கிச்சன் டைரீஸ்



டயட் மேனியா

இந்த இதழின் டயட் மேனியாவில் தெற்கு கடற்கரை டயட் (South Beach Diet) எனும் அமெரிக்கன் டயட்டைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். பிறந்த  இடம் அமெரிக்காவாக இருந்தாலும் உலகம் முழுதும் பட்டையைக் கிளப்பும் டயட் இது. கடந்த பதினைந்து வருடங்களாக உலகப் புகழ்பெற்ற டயட்டாக  இது உருவெடுத்துள்ளது. இதை, டாக்டர் ஆர்த்தர் அகஸ்டன் மற்றும் உணவியல் நிபுணர் மேரி அல்மான் இருவரும் சேர்ந்து தொன்னூறுகளில்  வடிவமைத்தார்கள். தொடக்க காலத்தில் இதய நோய் உள்ளவர்களுக்கான டயட் என்றுதான் பரவத் தொடங்கியது.

பின்னாட்களில் இதனால் எடைக்குறைப்பும் சிறப்பாக நிகழ்வதால் வெயிட் லாஸ் டயட்டாகவும் பரிணாமம் பெற்றது. லோ ஃபேட், ஹை கார்ப் டயட்கள்  எடைக்குறைப்புக்கு வாய்ப்பு  இல்லாததாக இருப்பதை உணர்ந்த டாக்டர் அகஸ்டன் வழக்கமான கார்போஹைட்ரேட் உணவுகளைவிட  தேர்ந்தெடுக்கப்பட்ட கார்போ ஹைட்ரேட்களை டயட்டில் சேர்த்து இதை வடிவமைத்துள்ளார். இதில், முழு தானியங்கள், சில குறிப்பிட்ட பழங்கள்,  காய்கறிகள், எண்ணெய்கள், புரோட்டின்கள் ஆகியவை இந்த டயட்டில் இருக்கும்.

கிளைசெமிக் இன்டெக்ஸ் எனும் ரத்தத்தில் சர்க்கரை கலக்கும் விகிதத்தை துரிதப்படுத்தும் கார்போஹைட்ரேட்களுக்கு இதில் தடா அல்லது அளவாகப்  பயன்படுத்த வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை எவ்வளவு துரிதமாகக் கலக்கிறதோ அந்த அளவு பசியும் அதிகரிக்கும். அதனால் நாம் சாப்பிடும்  விகிதமும் அதிகரிக்கும். இதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உணவைக் குறைத்து உடலை ஃபிட்டாக வைத்திருக்கலாம் என்பதுதான் இதன் டெக்னிக்.  இந்த சவுத் பீச் டயட்டில் மூன்று நிலைகள் உள்ளன. எடைக்குறைப்பு எனும் செயல் நடைபெற உடலைத் தயாராக்குவது முதல் நிலை.

இரண்டாவது நிலையில் இலக்கை நோக்கி முன்னேறுவது நிகழும். மூன்றாவது நிலை உங்களின் உடல்வாகுக்கு ஏற்ற ஆரோக்கியமான எடையைத்  தக்கவைக்க உதவும். முதல் நிலை இரண்டு வாரங்கள் நீடிக்கும். இதில், சர்க்கரை நிறைந்த உணவுகளைக் கட்டுப்படுத்துவதன் வழியே ரத்த சர்க்கரை  விகிதத்தை சமச்சீராக வைத்திருத்தல் நிகழும். இதனால், வேகமான எடைக்குறைப்பு இருக்கும். இந்த முதல் நிலையில் மீன் போன்ற ஆரோக்கியமான  அசைவம், டோபு, முட்டை, கொழுப்பு குறைக்கப்பட்ட  சீஸ்,  நட்ஸ்,  பீன்ஸ்  உள்ளிட்ட காய்கறிகள் அறிமுகப்படுத்தப்படும்.

மூன்று வேளை உண்ண வேண்டும். ஸ்நாக்ஸும் சாப்பிடலாம். இதில், ஸ்நாக்ஸ் சாப்பிடுவது மிகவும் அவசியம். பசியே இல்லாவிட்டாலும்  நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். இல்லாவிடில் அடுத்த வேளை உணவை அதிகமாகச் சாப்பிட்டுவிடுவீர்கள் என்கிறார்கள். முதல் நிலையில் ரொட்டி,  அரிசி, உருளைக் கிழங்கு, பாஸ்தா, பேக்கரி உணவுகள், சர்க்கரைப் பொருட்கள், கேக், சாக்லெட், மிட்டாய்கள், ஐஸ்க்ரீம் போன்றவற்றுக்கு ஸ்ட்ரிக்ட்  நோ. இரண்டாவது நிலையில் முதல் நிலையில் உள்ள சில உணவுகள் அப்படியே தொடரும்.

