கற்றல் குறைபாடுகள்



மனசே... மனசே...

Learning Disorders

கற்றல் குறைபாடு குழந்தையின் கல்வித்திறனை பாதிப்பதால், குழந்தையைப் பள்ளியில் சேர்த்த பின்பே இக்குறைபாடு இருப்பது பெரும்பாலும் தெரியவருகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதத்தில் கற்றல் குறைபாடுகளின் அறிகுறிகள் இருக்கக்கூடும் என்பதால் இதை அடையாளம் காண்பது கடினம்.

சில தருணங்களில், பல வருடங்கள் கழித்து பெரியவர்களான பிறகுதான் ஒருவருக்கு கற்றல் குறைபாடு உள்ளது என கண்டறியப்படுகிறது. அதற்குள் ஒருவர் பள்ளி, குடும்பம் மற்றும் வேலையில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. 

ஏன் இவர்களுக்கு இப்படி?

எல்லோரும் பொதுவாகக் கருதுவது போல கற்றல் குறைபாடினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் அறிவுத்திறனில் சளைத்தவர்கள் அல்ல. அதோடு, இவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் இல்லை என்றும் சொல்ல முடியாது. இவர்கள் குடும்பச் சூழல், உணர்வு ரீதியான பிரச்னைகள் போன்றவற்றாலும் கற்றல் பிரச்னைகளுக்கு ஆளாகவில்லை. கற்றல் குறைபாடு என்பது ஒருவகை நரம்பியல் கோளாறு.

இது மூளையின் பல்வேறுத் திறன்களான, தகவல்களை சேமித்தல், பாதுகாத்தல், ஆய்வு மற்றும் செயலாக்குதல் போன்றவற்றைப் பாதிக்கிறது. எப்படி ஒரு தவறான வயரிங்கினால் தொலைபேசி தொடர்பு வேலை செய்யாமல் போகிறதோ, அது போல, மூளையில் ஏற்படும் மாறுபட்ட நரம்பு வயரிங்கினால், வாய்மொழி மற்றும் வாய்மொழி அல்லாத தகவல்களைப் பெறுவதிலும் செயல்படுத்துவதிலும் பாதிப்பு ஏற்படுகிறது.

ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதற்கு, முதலில் அதை ஐம்புலன்கள் மூலமாக  உணர வேண்டும். பிறகு அதை ஒருமுகப்படுத்தி, வரிசைப்படுத்தி, எளிமைப்படுத்தி அதன் அர்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வித மூளைச் செயல்பாடுகள் கற்றலுக்கு மிகவும் முக்கியம். இதில் ஏதேனும் ஒன்று சரியாக செயல்படவில்லை என்றாலும் அது கற்றல் குறைபாட்டை ஏற்படுத்திவிடும்.

கற்றல் குறைபாடு வகைகள்

கற்றல் குறைபாடு வெவ்வேறு விதமாக குழந்தைகளைப் பாதிக்கிறது. சில குழந்தைகள் நன்றாக புத்தகம் படிப்பார்கள். ஆனால், கணக்குப் பற்றிய புரிதல் இருக்காது. வேறு சில குழந்தைகளுக்கு வாசிப்புத் திறன் இல்லாமல் இருக்கும். இன்னும் சிலருக்கு எழுதுவதில் பிரச்னை இருக்கும். பிரச்னை வெவ்வேறாக இருப்பினும் இவை எல்லாமே ‘கற்றல் குறைபாடுகள்’தான். ஒவ்வொரு திறன்களை பாதிக்கும் விதத்தை வைத்து இவற்றை சில வகைப்படுத்தலாம். ஆனாலும், ஒரே குழந்தைக்கே ஒன்றுக்கும் மேற்பட்ட திறனிலும் பிரச்னை இருக்கலாம். எந்தத் திறன் அதிகம் பாதித்துள்ளதோ அதைக் கொண்டு, பின்வரும்படி வரிசைப்படுத்தலாம்.

டிஸ்லெஸ்சியா (Dyslexia)

இவ்வகை கற்றல் குறைபாடுதான் அதிகம் காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எழுத்து/வார்த்தைகளை அடையாளம் காண்பதிலும்/புரிந்து கொள்வதிலும், படிப்பதிலும் சிரமம் ஏற்படும். எதையாவது படிக்கச் சொன்னால் இவர்களால் மெதுவாகத்தான் படிக்க முடியும். அதிலும் பிழை இருக்கும். மேலும் வார்த்தைகளைக் குழப்பி, எழுத்துப்பிழையும் அதிகம் செய்வார்கள். ஒலி, எழுத்து மற்றும் வார்த்தை போன்றவற்றை சம்பந்தப்படுத்தி/ஒருங்கிணைத்துப் பார்ப்பது இவர்களுக்குக் கடினமான விஷயம் என்பதால் இத்தடுமாற்றம் ஏற்படும்.

