புற்றுநோய் ஓர் உயிர்க்கொல்லியா ?



உலகம் முழுவதும் ஆண்களைவிட பெண்களே புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதனால் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்துவதற்காக freedom from cancer relief and research foundation என ஓர் தன்னார்வத் தொண்டு அமைப்பை நடத்தி வருகிறார்  புற்றுநோயியல் துறை நிபுணர் டாக்டர் அனிதா ரமேஷ். அதன் மூலம் கலைநிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.   அதிலிருந்து வரும் பணத்தைக் கொண்டு ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சையும் அளித்து வருகிறார். புற்றுநோயிலிருந்து  எவ்வாறு  பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது என்பது பற்றியும், அவ்வாறு வந்துவிட்டால் அதிலிருந்து மீண்டுவரும் வழிமுறைகள் பற்றியும்   அனிதா ரமேஷ்  விளக்குகிறார்.

‘‘இந்தியாவில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும், கர்ப்பப்பைவாய் புற்றுநோயும் பரவலாகக் காணப்படுகின்றது. புற்றுநோய்  வந்துவிட்டாலே இறப்புதான் என்று பலர் கருதுகின்றனர். ஆனால், எனது 15 ஆண்டு அனுபவத்தில் 550க்கும் அதிகமான புற்றுநோயாளிகள்  சிகிச்சைக்கு பின்பும் நல்ல நிலையில் வாழ்ந்து வருகின்றனர்’’ என்றவர், நோய் வருவதற்கான காரணங்கள் குறித்து விளக்கினார்.  ‘‘கட்டுப்பாடற்று செல்கள் பிரிந்து பரவுவதால் ஏற்படும் நோயே புற்றுநோய் ஆகும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சுகாதாரமற்ற  உடலுறவினாலும், நோய்த்தொற்றுக்களாலும், குழந்தைப் பிறப்பின்போது ஏற்படும் பிரச்னைகளாலும்  வருவதற்கான சாத்தியக்கூறுகள்  உண்டு. பெரும்பாலான புற்றுநோய்களுக்கு மரபணுக்களே காரணமாக அமைகின்றன’’ என்றவர் நோய்க்கான அறிகுறிகள் பற்றியும்,  அதனைத் தடுக்கும் விதம் பற்றியும் கூறினார்.

‘‘முதலில் ரத்தப்போக்கு அதிக அளவில் இருக்கும். பிறகு வலி ஏற்படும். அதன்பின் முற்றிய நிலையை அடையும். பெண்கள்  இந்நோயிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள தனது 25வது  வயதிலிருந்தே மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தங்களை மருத்துவ  பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். மெமோகிராம், சுயபரிசோதனை செய்வதன் மூலம் மார் பகப் புற்றுநோயை ஆரம்ப  நிலையிலேயே கண்டறியலாம். சிறு கட்டி வந்துவிட்டால்கூட மருத்துவரை அணுகி அவரது ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும்.

பயாப்சி (செல் பரிசோதனை) மூலம் ஒரு கட்டி புற்றுநோயா அல்லது சாதாரண கட்டியா என்பதை அறியலாம். கர்ப்பப்பை வாய் புற்றுநோய்  ஆரம்பநிலையில் இருந்தால் கர்ப்பப்பையை முழுவதுமாக அகற்றுவதன் மூலமும் கர்ப்பப்பையைத் தாண்டி பரவியிருந்தால் ஹீமோதெரபி,  கதிரியக்க சிகிச்சை மூலமும் குணப்படுத்தலாம். மிக முற்றிய நிலை எனில், வலியைக் குறைப்பதற்கான மருந்துகள் மட்டுமே தரப்படும்,  குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடையாது. திருமணத்திற்கு முன் கர்ப்பப்பைப் புற்றுநோய்க்கான தடுப்பூசி போட்டுக் கொள்வதன்  மூலம் 75 சதவிகிதம் நோய் வராமல் காத்துக்கொள்ளலாம்.

மாதவிடாயின்போது சுகாதாரமான பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் நோய்த் தொற்றுகளில் இருந்து காத்துக்கொள்ளலாம்’’ என்றவர்,  ஊட்டம் மிக்க உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் அதனை தடுக்கலாம் என்று விளக்கினார்.  ‘‘பெண்கள் ஏழு வண்ணங்கள் கொண்ட  காய்கறி மற்றும் பழங்களை தங்கள் உணவில் சமஅளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எடுத்துக் காட்டாக நீலநிறம்  -  கத்தரிக்காய்,  திராட்சை, புளூபெர்ரி, நாவல்பழம், ஆரஞ்சு நிறம் -  கேரட், கமலா ஆரஞ்சு, சிவப்பு நிறம் -  பீட்ரூட், மாதுளை, மஞ்சள் நிறம் -   வாழைப்பழம், பூசணிக்காய், பப்பாளி, அன்னாசி, பச்சை நிறம் -  அவரைக்காய், சுரைக்காய், கீரை வகைகள், வெள்ளை நிறம் -  முள்ளங்கி,  தேங்காய்.புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து முடித்து இரண்டு ஆண்டுகள் முடிந்தும் திரும்ப நோய் வரவில்லை எனில், அவருக்கு புற்றுநோய்  வாழ்நாளில் மீண்டும் வரவே வராது. எனவே, பெண்கள் புற்றுநோய் வராமல் காத்துக்கொள்ள இந்த வழிமுறைகளையும், தொடர் சிகிச்சை  முறைகளையும் பெற்று நோயின்றி வாழலாம்’’ என்றார்.

-கோ.மீனாட்சி