மனசுதான் டாக்டர்...



Centre Spread Special

மனிதர்களின் சமீபத்திய உடல்நல சீர்குலைவுகளுக்கு உடல்ரீதியான நோய்களைக் காட்டிலும், உளவியல் கோளாறுகளே முக்கிய காரணமாகின்றன என உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், உளவியல் ரீதியிலான கோளாறுகளிலிருந்து விரைந்து வெளிவருவதற்கு மருந்து, மாத்திரைகள் உதவாது. நேர்மறை உளவியல் மட்டுமே முக்கிய தீர்வாக இருக்க முடியும் என்றும் பரிந்துரைக்கிறது.

இழந்த உடல்நலம் மற்றும் மகிழ்ச்சியை மீட்டெடுக்கும் அதேவேளையில், தற்போதுள்ள ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் தக்கவைத்துக் கொள்ளவும் நேர்மறை உளவியல் முக்கிய பங்காற்றுகிறது. காரணம், நமக்கே தெரியாமல் நம் எண்ணங்கள் நம் மனதையும், உடலையும் தாக்கும் வல்லமை
படைத்தவை.

தற்போது மனிதனை அதிகம் பயமுறுத்தும் நோய்களான புற்றுநோய், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு பெரும்பாலான நேரங்களில் மனிதனுக்கு ஏற்படும் மனப்பதற்றம், மன அழுத்தத்தால் உருவாகும் அமிலத்தன்மை மற்றும் நச்சுக்களே மூலகாரணங்கள் என்பதை ஏராளமான ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

நேர்மறையான மனநிலை இல்லாவிடில் உடல் ஆரோக்கியத்துக்காக நாம் செய்யும் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவற்றால் எந்தப் பலனுமில்லை. தேவையில்லாத வைரஸ்களிடமிருந்து கம்ப்யூட்டரில் ஏற்கனவே இருக்கும் முக்கியத் தகவல்களை எப்படி ஒரு Anti-Virus application மூலம் பாதுகாக்கிறோமோ, அதுபோல நேர்மறை உளவியலானது ஒரு வைரஸ் எதிர்ப்பாக செயல்பட்டு, மனித மனம் மற்றும் உடலை பாதுகாக்கிறது என்கிறார்கள்.ஆமாம்... உங்கள் மனசுதான் உங்களுக்கு டாக்டர்!

- உஷா நாராயணன்