டிஸ்கல்குலியா (Dyscalculia)

இவ்வித கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள், கணக்கில் மிகவும் பலவீனமாக இருப்பார்கள். எண்களை வரிசைப்படுத்துதல், நினைவில் வைத்துக்கொள்ளுதல், எண்ணுதல், நேரம் பார்த்தல் போன்றவற்றில் மிகவும் சிரமப்படுவர்.

டிஸ்க்ரபியா (Dysgraphia)

இந்த கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு எழுதுவதில் (எழுத்து வடிவம் கொடுப்பதில்) சிரமம் ஏற்படும். இவர்களால் தெளிவாக எழுத்துப் பிழையின்றி எழுத முடியாது. அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை கிரகித்து, அதை எழுத்து மூலம் ஒருசேர வெளிப்படுத்த மிகுந்த சிரமப்படுவர்.

கற்றல் குறைபாட்டினால் ஏற்படும் பிற விளைவுகள்

இது ஒருவரின் கவனம், புரிந்து கொள்ளுதல், நினைவாற்றல், பகுத்தல், நினைவில் பதிந்து கொள்ளுதல், ஒருங்கிணைத் தல் போன்ற பல்வேறு கற்றல் திறன்களை பாதிப்பதால், கல்வித்திறன் வெகுவாக பாதிக்கும். இதனால் ஒரு மாணவனின் தன்னம்பிக்கை குறைந்து, கேலிக்கு உள்ளாகும் நிலை ஏற்படுவதால் அவன் உணர்வுகள் மற்றும் செயல்பாடுகள் (Emotional  and Beha Vioral Problems) பாதிப்புக்கு உள்ளாகும். கற்றல் குறைபாட்டை சீக்கிரமாகவே கண்டறிந்து சிகிச்சையளிக்காவிட்டால், பல்வேறு மனப் பிரச்னைகளுக்கு அம்மாணவன் ஆளாக வேண்டி வரும்.

விரைவிலேயே கண்டறிவது எப்படி?

பின்வரும் அறிகுறிகளைக் கொண்டு குழந்தைக்கு கற்றல் குறைபாடு உள்ளதா என்பதை அறிய முடியும். தங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படுத்தும்படி கற்றலில் பிரச்னை இருப்பின், பெற்றோர் அதை அலட்சியப்படுத்தாமல், உடனே கவனித்து அதற்கான ஆரம்ப கட்ட சிகிச்சை எடுத்துக் கொண்டால், அதனால் ஏற்படும் நன்மைகள்
அதிகம்.

பாலர்கள் (Preschoolers) (2-3 வயது)
1.பிற குழந்தைகளை ஒப்பிடுகையில் தாமதமாக பேச ஆரம்பித்தல்.
2.உச்சரிப்பு பிரச்னைகள்.
3.மெதுவான சொல்திறன் வளர்ச்சி - பொதுவாக சரியான வார்த்தையை கண்டுபிடிக்க முடியாமல் போவது.
4.ரைமிங் வார்த்தைகளை சொல்வதில் கடினம்.
5.எண்கள், எழுத்துகள், நிறங்கள், வாரநாட்களைப் புரிந்துகொள்வதில் கடினம்.
6. அமைதியற்ற நிலை, எளிதில் கவனம் சிதறுதல்.
7.சக குழந்தைகளுடன் பழகுவதில் பிரச்னை.
8.பிறர் சொல்வதை (direction) பின்பற்ற இயலாமை.
9.பென்சிலை பிடித்து தெளிவாக எழுதுவதில் சிரமம்.
10.ஷு லேஸ் கட்டுவது, பொத்தான் போடுவது போன்ற மோட்டார் திறனில் சிக்கல்.

சிறு குழந்தைகள் (4-8 வயது)
1.எழுத்துக்கும் ஒலிக்கும் இடையே உள்ள தொடர்பை புரிந்துகொள்வதில் மந்த நிலை.
2.ஒலியை இணைத்து வார்த்தையை உருவாக்க முடியாத நிலை.  
3.அடிப்படைச் சொற்களை குழப்பிக் கொள்ளுதல் (‘ஓடு’, ‘சாப்பிடு’, ‘வேண்டும்’).
4.தொடர்ச்சியாக எழுத்து மற்றும் வாசிப்பில் பிழை செய்தல்.
a. வார்த்தையை மாற்றிப் போடுவது (b/d).
b. வார்த்தையை நேரெதிராக போடுவது (m/w).
5.எண்களின் வரிசையை மாற்றிக் கூறுதல்; கணித குறிகளை (+ = / %) குழப்பிக் கொள்ளுதல்.
6.விஷயத்தை மெதுவாக நினைவுகூர்வது.
7.புதிய திறன்களை கற்பதில் மந்த நிலை... விஷயத்தின் பொருள் தெரியாமல் அதிகமாக மனப்பாடம் செய்தல்.
8.நேரத்தை புரிந்துகொள்வதில் சிரமம்.

