சைத்தான் மனிதர்கள்!



கடவுள் காதலைக் கொடுத்தார் சாத்தான் காமத்தைப் பருக விட்டான்...
- வஸந்த் செந்தில்

அன்றைக்கு நந்தினிக்கு இரவுப்பணி முடிய அதிக நேரமாகிவிட்டது. அலுவலக கார் சென்றுவிட்டதால் கால் டாக்ஸிக்கு புக் செய்தாள். டாக்ஸி வந்தது. பின் சீட்டில் அமர்ந்தாள். டிரைவருக்கு 40 வயது இருக்கும். ஆல்கஹால் வாசம் குப்பென்று அடித்தது. இறங்கிவிடலாமா என யோசித்தாள். அவளிருந்த சென்னைப் புறநகரில் இந்த நேரத்தில் வேறு வாகனம் கிடைப்பது கஷ்டம். மனதை மாற்றிக்கொண்டாள்.

டிரைவர் வேகமாக காரை ஓட்டினான். கார் ஒதுக்குப்புறமான சாலையில் செல்ல நந்தினிக்கு சந்தேகம் வந்தது. ‘வண்டியை நிறுத்துங்க?’ என்று கத்தினாள். இளிப்போடு, ‘கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு!’ என்று சொல்லி காரை நிறுத்தினான். நந்தினி தற்காப்புக் கலை கற்றவள். டிரைவர் பின் கதவை திறக்க முயன்றான். கதவை வேகமாகத் திறந்த நந்தினி டிரைவரின் மர்ம ஸ்தானத்தில் ஹைஹீல்ஸ் அணிந்திருந்த செருப்புக் காலால் ஓங்கி உதைவிட்டாள். அலறி கீழே விழுந்தான் அவன். மீண்டும் தாக்க முற்பட்டான். நந்தினி கைப்பையில் இருந்த பாடி ஸ்ப்ரேயை எடுத்து கண்களில் அடித்தாள். அவன் கதறினான். சத்தம் கேட்டு வந்த ரோந்து போலீஸ் அவனை அள்ளிக் கொண்டு சென்றது.

இன்றைய இளம் பெண்கள் அதிகம் எதிர்கொள்கிற முக்கிய பிரச்னை பாலியல் பலாத்காரம். ஆணாதிக்க சமூகம்தான் இதற்கு முக்கியக் காரணம். பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்பவனுக்கு செக்ஸ் வைத்துக் கொள்வதை விட, ஒரு பெண்ணை கொடுமைப்படுத்துவதுதான் முதன்மையானது. மனரீதியிலான பாதிப்புக்கு உள்ளானவர்களே இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள். கொடுமைப்படுத்தி, பெண் துடிப்பதை பார்க்க விரும்புபவர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்களில் சந்தர்ப்பம் கிடைத்தால் வன்புணர்வில் ஈடுபடுபவர்கள், நண்பர்களுடன் கூட்டாக பாலியல் பலாத்காரத்தில் இறங்குபவர்கள், தங்களின் உரிமையை, அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள வன்புணர்வில் ஈடுபடுபவர்கள் என 3 வகையினர் இருக்கிறார்கள். ஓரிடத்தில் பாலியல் பலாத்காரம் நடந்தால், காவல் துறையினர் யார் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டது என்பதை வகைகளை வைத்தே கண்டுபிடித்துவிடுவார்கள். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்கள் கடுமையான தண்டனைக்கு உரியவர்களே.

உளவியல் ரீதியிலும் இதற்கான காரணங்களையும் பார்க்க வேண்டும். ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் சமமாக பாவித்து பெற்றோர் நடத்த வேண்டும். பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். இங்கே பணக்காரர்கள் ஒருபுறம்... மறுபக்கம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுபவர்கள். இத்தகைய ஆண்கள் பெண் நாகரிகமான உடைகளை அணிந்து சென்றால் கூட பொறாமையும் எரிச்சலும் அடைவார்கள். ஓர் ஆணோடு பெண் சென்றால் பிரச்னை செய்வார்கள். பாலியல் கல்வியையும், பெண்களை சமமாக மதிக்கும் போக்கையும் அடிமட்டத்தில் இருக்கும் ஆண்களுக்கு சொல்லிக் கொடுப்பது அவசியம். பாலியல் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க பெண்கள் மேற்கொள்ள வேண்டிய சில வழிமுறைகள்...

*ஒரு கும்பல் தவறான நோக்கத்தில் நெருங்கினால், ‘தீ’ என்றோ, ‘ஃபயர்’ என்றோ கத்த வேண்டும். தீ பரவுகிறது என்றால் யாராக இருந்தாலும் துணைக்கு ஓடி வருவார்கள்.
*முன் பின் தெரியாத வாகனங்களில் ஏறக்கூடாது.
*கராத்தே, களரி போன்ற தற்காப்புக் கலைகள் கற்றுக்கொள்வது அவசியம்.
*வீட்டில் தனித்திருக்கும் போது அறிமுகமில்லாதவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது. கேட்டுக்கு வெளியே நிற்க வைத்து, பேசி அனுப்பிவிட வேண்டும்.
*ஆளரவமற்ற இடங்களில் யாராவது முகவரி விசாரித்தால் நின்று பதில் சொல்லக் கூடாது. அறிமுகம் இல்லாதவர்களுடன் பேசுவதை தவிர்க்கவும்.
*பாதுகாப்புக்காக கைப்பையில் எப்போதும் மிளகு ஸ்பிரே, பாடி ஸ்பிரே போன்றவற்றை வைத்திருக்க வேண்டும்.
*இரவுகளில் வெளியே செல்லும் போது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் செல்ல வேண்டும்.

ஆண் குழந்தையையும்
பெண் குழந்தையையும்
சமமாக பாவித்து பெற்றோர்
நடத்த வேண்டும்.
பிள்ளைகளுக்கு
பெண்களை மதிக்க கற்றுக்
கொடுக்க வேண்டும்.

(தயக்கம் களைவோம்!)

டாக்டர் டி.நாராயணரெட்டி