என்ன செய்வது தோழி



என்னுடைய கணவருக்கு ஜோசியம், ஜாதகம், குறி கேட்பதில் அதிக நம்பிக்கை. எந்தப் பிரச்னை என்றாலும் அவரின் முதல் முடிவு இந்த 3ல் ஒன்றின்  மூலமாக தீர்க்க முடிவு செய்வதுதான். சமீபத்தில் அவருடைய அலுவலகத்தில் அவருக்கு பிரச்னை. அதனால் குறி சொல்லும் பெண்ணைப்  பார்த்தோம். அவருக்கு ஒரு 30 வயது இருக்கும். பார்ப்பதற்கு லட்சணமாகவும், தெய்வீக களையுடனும் இருந்தாள். என்னுடைய கணவரின்  பிரச்னைகளை சொன்ன போது, ‘அவருக்கு  பெண் சாபம் கடுமையாக இருப்பதாகவும், அதனை நிவர்த்திச் செய்ய சில பரிகாரங்கள் செய்ய வேண்டும்’  என்று கூறினாள்.

அவை என்ன என்று கேட்டதுக்கு, ‘அவளுக்கு சில நாட்கள் பாத பூஜை செய்து, அவள் பாதங்களை கழுவிய நீரை என் கணவர் பிரசாதமாக குடிக்க  வேண்டும்’ என்று சொன்னாள்.எனக்கு மட்டுமல்ல என் கணவருக்கும் கூட முதலில் தயக்கமாக இருந்தது. ஆனாலும் பிரச்னை தீர வேண்டும்  என்பதற்காக சம்மதித்தோம். அவள் சொன்னபடியே எனது கணவர் செய்தார். அவர் பிரச்னை தீர்ந்ததோ இல்லையோ எனக்கு புதிய பிரச்னை வந்து  விட்டது.இப்போது என் கணவர் அவளுடைய வீட்டில் அவளுடைய காலடியில் விழுந்துக் கிடக்கிறார். அவளுடைய கால் செருப்புகளுக்கும் பூஜை  செய்கிறார். அலுவலகத்துக்கு செல்லாமல் விடுப்பில் இருக்கிறார். கேட்டால் சண்டைதான் வருகிறது. நான் மிகவும் மனவேதனையில் இருக்கிறேன்.  இப்போது நான் என்ன செய்வது தொழி?

இப்படிக்கு பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,


இது பிரச்னைக்குரிய விஷயம். நீங்கள் சொல்வதை பார்க்கும் போது அவரது நம்பிக்கையானது அழுத்தமானது. அவரது அதீத நம்பிக்கைக்கு சரியான  காரணங்களை ஆராய்ந்து கொண்டு இருக்க வேண்டாம். அவர் எதையும், யார் சொன்னாலும் கேட்கும் மனநிலையில் இருக்க மாட்டார். இதற்கு  Paranoid Delusional Disorder என்று பெயர்.அவரை மனநல மருத்துவரிடமோ, ஆலோசகரிடமோ அழைத்துச் செல்வது நல்லது. ஆனால் அது  சிரமமான விஷயம். அதற்கு காரணம் அவரது அதீத நம்பிக்கை. அவர் செய்வது சரியென நினைப்பதால், ‘டாக்டர்கிட்ட நான் ஏன் வர வேண்டும்.  எனக்கென்ன பைத்தியமா’ என்பார். உறவினர்கள், வீட்டுப் பெரியவர்களை வைத்துப் பேசலாம். அதுவும் சில நேரங்களில் எதிர்மறையாக முடியலாம்.  எல்லோருக்கும் தெரிந்து விட்டதே, இனி என்ன என்று அவர் வெளிப்படையாக செயல்பட ஆரம்பித்து விடும் அபாயமும் இருக்கிறது.அதற்காக நீங்கள் பயப்பட வேண்டாம்.

இதுபோன்ற நம்பிக்கைகள், பழக்கங்கள் அதிக நாள் நீடிக்காது. விட்டுதான் பிடிக்க வேண்டும். கட்டாயம் அங்கிருந்து வந்து விடுவார் அல்லது  விரட்டப்படுவார்.உங்கள் கணவரின் வயது என்னவென்று தெரியவில்லை. உங்கள் கணவருக்கும், குறி சொல்லும் பெண்ணுக்கும் இடையே பக்தி  மட்டும்தானா, வேறு உறவும் இருக்கிறதா என்பதை  சொல்லவில்லை. அதேபோல் வேலைக்கு செல்லாமல் இருக்கும்போது பணத்துக்கு என்ன  செய்கிறார். இவர் அந்தப் பெண்ணுக்கு செலவு செய்கிறாரா? இல்லை அந்தப் பெண்  இவருக்கு செலவு செய்கிறாரா? என்ற விவரங்களை நீங்கள்  குறிப்பிடவில்லை. உங்கள் பிள்ளைகள் சாப்பாடு, படிப்பு செலவுகளுக்கு பணம் கொடுக்கிறாரா? கொடுத்தால் அதை எப்படி சமாளிக்கிறார் என்ற  தகவலும் இல்லை.அதீத நம்பிக்கையால் ஏற்பட்ட உறவு மட்டுமல்ல பணத்துக்காக ஏற்பட்ட உறவும் நீடிக்க வாய்ப்பில்லை. அதனால் இந்தப்  பிரச்னையை பொறுமை யாக கையாள வேண்டும் தோழி.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி பகுதிக்கான கேள்விகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி


‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004

வாசகிகள் கவனத்துக்கு,


பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள்.  சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன்  விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம்.  விவரங்களை அல்ல...