இதுபோன்ற அறிகுறிகள் சாதாரணமாக, வளரும் குழந்தைகளிடத்திலும் சில நேரங்களில் காணப்படலாம். 6 மாதங்கள் தொடர்ந்து அறிகுறிகள் காணப்பட்டால் மட்டுமே அவை கற்றல் குறைபாடாக இருக்கக்கூடும். கற்றல் குறைபாடு (எல்.டி.) பாதித்த குழந்தைகளைப் பொதுவாக ஏ.டி.எச்.டி. (ADHD) மற்றும் ஆட்டிஸம் (Autism) போன்ற வேறு சில நரம்பியல் கோளாறுகளுடன் குழப்பிக் கொள்வது சகஜம். சில குழந்தைகளுக்கு எல்.டி. கூடவே ஏ.டி.எச்.டி. (ADHD) மற்றும் ஆட்டிஸம் (Autism) போன்ற வேறு நரம்பியல் குறைபாடும் சேர்ந்தே இருக்கும் வாய்ப்புள்ளது.

தேர்ந்த உளவியல் நிபுணரைச் சந்தித்து, தகுந்த உளவியல் ஆய்வுக்குப் பின்பே, குழந்தைக்கு என்ன பிரச்னை என்பதை சரியாக கண்டுபிடிக்க முடியும். பிரச்னையை சரியாகக் கண்டறிவதுதான் முறையான சிகிச்சைக்கு முதல் படி. பெற்றோர் பயந்து/தங்களைக் குழப்பிக் கொள்ளாமல் உளவியல் நிபுணரிடம் அழைத்து தெளிவு பெறுவது நல்லது.

எதனால் ஏற்படுகிறது?

கற்றல் குறைபாடு எதனால் ஏற்படுகிறது என மிகச் சரியாக சொல்ல முடியாது. ஆனால், எல்.டி. உள்ளவர்களுக்கு மூளையின் அமைப்பு வித்தியாசமாக இருக்கும். இந்த வித்தியாசம் குழந்தை பிறந்ததிலிருந்தே காணப்படும். பொதுவாக மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணி களால் குழந்தைகளுக்கு இப்பாதிப்பு ஏற்படலாம்.

தாய், தந்தை இருவரோ, இருவரில் ஒருவரோ மதுப்பழக்கத்துக்கு ஆட்பட்டாலோ, பிரசவத்திலேயே கருவை பாதித்திருக்கும் வாய்ப்பு உள்ளது. கருத்தரிப்பின் போது சாப்பிட்ட மருந்து, மாத்திரைகள் கூட காரணமாக இருக்கலாம். போதுமான சத்துகள் கிடைக்காத நிலையும் முக்கிய காரணிகளாக அமைகின்றன. காரணம் என்னவாக இருப்பினும், பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், ‘எல்.டி.யால் பாதிக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளை எப்படி திறன்பட செயல்பட வைப்பது என்பதைப் பற்றித்தான்!

பெற்றோர் கவனத்துக்கு...

‘எல்.டி.’ எனும் இந்த நரம்பியல்சார் பிரச்னையை மருந்து, மாத்திரையால் குணப்படுத்த முடியாது. நிரந்தரத் தீர்வும் கிடையாது. நல்ல செய்தி என்னவெனில் எல்.டி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பொதுவாகவே புத்திசாலிகளாகவும் திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். இவர்களை மாற்று முறையில் சிறப்பு பயிற்சியாளர் உதவியின் மூலம் பயிற்றுவித்தால் பள்ளியிலும் வாழ்க்கையிலும் வெற்றி பெறச் செய்யும் திறன்களை வளர்க்க முடியும்.

பெற்றோர், உளவியல் நிபுணரின் உதவியுடன் பிள்ளைகளின் பலம்/பலவீனத்தைக் கண்டுபிடித்து, அதற்கேற்ப பயிற்சி தரும் சிறப்புப் பள்ளியில் சேர்த்தால், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பல மேதைகளும் வாழ்க்கையில் வெற்றிப் பெற்றவர்களும் எல்.டி.யால் பாதிக்கப்பட்டவர்கள் எனும் உண்மை, நிச்சயம் பலருக்கும் ஊக்கம் கொடுக்கும். பிரச்னை தானாக சரியாகி விடும் எனக் காலம் தாழ்த்தாமல் சரியான நேரத்தில் முறையான சிகிச்சை எடுத்தால் நலம் பெறலாம்!

