ஆளில்லா மளிகை கடை!



நன்றாக மூக்குப் பிடிக்க சாப்பிட்டு, சாப்பிட்ட உணவுக்கு காசு கேட்டா ‘என்கிட்டேயே பணம் கேட்கிறாயா? நான் யாருன்னு தெரியுமா’ன்னு கேட்டு கடைகளில் உள்ள பொருட்களையும் கடைக்காரரையும் துவம்சம் செய்தவர்கள் பற்றி செய்தி படித்து இருப்போம். ஆனால் கேரளாவில் ஆளே இல்லாத கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஆட்களே இல்லாத கடையா? எப்படி சாத்தியம்? கடைகளில் எப்படி பொருட்களை வாங்குவது? பணத்தை எப்படி செலுத்துவது ? யாராவது ெபாருட்களையோ அல்லது பணத்தையோ திருடிவிட்டா...ன்னு நமக்குள் பல ஆயிரம் கேள்விகள் எழும்.

இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்கும்படி ஒரு மாத காலமாக வெற்றிகரமாக இந்த கடை இயங்கி வருகிறது. ஜனவரி 1ம் தேதி கண்ணூர் அருகேயுள்ள, அழிக்கோடு என்ற கடற்கரை கிராமத்தின் வன்குளத்துவயல் பகுதியில் இந்த கடை திறக்கப்பட்டது. இந்த கடையில் முன்பகுதியில் `இது கடைக்காரர் இல்லாத கடை. உங்களுக்கு தேவையான பொருளில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை பாருங்கள். அதற்குரிய பணத்தை கல்லாப்பெட்டியில் போட்டு விட்டு உங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச்செல்லுங்கள்' என எழுதப்பட்டுள்ளது.

சுயசேவை கடையான இதில் ஒரு உண்டியல் போன்ற கல்லாப்பெட்டி இருக்கிறது. இதில் பணத்தை போட மட்டும் தான் செய்யலாம்... எடுக்க முடியாது என்பதால் பொருள்களுக்கான சரியான தொகையை பெட்டியில் போட்டு விட்டு பொருட்களை எடுத்துச் செல்லலாம். ஜனசக்தி தொண்டு நிறுவனம் என்ற அமைப்பு இந்த கடையை நிர்வகித்து வருகிறது. இதில் சோப்பு, சலவைத்தூள், பினாயில், டாய்லட் கிளினர், மெழுகுவர்த்தி, துணிப்பை போன்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆசர்யா சிறப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் ஊனமுற்றோர் தயாரித்த பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இங்கு தினமும் ரூ.1000 மதிப்புள்ள பொருட்கள் அடுக்கி வைக்கப்படுகிறது. தினமும் காலை 6 மணியளவில் கடைக்கு அருகே காய்கறி விற்பனை செய்பவர்கள் திறந்து வைக்கின்றனர். இரவு 10 மணி வரை கடையில் விற்பனை நடைபெறுகிறது. இது தொடர்பாக இந்த கடையை நடத்தி வரும் அறக்கட்டளையின் அமைப்பாளர் சுகுணன்  கூறுகையில், ‘‘அழிக்கோடு மக்களின் ஒத்துழைப்பால் தான் இந்த கடையில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இது வரை இங்கு திருட்டு நடைபெறவில்லை. யாரும் மோசடி செய்யவும் இல்லை. இந்த கடையில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு கண் காணிக்கப்படுகிறது. இதில் கிடைக்கும் லாபத்தை ஊனமுற்றோர்களுக்கு உதவி வருகிறோம்’’  என்றார்.

- பா.கோமதி