Break The Fast



நினைவில் கொள்ளுங்கள்

‘‘உலகமே இன்று பணம் சம்பாதிக்க ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகையால், நம் உடல் நலத்தை பேணிக் காக்க மறக்கிறோம், குறிப்பாக வேலை மற்றும்  நேரமின்மை, காரணமாக காலை உணவை தவிர்க்கும் போக்கு அதிகமாக இருக்கிறது. இப்படி காலை உணவைத் தவிர்க்கவே கூடாது’’ என்கிறார் மூத்த  உணவியல் நிபுணரான தாரிணி கிருஷ்ணன். காலை உணவு ஏன் அவசியம் என்பதையும், அதனைத் தவிர்த்தால் என்ன பிரச்னைகள் வரும் என்பதையும்  தொடர்ந்து  விளக்குகிறார்.

மூன்றில் ஒரு பங்கு சத்து


முதல் நாள் இரவு 8 மணிக்கு சராசரியாக சாப்பிடுவதாகக் கணக்கு வைத்துக் கொள்வோம். அடுத்த நாள் காலையில் 8 மணிக்கு காலை உணவு சாப்பிடுவதாகவும்  வைத்துக் கொள்வோம். இதற்கு இடைப்பட்ட 12 மணி நேரம் நாம் எதுவும் சாப்பிடாத விரத நிலையையே(Fast) கடைபிடிக்கிறோம். இரவு நேரத்தில்  உண்ணாமல் உறங்கினாலும் நமது உடல் உறுப்புகள் தனது வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறது. இந்த Fasting-கை Break பண்ணுவதாலேயே  பிரேக் ஃபாஸ்ட் என்கிறோம். பசித்த பிறகு உண்ணுவது நல்லது.

சிலர் காலையில் 8 மணிக்கும், மதியம் 12 மணிக்கும், இரவு 7 அல்லது 8 மணிக்கும் உணவு அருந்துவர். இது போல் பசிக்காமல் சீக்கிரம் சாப்பிடுவது தவறு  இல்லை. ஆனால், நேரம் கடந்து தாமதமாக உண்ணும்போது அல்லது உணவை தவிர்க்கும்போது சில நேரங்களில் அல்ஸர் போன்ற நோய்களுக்கு ஆளாகிறோம்  என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நன்கு பசித்து புசி என்பார்கள். அதுபோன்று நன்கு பசி எடுக்கும்போது காலை உணவு எடுத்துக்கொள்வது உடல்  ஆரோக்கியத்திற்கு நல்லது. மட்டும் அல்லாமல் மூன்றில் ஒரு பங்கு ஊட்டச்சத்தும் கிடைக்கிறது.

இட்லிக்கு கிடைத்த பெருமை

நமது பாரம்பரிய உணவான இட்லி, தோசை, பொங்கல் உணவுகளில் அதிக சத்துகள் உள்ளது. ஜெனிவாவில் உள்ள Food and agriculture  organization உலகில் உள்ள அனைவருக்கும் ெபாதுவான சிறந்த காலை உணவு எது என்று உலகத்தில் உள்ள அனைத்து காலை உணவுகளையும்  பட்டியலிட்டது. அதில் சிறியவர்கள், பெரியவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள், ஆரோக்கியமானவர்கள் என அனைவரும் உண்ணக்கூடிய சிறந்த காலை உணவாக  இட்லியை தேர்வு செய்தது. கடந்த ஜூலை 2016-ஆம் ஆண்டு UNESCO இதற்கான அங்கீகாரத்தையும் இட்லிக்கு வழங்கியது. எனவே, காலை உணவுக்கு சிறந்த  சாய்ஸ் இட்லிதான்.

இன்னும் சிறந்த உணவுகள்

இட்லியிலும், தோசையிலும் அரிசி, உளுத்தம்பருப்பு சேர்க்கப்படுகிறது. இவை இரண்டும் சேர்க்கும்போது முழுமையான புரோட்டீன் சத்து உடலுக்குக் கிடைக்கிறது.  பொங்கலில் அரிசி, சிறு பருப்பு சேர்க்கப்படுகிறது. பொதுவாக பருப்பு வகைகள் நம் உடலுக்கு அதிக புரோட்டீனைத் தருகிறது. அது காலையில் எடுத்துக் ெகாள்ளும்போது உடலுக்கு ஏற்ற சத்தை கொடுக்கிறது. இதேபோல் பழைய சோறு இரவு முழுவதும் புளிக்க வைக்க வேண்டும். பிறகு காலையில் தயிரோ  மோரோ கலந்து ஊற வைத்தால் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகிறது.

