தோலில் ஆங்காங்கே கருமை படர்கிறதா?



பாவாடை  அணியும்பகுதி, கழுத்தின் பின்பகுதி, அக்குள், பிரேசியர் லைன் கருமையை எப்படி போக்குவது, வராமல் எப்படி தடுப்பது என  சில யோசனைகள்...

இடுப்பின் கருமை

புடவையோ, சுடிதாரோ இறுக்கி கட்டுவதால் அங்கு கருமை படிகிறது. அதைப்போக்க தேங்காய் எண்ணெய்/ஆலிவ் ஆயில்/பாதாம் ஆயில்  சிறிதளவு எடுத்து கருமை படிந்த சருமத்தில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பின்னர் ஒரு எலுமிச்சையை சாறு  பிழிந்து அதனுடன் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து இடுப்பைச்சுற்றி தடவி, மசாஜ் செய்யவும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள்  உதிர்ந்து விடும். பின் 2 டீஸ்பூன் தயிருடன் 1 டீஸ்பூன் கடலை மாவு கலந்து பேக் போடவும். காய்ந்தவுடன் கழுவி விட்டு மாய்ச்சரைசர்  போடவும். இதை வாரத்தில் 3 நாட்கள் தொடர்ந்து செய்ய கருமை மறைவதைக் கண்கூடாகக் காணலாம்.

பின் கழுத்தின் கருமை

ஒரு  ஸ்பூன் தவிடு எடுத்து ஈரக்கையினால் அதைத் தொட்டு, தினமும் குளிக்கும் முன் கழுத்தின் பின்புறம் மசாஜ் கொடுக்க, இறந்த  செல்கள் நீங்கிவிடும். பிறகு பழுத்த பப்பாளியின் சதைப்பகுதி 2 டீஸ்பூன், 1 டீஸ்பூன் தேன் கலந்து ‘பேக்’ போட்டு பத்து நிமிடங்கள்   மசாஜ் செய்து கழுவவும். இதைத் தொடர்ந்து செய்தால் கருமை காணாமல் போவதுடன் சருமமும் மிருதுவாகும்.

அக்குள் பகுதியின் கருமை

அக்குள் பகுதியில் வியர்வை மற்றும் அழுக்கு சேர்ந்து கருமை படர்ந்துவிடும். இதைத் தவிர்க்க இருமுறை ஏதாவது எண்ணெய் கொண்டு  அக்குளுக்கு மசாஜ் கொடுத்து கழுவவும். மாதுளம்பழத்தின் கொட்டைகளை உலர்த்தி அதிலிருந்து 1 டீஸ்பூன் பொடி எடுத்து தண்ணீர்  சேர்த்து குழைத்து, 2 சொட்டுகள் தேங்காய் எண்ணெய் கலந்து  மசாஜ் செய்யுவம். 1 டீஸ்பூன் தேனுடன் ½ மூடி எலுமிச்சைச் சாறு கலந்து  ‘பேக்’ போடவும். காய்ந்தவுடன் கழுவவும். 15 நாட்களுக்கு ஒருமுறை பார்லரில் ‘பிளீச்’சும் செய்யலாம்.

பிரேசியர் லைன்

மிக  இறுக்கமாக  உள்ளாடை  அணிவதால் பிரேசியரின் ஸ்ட்ராப் எனப்படும் பட்டை தோள்களில் அழுந்தப் பதிந்து கருமையை  ஏற்படுத்துகிறது. இதற்கு உள்ளாடை விற்கும் கடைகளில் கிடைக்கக்கூடிய ஸ்ட்ராப் குஷனை வாங்கிப் பொருத்திக் கொள்ளலாம். குளிக்கும்  முன், ஒருநாள் விட்டு ஒருநாள் 1 டீஸ்பூன் அரிசி மாவுடன் சிறிதளவு பால் கலந்து கருமை படிந்த இடத்தில் தேய்த்துக் கழுவவும். இது  இறந்த செல்களை நீக்கும். பின்னர் பால் ஏடு அல்லது வெண்ணெய் கொண்டு கருமை படர்ந்த இடத்தில் தேய்த்து மசாஜ் கொடுக்கவும்.  நாளடைவில் கருமை மறைந்து விடும்.

- மகாலெஷ்மி சுப்ரமணியன்,காரைக்கால்.