யோகா மரபணுவையே மாற்றும்!



Centre Spread Special

யோகா செய்வது மனதுக்கு நல்லது, உடல்நலனுக்கு உகந்தது என்றெல்லாம் பல்வேறு ஆய்வுகள் நிரூபித்து வருகிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, இன்னும் ஒரு படி மேலே சென்று ஆச்சரியகரமான செய்தி ஒன்றை சொல்லியிருக்கிறது. யோகா செய்வதன் மூலம் மரபணுக்கள் அளவிலேயே மாற்றங்கள் ஏற்படும் என்று குறிப்பிட்டிருக்கிறது.

யோகா, தியானம் போன்ற வாழ்வியல் நடைமுறைகள் மரபணுக்களில் எப்படி வினையாற்றுகின்றன என்பதை 10 ஆண்டுகாலமாக ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள். உடல்நலக் குறைபாடு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய டி.என்.ஏ முலக்கூறுகளையே தலைகீழாக மாற்றக்கூடிய அளவுக்கு இவற்றுக்கு சக்தி உண்டு என்பதைத்தான் ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இறுக்கமான சூழலில் ஒருவர் இருக்கும்போது Sympathetic Nervous System தூண்டப்படுகிறது. இதனால் அணுக்கரு காரணியான Kappa B (Nuclear factor) என்றழைக்கப்படும் மூலக்கூறு உற்பத்தி அதிகரிக்கிறது. நம் மரபணுக்கள் எவ்வாறு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை கட்டுப்படுத்துவதற்கு இந்த மூலக்கூறே பொறுப்பாகிறது.

இந்த NF-kB அழற்சி, நோயை ஏற்படுத்தக்கூடிய மற்றும் நோய்க்கு காரணமான சைட்டோகின்கள் என்னும் புரதங்களை உருவாக்கி வெளியிடுகின்றன. இதனால் புற்றுநோயிலிருந்து மன நலப் பிரச்னைகள் வரை அனைத்துவிதமான நோய்களும் வரக்கூடிய ஆபத்தான நிலையில் இருக்கிறோம்.

மனித இனத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இந்த SNS நரம்பு மண்டலம் மனிதனுக்கு ஒருவகையில் நன்மையையே செய்தது. ‘சண்டையிடு அல்லது தப்பி ஓடு’ என்று எச்சரிக்கை செய்து காப்பாற்றி வந்திருக்கிறது. ஆனால், இன்றைய பதற்றமான சூழலில், SNS மண்டலம் அடிக்கடி பதற்றத்துக்குள்ளாகி மரபணு மூலக்கூறுகளையே மாற்றிவிடுகிறது. இதனால்தான் சைட்டோகீன்கள் புரத உற்பத்தி அதிகரிக்கிறது.

யோகா மற்றும் தியானம் மேற்கொள்ளும்போது இந்த சைட்டோகீன் புரத உற்பத்தி குறைகிறது என்பதையே ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளார்கள். The Journal of Frontiers in Immunology இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் பொருத்தமான ஆய்வுதான்!

- என். ஹரிஹரன்