மழைக்கால குளியல்!



ஆயுர்வேதம் சொல்லும் ஆரோக்கியம்

மழைக்காலம் வந்துவிட்டது. இனி குளியல் முறையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். மழைக்காலத்தில் பிரபஞ்சத்தில் தட்ப நிலை அதிகரித்து, பூமியில் வாழும் ஜீவராசிகளுக்கு குளிர்ச்சி அதிகரிக்கிறது. இதனால் குளிர்ச்சியின் சுபாவமான வாதம் என்ற வாயு உடலில் அதிகரித்து, அது உடலில் பல்வேறு விதமான வலிக்கு வழிகோலும்.

மழை மற்றும் குளிர்காலத்தில் பொதுவாக உடல் சோர்வு, சோம்பல், பரு, மூட்டுகளில் வலி, தலைவலி, அரிப்பு போன்றவைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதேபோல் மூட்டுகளில் வலியால் ஏற்கனவே அவதியுறுபவர்கள் வலியின் தீவிரம் மேற்கொண்டு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற சூழ்நிலையில் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் சுடுதண்ணீரை பயன்படுத்தல் சாலச்சிறந்தது. குளிப்பது ஒரு வகையான உடற்பயிற்சி. உடலை குளிர்விப்பதால்தான் ‘குளித்தல்’ என்று அழைக்கப்படுகிறது. ஆக குளிப்பது ஒரு நோய் நீக்கும் மிகச்சிறந்த சிகிச்சைமுறை.

மேலும் பசி அதிகரிக்கும். அழுக்கு நீங்கும். அதிக வியர்வை, அரிப்பு தேக உஷ்ணம் போன்றவைகளை நீக்கும். எனவே, தினமும் அனைவரும் ஸ்நானம் என்ற குளியலை மேற்கொள்ள வேண்டும். இவ்வளவு நன்மையளிக்கும் குளியலை முகவாதம், கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கண்டவர்கள். முகத்தில் நோய் உள்ளவர்கள் காதுகளில் நோய் உள்ளவர்கள், வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, தும்மல் போன்ற தொந்தரவு உடையவர்கள் மேற்கொள்ளக் கூடாது. சரி மேற்கண்டவர்கள் என்ன செய்யலாம்... வியர்வையால் அழுக்கு அதிகரித்து துர்நாற்றம் வீசுமே... சோம்பல் அதிகரிக்குமே... இதற்கும் ஆயுர்வேதம் வழி கூறுகிறது.

அது என்னவென்றால் ஈரத்துணியால் உடலை அழுத்தி துடைப்பதனால் குளிப்பதற்கு இணையான நன்மைகள் பெற முடியும். மழை மற்றும் குளிர்காலங்களில் சுடுதண்ணீரில் குளிப்பதே சாலச்சிறந்தது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. அவ்வாறு குளிக்கும்போது தலைக்கு கீழுள்ள உடல் பகுதிகளுக்கு சுடுதண்ணீரும், தலைக்கு மிக இளஞ்சூடான தண்ணீரை ஊற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளியல் என்றாலே தலைக்கு சேர்த்து நனைத்தலே ஆகும். வெறும் உடலுக்கு மட்டும் குளிப்பதினால் ஏதோ சுமாராக பலன் கிடைத்ததுபோல இருக்குமே தவிர, முழுமையான பலனை அடைய முடியாது.

எனவே தலையை நனைக்காத குளியல் தவறான குளியலுக்கு முன்னுதாரணம். அவ்வாறு மீறி தலைக்கு சுடுதண்ணீர் ஊற்றினால் அது தலைமுடிக்கு கேடு விளைவிக்கும். கண்ணுக்கும் உகந்தது அல்ல. ஆனால், இன்று பெரும்பாலானோர் தலைவலி இருக்கிறது. சைனஸ் பிரச்னை இருக்கிறது. தும்மல் இருக்கிறது என்று மிக சூடுள்ள தண்ணீரை தலைக்கு ஊற்றி குளிக்கின்றனர். இது மிகத்தவறு. இதுேபான்ற செய்கைச் செய்பவர்கள் அவர்களுடைய முடியினுடைய அடர்த்தியை நாளடைவில் சுயபரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும். ஆக சுடுதண்ணீரினால் தலைமுடி அதிகளவில் உதிரும்.

அடர்த்தி குறையும். எளிதில் முறியும் வெடிக்கும். மேலும் கண் பார்வையையும் பாதிக்கும். சரி... இதற்கு என்ன செய்யலாம்? மூக்கடைப்பு, தும்மல், காது நோய், கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள்  தொந்தரவின் தாக்கத்தால் அதிகளவில் அவதியுறும்போது குளியலைத் தவிர்க்கலாம் என்றே ஆயுர்வேதம் கூறுகிறது. இதுவே நாட்பட்ட தொந்தரவாக மாறினாலோ அல்லது இயல்பாக சுடுதண்ணீரில் குளிக்க நினைப்பவர்கள் சுடுதண்ணி கழுத்துக்கு கீழுள்ள பகுதிக்கு முதலில் ஊற்றி கடைசியில் அத்தண்ணீர் ஆறினபின்பு மிதமான சூடாக இருக்கும்போது தலைக்கு ஊற்றிக்கொள்ளலாம்.

மேற்கண்ட தொந்தரவுடையவர்கள் சில மூலிகைகளை... அதாவது வில்வ இலை, நொச்சியிலை, துளசியிலை, ஆடாதொடையிலை, தான்றிக்காய், நெல்லிக்காய், கடுக்காய், அறுகம்புல், பொடுதலை, கரிசாலை போன்ற மூலிகைகளை தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து இளஞ்சூடான பதத்தில் தலைக்கு ஊற்றிக்கொள்ளலாம். இதனால் முடியும் உதிராது. கண் பார்வையும் பாதிக்காது. எனவே சுடுதண்ணீரில் குளிக்கும்போது தலையில் முதலில் சுடுதண்ணீரை ஊற்றாமல் கடைசியில் சுடுதண்ணீர் ஆறின பின்பு தலைக்கு ஊற்றவும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்!

- விஜயகுமார்