அலோபீசியாவுக்கு புல் ஸ்டாப்



- பி. கமலா தவநிதி

எல்லா பெண்களும் தங்கள் வாழ்நாளில் அன்றாடம் தலைமுடி பிரச்சனைக்காக கவலை பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். மகள், பேத்தி ஆகியோரிடம் தங்கள் பழைய புகைப்படங்களை காட்டி "அப்போ எனக்கு எவ்ளோ முடி இருந்தது தெரியுமா? கையினால பிடிக்க முடியாது, கொண்டையை அவுத்து விட்டா இடுப்பு தெரியாது" என்றெல்லாம் சொல்லிக் கொள்வார்கள். தற்போதுள்ள பெண்களுக்கு இதெல்லாம் ஒரு கனவாகி விட்டது. 

பெண்களுக்கு பொதுவாகவே ஆண்களை போல் வழுக்கை விழுவதில்லை. பெண்களுக்கு ஏற்படுவதெல்லாம் முடி வலுவிழந்து அடர்த்தி குறைதல் தான். ஆனால் லட்சத்தில் சில பெண்களுக்கு வழுக்கை விழுவதும் உண்டு.  அலோபீசியா என்பது ஆட்டோ இம்மியூன் நோய்.  இது குறிப்பாக மயிர்க்கால்களைத்தான் பாதிக்கும். வழுக்கை, முடியின் அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படும். இதற்கான தீர்வுகளை தருகிறார் அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.

வயது முதிர்ச்சியின் காரணமாக இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அது இயல்பானதுதான். இளம் வயது பெண்களுக்கும் இந்தப் பிரச்சனை வர காரணம் பரம்பரையாகவும் இருக்கலாம் அல்லது அதிகப்படியான பருவ நிலை மாற்றம், ஒழுங்கு முறையற்ற தலை முடி பராமரிப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, கடுமையான நோய் தாக்கம், மருந்துகளினால் ஏற்படும் அலர்ஜி போன்றவையாலும் முடி உதிர்வு ஏற்படுகிறது. தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கும் முடி உதிர்வு பிரச்சனை இருக்கும். சில தவறான உணவு பழக்கங்களாலும் ஏற்படக்கூடும்.

நாம் உண்ணும் உணவில் அதிகப் படியான அசிட்டிக் தன்மை இருந்தால் முடி உதிர ஆரம்பிக்கும்.  சரியான டயட்டை பின்பற்ற வேண்டும். துரித உணவுகள், மது, கார்போனேடட் குளிர் பானங்கள் போன்ற உணவுகள் அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும். தலைமுடியை பொறுத்தவரை நடுவில் இருந்தோ அல்லது இடது அல்லது வலது பக்கத்தில் இருந்தோ தான் வளர ஆரம்பிக்கும் அல்லது கொட்டவும் ஆரம்பிக்கும்.  கார்ப்பரேட் கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு தற்போது அதிகம் இந்தப் பிரச்சனை உள்ளது. 

ஏனெனில் பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே வேலை செய்வதை தவிர வேறு உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பதும் முடிகொட்டுவதற்கு காரணமாகிறது. நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்கு ஏற்றாற்போல் அதன் கலோரிகளை கரைப்பதற்கான வேலையையும் தவறாமல் செய்ய வேண்டும். தினமும் ஏதேனும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக்  கொள்வது அவசியம். நம் உடலில் தேங்கும் தேவையற்ற கழிவுகளால் முதலில் பாதிப்பது நம் சருமமும், தலைமுடியும்தான் என்பதை மறந்திடக்கூடாது.

தேங்கும் கழிவுகளால் தலையில் அரிப்பு ஏற்பட்டு பின் செதில் செதிலாக பொடுகு உருவாகும். அதன் தொடர்ச்சியாக முடி உதிர ஆரம்பிக்கும். வெங்காயத்தை அரிந்து வைத்தவுடனே பயன்படுத்தி விட வேண்டும். நறுக்கிய வெங்காயத்தை வெகு நேரம் கழித்து சாப்பிட்டால் அது வயிற்றுக்குள் அமிலத்தன்மையை உருவாக்கும். அது ஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும்.

நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் எளிதில் ஜீரணமாகக்கூடியதாக சாப்பிட வேண்டும்.  நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் அதாவது வெள்ளை பூசணிக்காய், சுரைக்காய், வாழைத்தண்டு போன்றவற்றை நிறைய உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கிழங்குவகைகள் சாப்பிடும்போது நிச்சயம் கலோரிகளை கரைப்பதற்கு உடல் பயிற்சி அவசியம். தினமும் நடைப்பயிற்சி செய்வதையோ, யோகா பயிற்சி செய்வதையோ பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். கண்ட நேரத்தில் கண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

வாரம் இரண்டு முறை இரண்டு டீஸ்பூன் ஓமம், 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆறியவுடன் அந்த ஓம தண்ணீரை குடித்து வரவேண்டும். அதேபோல் 200 மில்லி தண்ணீருடன் இரண்டு டீஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து அதை பருகி வரலாம். அடிக்கடி எலுமிச்சை சாறு, தர்பூசணி சாறு, சாத்துக்குடி சாறு எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. சாத்துக்குடியின் சாற்றை வடித்து குடிப்பதால் நார்ச்சத்து கிடைக்காமல் போய்விடுகிறது. அதனால் வடிக்காமல் குடிக்க வேண்டும்.