இரண்டாவது நிலைக்கு கால எல்லை கிடையாது. டயட் இருப்பவர்கள் அவருக்கான ஐடியல் எடையை எட்டிப் பிடிக்கும் வரை இதைத் தொடர  வேண்டும். இந்த நிலையில் எடைக்குறைப்பு கொஞ்சம் மெதுவாகவே நிகழும். ஆனால், ஏற்ற இறக்கங்கள் இன்றி சீராக இருக்கும். பொதுவாக, வாரம்  இரண்டு கிலோ அல்லது மூன்று கிலோ வரை இதில் எடை குறைய வாய்ப்புள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவர் உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு  ஏற்ப இது மாறுபடும். இதில், கூடுதலாக சில கார்போஹைட்ேரட்கள் எடுப்பதால் சிலருக்கு இழந்த எடை மீண்டும் அதிகரிக்கும்.

ஆனால், கவலைப்பட வேண்டாம். மீண்டும் அது குறையத் தொடங்கிவிடும். மூன்றாவது நிலையில் எந்த உணவில் என்னென்ன சத்துகள் எவ்வளவு  விகிதத்தில் உள்ளன என்பதை டயட் இருப்பவர்களே நன்கு அறிந்திருப்பதால் கட்டுப்படுத்தப்பட்ட   எடையைப்  பராமரிக்க என்னென்ன உண்ண  வேண்டும் என்பதை அறிந்து உண்ணத் தொடங்குவார்கள். ஒருவேளை மூன்றாவது நிலையில் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கினால் மீண்டும்  ஒன்று அல்லது இரண்டாவது நிலையைப் பராமரிக்க வேண்டும்.

ஜவ்வரிசியில் கலப்படம்

ஜவ்வரிசி பளிச் நிறத்தை அடை வதற்காக டினோபால் எனப்படும் ஆப்டிக்கல் வொயிட்னர் கெமிக்கல் கலக்கப்படுகிறது. இது, புற்றுநோய் வரை  மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை ரசாயனம். இதை நாம் எளிய பரிசோதனைகளால் கண்டறிய முடியாது. சோதனைச்சாலையில்  ஆய்வு செய்துதான் கண்டறிய முடியும். வெளிரென இல்லாமல் சிறிது மஞ்சளாக இருக்கும் ஜவ்வரிசியை பயன்படுத்துவது நல்லது.

ஃபுட் சயின்ஸ்

இந்தத் தொடர் பகுதியிலேயேகூட கார்போஹைட்ரேட் என்ற  சொல்லை  அடிக்கடிப் படித்திருப்பீர்கள். அது என்ன என்பதைத்தான் இப்போது  சுருக்கமாகப் பார்க்கப்போகிறோம். தமிழில் இதை மாவுச்சத்து என்பார்கள். உணவில் உள்ள மாவுப்பொருள்தான் கார்போஹைட்ரேட். நம் உடலுக்குத்  தேவையான ஆற்றலை வழங்குவதில் சுமார் எழுபத்தைந்து சதவீதம் வரைப் பொறுப்பேற்றுக்கொள்வது இந்த மிஸ்டர் கார்போதான். வேதியல் ரீதியாக  போஸ்ட்மார்ட்டம் செய்தால் கார்போஹைட்ரேட் என்பது 2:1 என்ற விகிதத்தில் இரண்டு பங்கு ஹைட்ரஜனும் ஒரு பங்கு ஆக்சிஜனும் உள்ள கார்பன்  பொருள்தான்.

தண்ணீரிலும் இந்த விகிதம்தான் உள்ளது. ஆனால், அதில் கார்பன் மூலக்கூறுகள் லேது என்பதால் அது தண்ணீர். இதுவோ நீரில் கரையக்கூடிய  (சாச்சுரேட்) நீர்மப் பொருள். இந்த சாச்சுரேட் குணமுடைய கார்போவில் (கார்ப்ஸ், கார்போ என்பது எல்லாம் கார்போஹைட்ரேட்டின் சுருக்கம்) நான்கு  வகை உள்ளன. மோனோசாச்சுரேட் எனும் எளிய கார்போ பொருள், பாலி சாச்சுரேட் எனும் பலவிகித கார்போ, டிஸாச்சுரேட் மற்றும் ஒலிகோசாச்சுரேட்.  ஓர் ஆரோக்கியமான உடலுக்கு இந்த நான்குவகை சாச்சுரேட் அல்லது கார்போஹைட்ரேட் பொருட்களுமே தேவை.

