வலிப்பு நோய் உள்ளவர்கள் கருத்தரிக்கலாமா?



மகளிர் மட்டும்

சிக்கலான பிரசவத்தை உண்டாக்கும் விஷயங்களில் மிக முக்கியமானது வலிப்பு நோய். வலிப்பு நோயினால் கருவுக்கு பெரிய அளவில் ேசதம் ஏற்படாவிட்டாலும் சில வேளைகளில் குழந்தைக்கு உடல் ஊனமும் கர்ப்பிணி உயிருக்கு ஆபத்தும் ஏற்படலாம். வலிப்பு நோயுள்ள பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை விளக்குகிறார் மருத்துவர் நிவேதிதா.

நமது உடலை மூளையும் நரம்பு மண்டலமும்தான் இயக்குகின்றன. மூளையில் சிறுமூளை, பெருமூளை, மூளைத்தண்டு ஆகிய பாகங்கள் உள்ளன. பெருமூளை நடுவில் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இடது பக்க உறுப்புகளை வலப்பக்க பெருமூளையும் வலப்பக்க உறுப்புகளை இடப்பக்க பெருமூளையும் இயக்குகின்றன.

நடுமூளையின் நரம்புகள் தண்டுவடத்தின் வழியாக உடல் தசைகளுடன் தொடர்பு கொண்டிருக்கும். நரம்புகள் மூலமாக உடலின் பல்வேறு பாகங்களில் இருந்து செய்திகள் கடத்தப்பட்டு அவற்றுக்கு ஏற்ப உடல் தசைகள் செயல்படுகின்றன. இந்த இயல்புக்கு மாறாக ஒருவருக்கு கட்டுப்பாடின்றி தசைகள் தாமாகவே இயங்கித்  துடிப்பதுதான் வலிப்புஎனப்படுகிறது.  

வலிப்பில் பல வகைகள்

உடம்பு முழுவதும் விறைத்து பல தசைகள் எந்தவித பாகுபாடும் இல்லாமல் உடம்பின் பல பாகங்களில் துடிக்கின்ற நிலை ஒரு வகை. உடல் முழுவதும் பரவுகிற இதை பெருவலிப்பு, நினைவு தவறும் நிலையை மட்டும் உண்டாக்கும் வகையை சிறுவலிப்பு,  ஒரு கையோ, காலோ அல்லது குறிப்பிட்ட பகுதி மட்டுமோ துடிப்பது பகுதி வலிப்பு அல்லது குவிந்த வலிப்பு எனப்பல வகைகள் உள்ளன.

எப்போது? எப்படி?

வலிப்பு சிலருக்கு ஆண்டுக்கு ஒருமுறை, மாதத்துக்கு ஒருமுறை வரலாம். சிலருக்கு தினமும் வருவதும் ஒரே நாளில் பலமுறை வருவதும் உண்டு. அடிக்கடி வலிப்பு வருபவரின் மூளை நரம்புகள் பாதிக்கப்படும். சில நேரம் உயிருக்கே ஆபத்தாகலாம். சிறுவலிப்பு நோயின்போது நோயாளி திடீரென சுய நினைவின்றி ஒரே இடத்தில் முறைத்துக்கொண்டு நிற்பார். மீண்டும் சுயநினைவுக்குத் திரும்புவார். ஆனால், கீழே விழுந்து புரளமாட்டார். பகுதி வலிப்பின்போது வாய் ஒரு பக்கமாக கோணிக் கொள்ளும். ஒரு கை, ஒரு கால், கட்டை விரல் ஆகியவை மட்டும் தொடர்ந்து துடிக்கும். கண்களில் ஏதோ ஒரு தோற்றம் தெரிவதாகவும், துர்நாற்றம் வருவதாகவும், பயமாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர் கூறுவார்.

பொதுவான அறிகுறிகள்

கண்களில் பூச்சி நகர்வது போன்ற உணர்வு, காதுகளில் ஒலி கேட்பது, கண்கள் திரை போட்டது போன்ற நிலை, தலைவலி, வாந்தி, குமட்டல் ஆகியவை.

பரிசோதனைகள்

குழந்தையாக இருக்கும்போது ஏற்பட்ட பாதிப்புகள், குடும்பத்தில் வேறு எவருக்கேனும் உள்ள பாதிப்பு, போதை மருந்தை உட்கொள்ளும் பழக்கம், குடல் புழுக்கள், அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கல்லீரல் நோய்கள், இதய பாதிப்பு போன்ற நோய்களின் போதும் வலிப்பு வர வாய்ப்பிருப்பதால் எந்த காரணத்தால் வலிப்பு வந்தது என்பதை ஈசிஜி, எக்ஸ்ரே எடுத்துப் பரிசோதித்துக் கொள்ளலாம். தலைவலி, வாந்தி மற்றும் குமட்டல் இருந்தால் மூளைக்கட்டியால் வலிப்பு வருவதை உணர்ந்து கொள்ளலாம்.

வலிப்பு வரக்கூடிய பெண்கள் கர்ப்பம் தரித்தபிறகு இதன் பாதிப்பு தீவிரமாவதை உணர்வார்கள். மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பல நேரங்களில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை என்றாலும் சிலருக்கு பிறவிக் குறையுள்ள குழந்தை, குறை பிரசவம், எடை குறைந்த குழந்தை, மூளைக் கோளாறுடைய குழந்தைஆகியவை பிறக்கக்கூடும்.

கர்ப்பக் காலத்தின் பிற்பகுதியில் மருந்து மாத்திரைகளை நிறுத்திவிடும் போது வலிப்பு மீண்டும் வந்தால் பிள்ளைப்பேற்றினால் வரும் வலிப்பா அல்லது வேறுவிதமான வலிப்பா என வேறுபடுத்தி அறிய முடியாமல் போகலாம்.வலிப்பு வரும் பெண்கள் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது.  மருத்துவரை அணுகி முறையான கண்காணிப்பு மற்றும் சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.வலிப்பு வரும் பெண்கள் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது.