அதன்பிறகு புனிதவதி மதுரை சென்று சிவன் - பார்வதியிடம், ‘ஆன்மிகத் தொண்டு புரிய எனக்கு பேய் வடிவம் வேண்டும்’ என்று கேட்டுப் பெற்றதாக நம்பிக்கை. சிவன் உறையும் மயானத்திலேயே தங்கி, பசி, உறக்கம் எல்லாம் மறந்து எலும்பும் தோலுமாகி அவர் வாழ்ந்ததாகச் சொல்வார்கள். இன்றும் காரைக்கால் அம்மை யாருக்கு காரைக்காலில் கோயில் உள்ளது. அங்கு அவருக்கு ஆனி மாதத்தில் ‘மாங்கனித் திருவிழா’ எடுக்கப்படுகிறது. அம்மையாரை அழகு ததும்பும் முந்தைய வடிவத்தில் சிலர் வடித்திருந்தாலும், பேய் வடிவக் கோலமே அவர் பக்தி யின் ஆழத்தை உணர்த்தக் கூடியதாக இருக்கிறது. இங்கே வைக்கப்பட்டுள்ள சிற்பம் அப்படிப்பட்ட பேய் வடிவச் சிற்பமே! பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தச் சிற்பம் நாகப்பட்டினம் அருகே திருஇந்தளூர் எனும் கிராமத்தில் புதைபொருளாகக் கண்டெடுக்கப்பட்டது. அக் காலத்தில் உலக வாழ்வைத் துறக்க விரும்பிய ஆண் துறவிகள் ‘பெண் களை ஒதுக்கினாலே போதும்’ என்றிருந்தது. ஆனால், பெண் துறவிகள் தங்கள் இளமையையும் அழகையுமே வெறுத்து ஒதுக்க வேண்டியிருந்தது. ஔவையாரின் முதிய கோலத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அந்த வகையில் பரட்டைத் தலையும், மெலிந்த தோலும், உணவு மறந்ததால் மார்புக்கூடு தெரிய ஒட்டிய வயிறுமாக இருக்கும் இந்தச் சிலை, பெண்களின் துறவு நிலையைத் தத்துவார்த்தமாக விளக்குகிறது’’ என்றார் அவர்.
- டி.ரஞ்சித்
படம்: ஆர்.சந்திரசேகர்