பொதுவாக பள்ளி செல்லும் பெரும்பாலான குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்வதிலோ, பாடங்களைப் புரிந்து கொள்வதிலோ அவ்வப்போது பிரச்னைகளைச் சந்திப்பது இயல்பு. அறிவுத்திறன் நன்றாக இருந்தும், முயற்சி எடுத்தும், கல்வித்திறனில் தொடர்ச்சியாக பின்தங்கினால் அக்குழந்தைகளுக்கு ‘கற்றல் குறைபாடு’ இருக்கும் வாய்ப்புள்ளது.

இவர்கள் ஒரு விஷயத்தைக் கேட்பது, பார்ப்பது, புரிந்துகொள்வது போன்றவற்றில் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுவர். இதனால் புதிய தகவல் / திறன்களைக் கற்பதிலும், அதை புரிந்துகொள்வதிலும் சிரமப்படுவார்கள். கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பொதுவாகவே புத்திசாலிகளாகவும் திறமைசாலி களாகவும் இருப்பார்கள்.

கோமதி ஏன் இப்படிச் செய்கிறாள்?

கோமதிக்கு வயது 10. ‘படு சுட்டி, அறிவாளி’ என ஏகத்துக்கும் எல்லோரும் புகழும் அளவுக்கு சிறந்து விளங்கினாள். பள்ளியிலோ மற்ற மாணவர்களைக் காட்டிலும் குறைவாகவே மதிப்பெண் வாங்கினாள். ஆசிரியர் சொல்லும் தகவல்களை புரிந்து, சரியான புத்தகத்தை எடுத்து சரியான பக்கத்தை திருப்பக்கூட இயலாமல் தவித்தாள். திடீரென ஆசிரியர் புத்தகத்தில் உள்ள வாக்கியத்தை எழுந்து படிக்கச் சொன்னார், அதை படிப்பதில் மிகவும் தடுமாறினாள்.

இதனால், சக மாணவர்கள் அவளை கேலி செய்தனர். பிரச்னையை வெளியே சொல்ல முடியாமல் திணறிப் போனாள். எப்படியாவது தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று சக மாணவர்களுக்கு முன் சாதித்து காட்ட, கடுமையாக வெகுநேரம் படித்துக் கொண்டிருந்தாள். ஆனாலும், அவள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கேற்ப பலன் கிடைக்காமல், மறுபடியும் பெற்றோரின் வருத்தத்துக்கும் கோபத்துக்கும் ஆளானாள். இப்படியே தொடர்ந்ததால், கோமதி சோர்ந்து போனாள்.

அவளுடைய அம்மா விடாமுயற்சியாக பள்ளிப்பாடத்தை திரும்ப திரும்ப கோமதியை எழுத வைத்தும் பார்த்துவிட்டார். எவ்வித முன்னேற்றமும் தெரியவில்லை. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. பள்ளி சென்று ஆசிரியையிடம் கலந்தாலோசித்த பிறகே, அவளை உளவியல் ஆலோசகரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு, பார்வை, கேட்கும் திறன் மற்றும் அவளின் மருத்துவ ஏடு அனைத்தையும் ஆய்வு செய்த பின், கோமதி சில உளவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாள்.

 அவளுக்கு படிக்கும் திறனில் கற்றல் குறைபாடு  (Dyslexia)   இருப்பது தெரிய வந்தது.  அது தெரிந்த பின்னே, பள்ளியில் இன்னும் கேலிக்கு ஆளானாள். இதனால் உணர்வு ரீதியாகவும் பாதிக்கப்பட்டாள். கோமதிக்கும் பெற்றோருக்கும் உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது. கோமதிக்கு உணர்ச்சியை எங்ஙனம் சமாளிப்பது என்றும், பெற்றோருக்கு, அவளை எப்படி ஊக்குவிக்க வேண்டும் என்றும் பயிற்சியளிக்கப்பட்டது. இப்போது கோமதி தன்னம்பிக்கைபுடன் படித்து, நடத்தை மற்றும் உணர்ச்சி பிரச்னைகள் (Emotional and Behavioral Problems) குறைந்து, எல்லோருடன் நன்றாகப் பழகி, மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

 ஒருவருக்கு எல்.டி. என கண்டறிவதன் நோக்கம், அவரை முத்திரைக் குத்தி, சமுதாயத்திலிருந்து பிரிவுபடுத்தி காயப்படுத்த அல்ல.  பிரச்னையை சரிவர கண்டுபிடித்து அதற்கு சரியான சிகிச்சை எடுக்கத்தான் என்பதை புரிந்து கொண்டு, கோமதி போன்ற மாணவர்களுக்கு ஆதரவாக இருப்பது அவசியம்.

(மனம் மலரட்டும்!)