மருந்தாகும் காலிஃப்ளவர்



காலிஃப்ளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன. தினமும் 90 கிராம் அளவுக்கு காலிஃப்ளவரை சாப்பிடும்போது  வைட்டமின் சி சத்து கிடைக்கிறது. காலிஃப்ளவரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு உன்னதமான மருந்தாகிறது. புற்றுநோய்  உருவாவதை தடுக்கிறது. நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் இல்லாது செய்கிறது. காலிஃப்ளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை,  முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. மூட்டுவலியை குறைப்பதில் காலிஃப்ளவர் முக்கிய பங்கு வகிக்கிறது.
மெக்னீசியம், பொட்டாசியம்,  கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இதயத்துக்கு பலம் கொடுக்கிறது.செரிமான கோளாறுகளை  சரிசெய்கிறது. இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் பல்வேறு நன்மைகள் விளையும். காலிஃப்ளவரை பயன்படுத்தி கீழ்வாதம்,  முடக்குவாதத்தால் ஏற்படும் வலிக்கான மருந்து தயாரிக்கலாம்.

*ஒரு ஸ்பூன் காலிஃப்ளவர் பசை, சிறிது பூண்டு, மிளகு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து குடித்தால் மூட்டுவலி, வாத  ஜுரம், வீக்கம் சரியாகும். உடல் வலியும் குறையும்.

*காலிஃப்ளவர் இலைகளை பயன்படுத்தி அடிபட்ட வீக்கம், மூட்டுவலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். விளக்கெண்ணெயுடன்  காலிஃப்ளவர் இலை பசையை சேர்த்து நன்றாக வதக்கி பத்தாக போட்டு துணிகட்டி வைத்தால் வலி, வீக்கம் சரியாகும்.

*காலிஃப்ளவரை பயன்படுத்தி சிறுநீரகம், இதயத்தை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.ஒரு ஸ்பூன் காலிஃப்ளவர் பூ பசை, அரை ஸ்பூன்  சீரகம், சிறிது மிளகுப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடிக்கவும். இது இதயத்துக்கு பலம்  கொடுக்கும் ஊட்டச்சத்து.  எலும்பு பலவீனம் அடையாமல் செய்கிறது. அடிபட்ட இடத்தில் ரத்தம் சேர்ந்து வீக்கம், ரத்தக்கசிவு இருந்தால்  அவை சரியாகும். சிறுநீர் பெருக்கியாக விளங்குவதுடன் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது.

*காலிஃப்ளவரை பயன்படுத்தி புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் காலிஃப்ளவர் பசை,  கால் ஸ்பூன் மஞ்சள் பொடி, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி 50 முதல் 100 மில்லி  அளவுக்குத் தினமும் புற்றுநோயாளிகள் எடுத்துக்கொள்ளும்போது புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும்.

- கவிதா சரவணன், திருச்சி.