நமது டி.என்.ஏ எனப்படும் அடிப்படை செல்கள் முதல் சருமம் வரை ஒவ்வொன்றும் அதனதன் இயல்பில் இருக்கவும் இயங்கவும்  இந்த  கார்போஹைட்ரேட் மிகவும் தேவை. இன்று பலரும் கார்போஹைட்ரேட்டே உடலுக்குத் தேவை இல்லை என்று சொல்லி வருகிறார்கள். இது மிகத்  தவறான வாதம் என்கிறார்கள் மருத்துவர்கள். காலங்காலமாய் நம் உடல் கார்போஹைட்ரேட்களை உண்டு செரித்தே பரிணாமம் அடைந்திருக்கின்றன.  திடீரென அதை நிறுத்தினால் உடல் குழம்பிப்போகும். எனவே, ஆரோக்கியமான கார்போவுக்கு ஓ போடுங்க!

எக்ஸ்பர்ட் விசிட்

உயர் ரத்த அழுத்தம் அல்லது ரத்தக் கொதிப்பு இந்தக் காலத்தில் நாற்பது வயதைத் தாண்டும் பெண்களில் பத்தில் நான்கு பேருக்கு இருக்கும்  பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. வழக்கத்தைவிட அதிகமாக தாகம் இருந்துகொண்டே இருந்தாலோ, வேகமான அல்லது தாறுமாறுமான  இதயத்துடிப்பு இருந்தாலோ, சோர்வாக உணர்ந்தாலோ தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ரத்த அழுத்தத்தைப் பரிசோதியுங்கள் என்கிறார்  இந்தியாவின் புகழ்பெற்ற உணவியல் நிபுணர் அஞ்சலி முகர்ஜி. பி.பி பிரச்சனை உள்ளவர்களுக்கு அவர் தரும் டயட் டிப்ஸ் இதோ…

சாச்சுரேட்டட் கொழுப்புகள், சோடியம் நிறைந்த உணவுகளைத் தவிர்த்துவிட்டு ஆரோக்கியமான நார்ச்சத்து, பொட்டாசியம் நிறைந்த உணவுகளை  உண்பது பி.பியைக் கட்டுப்படுத்தும். ஆயுர்வேதத்தின்படி இதய, ரத்த நாளங்களில் ஏற்படும் தோஷங்களால் உருவாகிறது. வாதம் மற்றும் பித்தத்தை  சரியாக்குவதன் மூலம் இதனை குணமாக்க முடியும். சர்பகந்தி போன்ற மூலிகைகள் பி.பியைக் குணமாக்கும். காலையில் எழுந்ததும் வெறும்  வயிற்றில் வெதுவெதுப்பான ஒரு கிளாஸ் தண்ணீருடன் நான்கு பாதாம் சாப்பிடலாம்.  காலை உணவாக இரண்டு அல்லது நான்கு இட்லிகளுடன் ஒரு  டம்ளர் கொழுப்பு குறைந்த பால், ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம்.

ஸ்நாக்ஸ் நேரத்தில் ஏதேனும் ஒரு காய்கறியில் செய்த ஜூஸ் சாப்பிடலாம். மதியம் குறைவான உப்புடன் ஒரு கப் சாதம், சாம்பார், ரசம், தயிர்,  நிறைய காய்கறிகள் சேர்ந்த பொரியல் சாப்பிடலாம். மாலை நேரத்தில் ஏதேனும் ஒரு பழம் சாப்பிடலாம். இரவில் மதியம் உண்டதில் கொஞ்சம்  குறைவாகவோ காலை உண்டதைப் போன்றோ சாப்பிடலாம். வாழைப்பழம், யோகர்ட், மீன், கருணைக் கிழங்கு, ஓட்ஸ், கீரைகள், பூண்டு ஆகியவை  உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். உப்பு, ஜங்க் ஃபுட்ஸ், ஃபாஸ்ட் ஃபுட்ஸ், ப்ராசஸ்டு ஃபுட்ஸ், கொழுப்பு நீக்கப்படாத பால், ஊறுகாய், சர்க்கரை  ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் நடப்பது மிகவும் முக்கியம்.

