சித்த மருத்துவத்தில் அரசுக்கு நம்பிக்கை இல்லையா?!



செய்திகள் வாசிப்பது டாக்டர்

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் சித்த மருத்துவத்தின் மீது மத்திய மாநில அரசுகளுக்கு நம்பிக்கை இல்லையா என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக இன்று உலகமே முடங்கியுள்ள நிலையில் பல்வேறு நாடுகளிலும் இதற்கு மருந்து கண்டறியும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி கொரோனாவுக்கு இதுதான் மருந்து என அதிகாரப்பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

இதனிடையே மதுரையை சேர்ந்த அரசு சித்த மருத்துவர் சுப்பிரமணி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் கொண்டு கசாய பொடி மருந்தை கண்டுபிடித்துள்ளேன்.

இந்த பவுடரை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இரு வேளை சாப்பிடுவதற்கு முன்பு குடித்து வந்தால் கொரோனா நோயிலிருந்து விடுபடலாம். இந்த மருந்தால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. இந்த மருந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் வாதம், பித்தம், கபம் ஆகியன சரிபங்கில் இருக்க செய்யும்’ என கூறியிருக்கிறார்.

இந்த சித்த மருந்தான மூலிகை பொடியை ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தி சான்றிதழ் வழங்கக்கோரி அரசு சித்த மருத்துவர் சுப்பிரமணி தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது எனக் கேள்வி எழுப்பினர். மேலும் சித்த மருந்துகளை பரிசோதிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம் என கேள்வி எழுப்பினர்.

மேலும் ஆங்கில மருத்துவ லாபி இயற்கை மருத்துவத்தை அழித்துவிடுமோ என அச்சம் ஏற்படுவதாக கவலை தெரிவித்த நீதிபதிகள், இதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

- கௌதம்