் பகுதி வரும்போது மீ, செ.மீ, ச.மீ இதுபோன்ற  அலகுகளை மறக்காமல் எழுதவேண்டும். பெருக்கல், வகுத்தல், சுருக்குதல் செயல்களை ஏற்கனவே கூறியபடி Side work - Rough work  என்ற பகுதியில் போட்டுப் பார்த்து தவறில்லாமல் விடைகளை எடுத்து எழுத வேண்டும். அடித்தல், திருத்துதல் இருக்கக்கூடாது.  அளவுகோல், பாகை மானி இவற்றைப் பயன்படுத்தும்போது கவனமாக மதிப்புகளைப் போட வேண்டும், பிழை செய்யக்கூடாது.     

இவ்வாறு ஒரு 10 ஆம் வகுப்பு மாணவர் தன்னை சரியான முறையில் பயிற்சி செய்து கொண்டால் எளிதாக மதிப்பெண்கள் பெறலாம்.  கணக்குத் தேர்வைப் பொறுத்தமட்டில் பயமோ பதற்றமோ தேவையற்றது. எளிதாகக் கையாளலாம். இவ்வாறு மாணவர் தங்களை  தகவமைத்துக் கொண்டால் கணக்குப் பாடத் தேர்வு மட்டுமல்ல எல்லாப் பாடத் தேர்வுகளுமே அவர்களுக்கு மிக எளிதே!

உமா M.Sc.,M.Ed.