நீராபானத்தால் என்ன நன்மை?!



நாட்டு நடப்பு

தென்னை மர விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாகவும், பொதுமக்களுக்கு ஆரோக்கியரீதியாகவும் உதவும் என்று தமிழக அரசு நீராபான விற்பனைக்கு சமீபத்தில் அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த நீராபானம் என்பது என்ன, என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று சித்த மருத்துவர் சதீஷ் விளக்குகிறார்.

‘‘கேரளா, கர்நாடகா, கோவா போன்ற மாநிலங்களில் பிரபலமாகவும் மிகுந்த பயனுள்ளவையாகவும் நீரா பானம் விற்கப்படுகிறது. தற்போது தமிழகத்தி–்லும் விற்கப்படுவதற்கான முன்னெடுப்புகள் நடந்து வருகின்றன.

பொதுவாக, நீராபானம் தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் ஒருவகை பானம். பனை மரத்தில் எப்படி கள்ளை பதநீராக மாற்றி பயன்படுத்துகிறோர்களோ அதுபோல தென்னை மரத்தில் இருந்து எடுத்து பயன்படுத்தும் ஒரு பானம்தான் நீரா பானம்.

தென்னம் பாலையை சீவி, அதில் உள் பக்கம் சுண்ணாம்பு பூசப்பட்ட மண் கலயங்களை பொருத்தி, கட்டி வைத்து 12 மணி நேரம் காத்திருந்தால் நீராபானம் ரெடி. இதில் சுண்ணாம்பு பூசி சரியான பதத்தில் இறக்கப்படுவதால் போதை தரும் கள்ளுடைய தன்மையிலிருந்து மாறி, அனைவரும் அருந்தும் பானமாக நீராபானம் மாறிவிடுகிறது.

இந்த திட்டத்தை அரசு முறையாக கண்காணித்து, இதுபோன்ற இயற்கை பானங்களை பெருமளவு விற்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் பெரும் அளவு பொதுமக்களை பயன்பெறச் செய்யலாம். ரசாயனம் கலந்த குளிர்பானங்கள் குடிப்பதும் தவிர்க்கப்படும்’’ என்பவர், நீராபானத்தில் உள்ள சத்துக்கள் பற்றிக் கூறுகிறார்.

‘‘ஒரு டம்ளர் நீராபானத்தில் சோடியம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 1, பி -6 மெக்னீசியம், நீர்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த நீராபானம் ஈரல் பாதிப்பு நோய்களை தடுக்கிறது, செரிமான மண்டலத்தை பாதுகாக்கிறது. மூல நோய்களுக்கு சிறந்த பானமாக இருக்கிறது, சிறுநீர் சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் ஏற்ற பானமாக இருக்கிறது. உடல் வெப்பம் சம்பந்தமான நோய்களை தீர்க்கிறது.

தோல் சுருக்கத்தை தடுக்கிறது, உடலுக்கு தேவையான நீர் சத்துக்கள் அடங்கியிருக்கிறது. உடலுக்கு குளி்ர்ச்சியை அளிக்கிறது, தாகத்தை தணிக்கிறது, உடலுக்கு புத்துணர்வை தருகிறது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அருந்தலாம். இந்த பானத்தை அரசே தயாரித்து நேரடியாக விற்பனை செய்யலாம். காலையில் வெறும் வயிற்றில் அருந்தும்போது இதன் முழுமையான மருத்துவ பயன்களை பெற முடியும்!’’

- கவிபாரதி