கீரை வகைகளை அதிக நேரம் வேக வைத்தால் அதன் சத்து குறைந்து விடும். குறைவதோடு மட்டுமில்லாமல் அதிக நேரம் கொதிக்க விட்டு சாப்பிடுவதால் அதுவும் அமிலத்தை உருவாக்கும் என்பதால் சமையலில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தலைக்கு எண்ணெய் தடவும் பழக்கமே இல்லாமல் போய் விட்டது. தினமும் தலைக்கு குளிப்பதெல்லாம் மிகவும் தவறான ஒன்று. தினமும் தலைக்கு குளித்து எண்ணெய் தடவாமல் இருக்கும்போது முதலில் முடி நிறைய இருப்பது போல் தோன்றும், நாளடைவில் தலையில் அரிப்பு உண்டாகி, பொடுகு தொல்லை ஏற்பட்டு தலைமுடி முழுவதும் கொட்டிப்போகும்.

தலைமுடி உதிர்வை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும். ஆரம்பகால முடியுதிர்வை தடுக்க கரிசலாங்கண்ணி கீரை ஒரு கப் எடுத்து தண்ணீர் விடாமல் நன்கு அரைத்து கொள்ள வேண்டும். இரண்டு கப் தேங்காய் எண்ணெயில் அதன் விழுதை போட்டு காய்ச்ச வேண்டும். அந்த தைலத்தை நன்கு ஆறவிட்டு வாரம் இருமுறை தலைக்கு அந்த தைலம் கொண்டு நன்கு மசாஜ் செய்து நல்ல சீப்பு பயன்படுத்தி நன்கு சீவ வேண்டும். தலைக்கு குளிக்க சீயக்காய் 100 கிராம், பயத்தம் பருப்பு கால் கிலோ, பூந்திக்கொட்டை 100 கிராம், பூலாங்கிழங்கு 100 கிராம், வெந்தயம் 200 கிராம் இவற்றையெல்லாம் நிழலில் நன்கு உலர்த்தி அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பவுடரை கொண்டு தலையை அலசி வந்தால் வலுவிழந்த முடிகள் கொட்டி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். 

முன் நெற்றியில் சொட்டையோ அல்லது முடி அதிகப்படியாக கொட்டியிருந்தால் அதிமதுரம் தேவையான அளவு வாங்கி பாலில் ஊறவைத்து அரைத்து கொள்ளவேண்டும். அந்த விழுதை தலை முழுவதும் தடவி பேக் போன்று போட்டுக் கொள்ளலாம். ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்கு வெறும் வெந்தய தூள் கொண்டு அலசி வருவதே சிறந்தது. இதுபோல் தொடர்ச்சியாக செய்து வந்தால் முன் நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும். தலையில் சீப்பு கொண்டு வாறும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். குளித்த பின் கை விரல்களாலேயே தலைமுடியை சரி செய்வது தவறு.

அடிக்கடி நல்ல தரமான சீப்பு கொண்டு தலை வாறுவது என்பது தலையில் நல்ல ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவது போலாகும். நல்லெண்ணெய் 50 மில்லி, ஆலிவ் எண்ணெய் 50 மில்லி, விளக்கெண்ணெய் 50 மில்லி எடுத்துக்கொண்டு நன்கு சூடு செய்ய வேண்டும். பொறுக்க கூடிய சூட்டில் தலைமுடிக்கு மசாஜ் செய்யும்போது தலையின் முன்பகுதியில் முடி கொட்டுவது நின்றுவிடும். மரிக்கொழுந்து, ரோஜா பூ, கரிசலாங்கண்ணி கீரை, செம்பருத்தி பூ ஆகிய நான்கையும் வாங்கி, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் இந்த நான்கையும் போட்டு மூடி வைக்க வேண்டும். 

அரைமணிநேரத்திற்கு பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி அத்துடன் வெந்தய தூளை சேர்த்து தலையை அலசி வரலாம். இது கூந்தலுக்கு நல்ல கண்டிஷனர் போன்று செயல்படும். நன்கு கொதிக்கும் தண்ணீரில் டிப் டீ போட்டு எடுத்து அந்த சக்கையை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.  அந்த தூளுடன் எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும். இந்த கலவையை தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி பட்டு போல் ஆகிவிடும். செம்பருத்தி இலை மற்றும் வெந்தய கீரை ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து அத்துடன் இரண்டு பூந்திக்கொட்டையை சேர்க்க வேண்டும்.

இந்த மூன்றையும் நன்கு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். இந்த கலவையை வடிகட்டி தலை முழுவதும் தடவி தலை வாற வேண்டும். ஒருமணி நேரத்திற்கு பிறகு தலையை அலசி விட வேண்டும். முடி உதிர்வுக்கு உடனடி தீர்வாக இது செயல்படும். மேலும் முடி கொட்டிய இடத்தில் முடியின் வளர்ச்சியை தூண்டும். சின்ன வெங்காயம் ஒன்றோ இரண்டோ எடுத்து அதன் நுனியில் மட்டும் வெட்டி, தலையில் முடி கொட்டிய இடத்தில் எல்லாம் தேய்க்க வேண்டும். உடனடியாக ஏதேனும் ஒரு எண்ணெய்யை தலையில் தடவ வேண்டும்.

பத்து நிமிடம் கழித்து வெந்தய தூள் அல்லது மைல்டு ஷாம்பு கொண்டு தலையை அலசி வரும்போது சிலருக்கு தலையில் ஏற்படும் புழு வெட்டு, அலர்ஜி போன்றவை சரியாகும். அதேபோல் கொட்டை நீக்கிய வேப்பம் பழத்தை அரைத்து தலையில் பேக் போன்று போட்டு பத்து நிமிடம் கழித்து தலைக்கு குளித்தும் வரலாம்.