முதுமை எனும் துயரக் காற்று
‘இந்தியாவில் வயதில் மூத்த பெண்கள் பாகுபாட்டோடு நடத்தப்படுதல், முதுமையால் புறக்கணிக்கப்படுதல், தவறாக நடத்தப்படுதல் என்று பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். அதற்குக் காரணம், அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் குறித்து அவர்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வு இல்லாததே!’ என்கிறது சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு.
முதியோர் நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்துக்காக செயல்படும் அமைப்பு ‘ஏஜ்வெல் ரிசர்ச் அண்ட் அட்வகஸி சென்டர்.’ இந்த அமைப்பு, ‘இந்தியாவில் வயது முதிர்ந்த பெண்கள் மத்தியில் நிலவும் பாலினப் பாகுபாடு’ என்ற ஆய்வை சமீபத்தில் நடத்தியது. இந்தியா வில் 26 மாநிலங்களில், 2 யூனியன் பிரதேசங்களில், 330 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 50,000 மூதாட்டிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அவர்களில் 27,500 பேர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள்... 22,500 பேர் நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள்.
டெல்லியில், குடும்பங்களில் வயது முதிர்ந்த பெண்களுக்கு நடக்கும் உரிமை மீறல் தொடர்பாக ஒரு தனிப்பட்ட ஆய்வு நடத்தப்பட்டது. அதில், மேல் தட்டு குடும்பங்களை விட நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர மக்கள் வாழும் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களில் இந்த உரிமை மீறல் அதிகம் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக மேற்கொள்ளப்பட்ட 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரம், டெல்லியில் மட்டும் சுமார் ஆறரை லட்சம் மூதாட்டிகள் இருப்பதாகச் சொல்கிறது. அதாவது, டெல்லியில் வசிக்கும் மூத்த குடிமக்களில் சுமார் 51 சதவிகிதம் பேர். டெல்லியில் 11 மாவட்டங்களில், டிசம்பர் 2014ல் இருந்து ஜனவரி 2015 வரை, 5,000 முதியோரிடம் இந்த ஆய்வு நடந்தது. அவர்களில் 2,750 பேர் சேரிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்... 2,250 பேர் நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள்.
தேசிய அளவில் நடந்த ஆய்வின் படி, பதிலளித்த முதியோரில், 89.38 சதவிகிதம் பேர், அவர்களின் குடும்பங்களுக்குள்ளேயே முதுமை அடைந்த பெண்களுக்கான அந்தஸ்து, சக குடும்ப ஆண்களைவிட நிச்சயம் குறைவாகத்தான் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். காரணம், பாலினப் பாகுபாடு. பதிலளித்த முதியோரில் மொத்தம் 84.07 சதவிகிதம் பேர், பாலினப் பாகுபாடு காரணமாக, இந்தியக் குடும்பங்களில், வயதில் மூத்த பெண்களுக்கு அதிகாரம் மறுக்கப்படுவதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். பதிலளித்தவர்களில் 11.46 சதவிகிதம் பேர் மட்டுமே பாலினப் பாகுபாடெல்லாம் ஒரு விஷயமே அல்ல, குடும்பங்களுக்குள் அதிகாரம் என்பது ஒன்றுக்கொன்று மாறுபடும் என்று சொல்லியிருக்கிறார்கள். வயதான காலத்தில் கூட, பாலினப் பாகுபாடு காரணமாக ஒதுக்கப்படுவதையும் தனிமைப்படுத்தப்படுவதையும் முதிய பெண்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று 50.59 சதவிகிதம் பெண்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.
52.84 சதவிகித முதியோரும் 48.43 சதவிகித மூதாட்டிகளும் முதிய பெண்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கும் ஒதுக்கப்படுவதற்கும் பாலினப் பாகுபாடு ஒரு முக்கிய காரணம் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். கிராமப்புறங்களில் பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (55.24 சதவிகிதம்) மூதாட்டிகள் குடும்பத்தில் ஒதுக்கப்படுவதற்கும் பாலினப் பாகுபாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். 22,549 மூதாட்டிகளையும் சேர்த்து 43,063 முதியோர், குடும்பத் தலைவரோடு ஒப்பிடும் போது, அவரை விட தங்கள் உடல் நலத்தில் யாரும் அதிகம் அக்கறை காட்டுவதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். டெல்லியில் பதிலளித்த மூத்தவர்களில் 86.13 சதவிகிதம் முதியோரின் கருத்துப்படி பாலினப் பாகுபாடு காரணமாக முதிய பெண்களின் உடல் ஆரோக்கியம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.
11.12 சதவிகிதம் முதியோர் மட்டுமே இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அவர்களுடைய மோசமான உடல்நிலைக்கும் முதியோரின் பாலினத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அவர்கள் கருத்து. ‘ஏஜ்வெல்’ தன்னார்வத் தொண்டர்கள் நடத்திய இந்த ஆய்வில், பதிலளித்த 80.49 சதவிகித முதியோரின் கருத்துப்படி, முதிய பெண்களின் நிதி நிலையும் பலவீனமாகவே இருக்கிறது. ‘முதிய பெண்கள் நிதி நிலையில் பலவீனமாக இல்லை. அவர்களுடைய பொருளாதார பலவீனத்துக்கும் பாலினப் பாகுபாடுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று 17.36 சதவிகித முதியோர் மட்டுமே கருத்து சொல்லியிருக்கிறார்கள்.
‘ஏஜ்வெல்’ நிறுவனர் ஹிமான்ஷு ரத் அகர்வால் சொல்கிறார்... ‘‘ஆண்-பெண் வரிசையில் ஆய்வு புள்ளிவிவரங்களை ஆராய்ந்த போது, 79.79 சதவிகித முதியோரும் 81.17 சதவிகித மூதாட்டிகளும் முதியப் பெண்களின் நிதி நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் பெண்கள், தங்களுடைய சுய வருமானத்தை ஈட்டுவதற்கு அவர்களுக்கு மிகக் குறைவான வாய்ப்புகளே இருக்கின்றனவாம்.’’
தொகுப்பு: மேகலா