அதை உணவாக எடுத்துக்கொள்ளும்போது நல்ல கிருமிகள் நம் உடலுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. ரவையில் புரதச்சத்தும் கிடையாது. பருப்பும்  பயன்படுத்துவதில்லை. எனவேதான் ரவைக்கு காம்பினேசனாக கொத்சு என்கிற உணவு வகை தயாரிக்கப்படுகிறது. இதில் கத்திரிக்காய் அல்லது பப்பாளி போன்ற  காய்கறிகள் சேர்க்கப்பட்டு அதில் பருப்பு சேர்க்கப்படுவதால் அதிக புரோட்டீன் மட்டும் இன்றி நார்ச்சத்து, மினரல்ஸ் கலந்து இருப்பதால் இதில் B complex  கிடைக்கிறது. அதிலும் எலுமிச்சைச்சாறு கலந்தால் வைட்டமின் சி ஆகியவையும் நம் உடல் பெறுகிறது.

தேங்காய் சட்னியில் பொட்டாசியம், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு சத்து இருக்கிறது. உடைச்ச கடலையில் புரதச்சத்து இருக்கிறது. வறுத்து சட்னியாக  சமைக்கும்போது உடனடி ஜீரணம் உண்பவர்களுக்கு கிடைக்கிறது. கேப்பங்கூழில் நிறைய நன்மைகள் உள்ளது. கேப்பங்கூழில் நார்சத்து, இரும்பு, கால்சியம்,  புரதசத்து அடங்கியிருக்கிறது. சிறு குழந்தைகளாக இருந்தால் புரோட்டீன், கால்சியம் மற்றும் அயன் சத்தும் கிடைக்கிறது. பெரியவர்களாக இருந்தால் நார்சத்து  முக்கியமாக தேவை, அதுவும் இந்த உணவு மலச்சிக்கலுக்கு நிவாரணமாகும். இதில் இன்னும் ஒரு நன்மை இருக்கிறது.

அது, கேப்பங்கூழை வெகவைத்து இரவு புளிக்க வைத்து உண்ணும்போதும், தயிர் ஊற்றி நன்கு ஊறவைத்து காலையில் உண்ணுவதால் உடலில் நல்ல கிருமிகள்  உருவாகி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. கஞ்சியும் அதேபோன்று இரவு முழுவதும் புளிக்க வைத்து தயிர் ஊற்றி ஊறவைத்து காலையில் உணவாக  உட்கொள்ளும்போது அதில் நல்ல கிருமிகள் உருவாகி நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கிறது. புட்டு பலவகையாக செய்து உண்ணலாம். புட்டு,  கேழ்வரகு புட்டு உணவாக எடுத்துக்கொள்ளும்போது அதனுடன் அதாவது ‘கடலைகறி’ அதாவது கொண்டைக்கடலை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு நல்ல  புரோட்டீன் கிடைக்கும்.

எண்ணெய் உணவுகள் எவ்வளவு?!

காலை உணவில் எண்ணெய் சேர்த்த உணவை அதிகமாக எடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக தோைச, பூரி மூன்றுக்கு மேல்  எடுத்துக்கொள்ள வேண்டாம். காலையில் எப்போதாவது பிரட் சாப்பிடலாம். ரொட்டி 80-100 கலோரி பருமன் தருகிறது. அதிலும் ஜாம், சீஸ் அல்லது நெய் போட்டு  வறுத்து சாப்பிடும்போது உடல் எடை கூடும்.

இரவு நேர பணியில் இருப்பவர்களுக்கு....

இரவுப் பணி பார்ப்பவர்கள் காலை உணவு கூட எடுத்துக்கொள்ள முடியாமல் உறங்கும் நிலையால் உடல்ரீதியாக பல விளைவுகளை சந்திக்க வேண்டி உள்ளது.  ஏனெனில், அவர்கள் சூரியன் இருக்கும்போது தூங்கிவிடுகின்றனர். நிலவு வெளிச்சத்தில் வேலை செய்கின்றனர், அவர்களுக்கு ஒரு Biological stress.  அப்படி மதியம் 2 மணிக்கு எழும்போது காலை உணவை எடுத்துக் கொள்வதை விட அவர்கள் மோர் அல்லது தயிர் சாப்பிட வேண்டும். பிறகு உடற்பயிற்சி  அல்லது ஜிம் செல்லலாம். பிறகு வந்து மதிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இரவுப் பணியின்போது பசி ஏற்பட்டால் அவர்கள் தேவைப்பட்டால் டிபன்  எடுத்துக் கொள்ளலாம். அதைவிட பழங்கள் எடுத்துக் கொள்வது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.

- அ.வின்சென்ட்