முதல் உதவி அறிவோம்



டிக்‌ஷ்னரி

* காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் அவசியம். அவரிடமிருந்து ஆரோக்கியமானவருக்கு நோய்த்தொற்று பரவும் வாய்ப்பு உண்டு. உதவி செய்பவரிடமிருந்து நோய் உற்றவருக்கும் ஏதேனும் தொற்று பரவும் வாய்ப்பும் உண்டு. எனவே, முதல் உதவி செய்வதற்கு முன்னரும், முதலுதவி தந்த பின்னரும் கைகளை சோப்பினால் கழுவுவது அவசியம்.

* காய்ச்சல் எந்த வகையினதாக இருந்தாலும் உடனடியாகக் கவனிக்க வேண்டும். காய்ச்சலுக்கு என்ன காரணம் என்பதை அறிந்து, முதல் உதவி செய்வதுடன் உரிய சிகிச்சையினையும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் நலனில் காய்ச்சல் என்பது மிகவும் கவனத்துக்கு உரியது.

* காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் உடலில் இருந்து ஆற்றலும், நீர்சத்தும் அளவுக்கு அதிகமாக வெளியேறும். இதனை சமாளித்து அவரை பழைய நிலைக்குக் கொண்டுவர, வெந்நீர் மற்றும் க்ளுக்கோஸ் போன்ற திரவ உணவுகளைக் கொடுக்கலாம்.

*அதிர்ச்சி அல்லது விபத்து காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு மயக்கம் அடைய வாய்ப்பு உள்ளது. அவ்வாறு ஒருவர் நினைவிழந்து விட்டால், முதலில் அவரின் தலையினை தாழ்வான நிலையில் இருக்குமாறு, ஒரு பக்கமாக சாய்த்து படுக்க வைக்க வேண்டும்.

* தொண்டையில் கடினமான பொருட்கள் அடைத்துக் கொள்ளல், சுய நினைவின்றி கிடப்பவரின் தொண்டை பகுதியில் அவரது நாக்கு, கட்டியான கோழை மாட்டிக்கொள்ளுதல், தண்ணீரில் முழ்குதல், அளவுக்கு அதிகமான புகையால் மூச்சுவிடத் திணறுதல் போன்றவை ஒருவருக்கு சுவாசம் நின்று போவதற்கான முக்கிய காரணிகளாக உள்ளன. இவற்றால், சுவாசம் நின்று போனால், உடனடி முதலுதவியாக, மூச்சு நின்று போனவரின் வாய்க்குள் அடுத்தவர் வாயை நெருக்கமாக வைத்து மூச்சை செலுத்த வேண்டும்.      

* சிறுவர், சிறுமியருக்கு மூச்சு தடைபட்டு, சுவாசம் நின்று போகும்போது மார்பின் நடுவில் 2 விரல்களை மட்டும் வைத்து அழுத்துவது போதுமானது. முதல் உதவி நன்றாகத் தெரிந்த இருவர் இருக்கும்பட்சத்தில் ஒருவர் வாய் வழியாக காற்று செலுத்துவதையும், மற்றொருவர் இதயத்தை அழுத்துவதையும் செய்யலாம்.

*‘இதயத்தை பிடித்து விடுதல்’ என்ற முதலுதவி சிகிச்சையை அளிக்கும்போது, மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். ஏனென்றால், மார்பின் மீது அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. அவ்வாறு செய்யும்பட்சத்தில், மார்பு எலும்பு முறிய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, கல்லீரல் மற்றும் சதைப்பகுதிகள் சேதமடையலாம்.    

*நீரில் முழ்கியவருக்கு சுவாசம் தடைபட தொடங்கினால், 3 நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். எனவே, தண்ணீரில் சிக்கியவரைக் கரைக்கு கொண்டு வரும் வரைக்கும் காத்திருக்கக் கூடாது. நீரில் நிற்கும் அளவுக்கு வந்த உடன் வாய் வழி சுவாச முறையை ஆரம்பித்து விட வேண்டும்.  

*கொளுத்தும் வெயிலில் கடுமையாக உழைப்பவர்களுக்கு கை, கால்கள் மற்றும் வயிற்றுப்பகுதிகளில் வலியை ஏற்படுத்துகின்ற பிடிப்பு ஏற்படும். இந்த பாதிப்பை சரி செய்ய நன்றாக கொதிக்க வைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி உப்பு கலந்து குடித்து வர பயன் கிடைக்கும்.

தொகுப்பு: விஜயகுமார்