கண்கள் சொல்லும் இதயத்தின் ஆரோக்கியம்



அறிவோம்

‘உன் இதயம் சொல்வதை கண்களே காட்டிக் கொடுத்துவிடுகிறது’ என்று காதலர்கள் ரொமான்டிக்காக சொல்வதை இப்போது விஞ்ஞானமும் மெய்ப்பிக்கிறது. விழித்திரை அல்லது பார்வைக் கோளாறுகளை அறிவதற்கு செய்யப்படும் புதிய கண் பரிசோதனையின் மூலம் சிறுநீரகம், இதயம் மற்றும் ரத்தக்குழாய் அமைப்புகளில் ஏற்பட்டுள்ள நோய்களையும் அதற்கான அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பாகவே கணிக்க முடியும் என்று நவீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இருக்கும் ‘மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி நிறுவனத்தின்’ மருத்துவர்கள், ஸ்காட்லாந்தின் டூண்டி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மற்றும் இங்கிலாந்தின் தேசிய ஆராய்ச்சி நிறுவன மருத்துவர் குழுவாக இணைந்து விழித்திரை சோதனை மூலம் தற்போது மனிதர்களை அதிகம் தாக்கும் நோய்களை எப்படி முன்கூட்டியே கண்டறிவது என்ற ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த மருத்துவக்குழு, 30 ஆயிரம் இந்திய நோயாளிகள் உட்பட நோயாளிகளின் தொகுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், நீரிழிவு தொடர்பான பொதுவான மற்றும் குறிப்பிட்ட பிரச்னைகளை தீர்மானிக்க, கூட்டு ஆய்வுகளில் ஈடுபட்டனர். இதில்தான் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

‘விழித்திரையை ஸ்கேன் செய்யும்போது கண்களில் இருக்கும் ரத்த நாளங்களின் அமைப்பு, அளவு, தடிமன் மற்றும் அதில் ஏற்பட்டுள்ள வீக்கம், அடைப்பு போன்ற அறிகுறிகள், இதய பிரச்னைகள் அல்லது சிறுநீரக செயலிழப்பு போன்ற முக்கிய உறுப்புகளில் ஏற்படும்
பிரச்னைகளை சுட்டிக்காட்டுகின்றன.

அதேபோல, விழித்திரையில் ஏற்படும் மாற்றங்கள், பின்னாளில் அல்ஸைமர் போன்ற மறதிநோய் வருவதற்கான அறிகுறியை எடுத்துக் கூறுவதாகவும் இருக்கின்றன. இதுபோன்ற அறிகுறிகளை வைத்து, முன்கூட்டியே சிகிச்சைகளையும், வாழ்வியல் மாற்றங்களையும் நோயாளிகள் தொடங்கும்போது அந்த நோய்களின் பிடியிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும்’ என்ற முக்கிய செய்தியை தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

- என்.ஹரிஹரன்