உணவு விதி #18

தரையில் சம்மண மிட்டு அமர்ந்து சாப் பிடுங்க. இது என்ன விதவிதமான டைனிங் டேபிள்கள் வந்துவிட்ட காலத்தில் இப்படி ஒரு கட்டாம்பெட்டித் தனமான விதி என்று நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால், காலங்காலமாய் நம் முன்னோர்கள் தரையில் சம்மணமிட்டு அமர்ந்துதான் உண்டிருக்  கிறார்கள். இந்த நிலையில் அமரும்போது நமது அடிவயிற்றுப் பகுதி சிறப்பான நிலையில் இருக்கும். இதனால், உண்ணும் உணவு நன்றாகச்  செரிமானம் அடையும். இந்த நிலையில் அமரும்போது நாற்காலியில் அமர்வதைவிட உடலில் சீரான ரத்தஓட்டம் இருப்பதால் ரிலாக்ஸான மனநிலை  வாய்க்கும். இது உணவுக்கு  மிகவும்  முக்கியம். எனவே, தரையில் நன்றாகச் சம்மணமிட்டு அமர்ந்தே எப்போதும் உண்ணுங்கள்.

சட்னிக்கு வயசு என்ன?

இட்லியும் தோசையும் பிறந்த கதையைப் பார்த்து இத் தனை வாரங்கள் ஆன பின்பும் சட்னியின் வரலாற்றைப் பார்க்காவிட்டால் எப்படி? வாருங்கள்  இந்த இதழில் பார்த்துவிடுவோம். சட்னி என்ற சொல் நம்முடையது அன்று அது ஹிந்தி அல்லது உருது மூலம் கொண்டது. நக்குதல் என்பது இதன்  பொருள். இன்னமும் மூலத்தைத் தேடிப்போனால் அது அரேபியாவுக்குச் செல்லக்கூடும். அப்படியானால் சட்னி நம்மிடம் இருக்கவில்லையா? ஏன்  இல்லாமல் காலங்காலமாய் நம் முன்னோர்கள் அதைத் துவையல் என்று சொன்னார்கள்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு சங்க இலக்கியங்களில் துறுகற்கள் உண்டு. புலவு நாறும் துறுகல் என்பது வேட்டையாடிக் கொண்டுவந்த  மாமிசங்களை சுத்தம் செய்யும் பாறை. ஆனால், அம்மிக் கற்கள் உண்டா தெரியவில்லை. கீரைகள், இலை தழைகளை அரைத்துச் செய்யும்  துவையலுக்கான கற்கள் பிற்பாடுதான் வந்திருக்க வேண்டும். வட இந்தியாவில் சட்னி என்று சொல்வார்கள். ஊறுகாய் போல் மாதக் கணக்கில்  வைத்து உண்ணும் ஒரு சைடிஷ்ஷைகூட சட்னி என்றே சில வட மாநிலங்களில் சொல்கிறார்கள்.

ஆந்திராவில் ரொட்டி பச்சடி என்று சொல்வதும், தெலுங்கானாக்காரர்கள் தொக்கு என்று சொல்வதும் ஒருவகைச் சட்னிதான் என்கிறார்கள். தொக்கு  விஜயநகர காலத்தில் பலவிதமான அவதாரங்கள் எடுத்தது. குப்தர் காலத்தில்தான் இன்று உலாவும் பலவிதமான சட்னிகளின் பூர்வ வடிவம்  உருவானதாம். நம்மைப் பொறுத்தவரை தேங்காய்ச் சட்னி கொஞ்சம் பழமையானது. அநேகமாய் ஒரு ஆயிரம் வருடங்கள் இருக்கக்கூடும்.  அப்படியானால் அதற்கு முன்பு? யெஸ், சட்னியே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

சரி இட்லி இல்லாத காலத்தில் சட்னிக்கு மட்டும் என்ன வேலை? காரச் சட்னி அல்லது மிளகாய் சட்னி மிகப் பிற்பாடு ஆந்திராக்காரர்களால்  உருவாக்கப்பட்டு தஞ்சாவூர் சரபோஜிகளால் இங்கு நுழைந்திருக்க வேண்டும். அதில் புளியைச் சேர்த்ததுதான் நம்மவர்கள் கைவண்ணம். கிட்டதட்ட  போன நூற்றாண்டில்தான் புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, தக்காளி சட்னி என விதவிதமான சட்னிகளை உருவாக்கி இட்லிக்கும் தோசைக்கும்  கட்டிவைத்தோம் நாம். காலக்கொடுமை என்னவென்றால் இக்கால இளசுகள் எதையும் பேர் சொல்வது இல்லை. க்ரீன் சட்னி, ஒயிட் சட்னி, ரெட் சட்னி  என்று அனைத்துக்கும் புது நாமகரணம் கொடுத்துவிட்டார்கள். அதுமட்டும்தான் இந்தக் காலத்தின் பங்களிப்பு.

இளங்கோ கிருஷ்ணன்