மார்பக அழற்சி (Mastitis) மார்பக புண்



பாலூட்டும் தாய்மார்களே உங்களுடைய மார்பகங்களில் ஏதேனும் ஒரு சிறிய அசௌகரியத்தை நீங்கள் உணர்கிறீர்களா? ஆம் எனில், நீங்கள் மிகவும் அவசியம்  தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இதோ…மார்பக அழற்சி நோயானது தாய்ப்பாலூட்டும் பெண்களில் ஐந்தில் ஒருவருக்கு பரவலாக வரும் நோய்.
அதிலும் 75 சதவீதம் முதல் 95 சதவீதம்  மார்பக அழற்சியானது,  குழந்தை பிறந்த முதல் 12 வாரங்களிலேயே வரக்கூடும். ஆனால், குடும்பத்தாரிடம் கூட இதை பற்றி பெரும்பாலான பெண்கள் பேசுவதில்லை. இதற்கு பாலூட்டும் காலங்களில் சாதாரணமான விஷயம்தான், அதனால் கவலைப் படத் தேவையில்லை என்ற தவறான எண்ணம் மற்றும் விழிப்புணர்வு இல்லாததே காரணம்.

மார்பக அழற்சியை “மாஸ்டிடீஸ்”(Mastitis) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். “மாஸ்டோ” என்ற கிரேக்க வார்த்தையானது மார்பகத்தை குறிக்கும், “ஐடிஸ்” என்ற ஆங்கில வார்த்தையானது அழற்சியை குறிக்கும். மார்பக அழற்சியை சாதாரணமாக மார்பக திசுக்களின் வீக்கம் எனலாம். இது இரண்டு காரணங்களால் வரும். ஒன்று, பாலூட்டும் குழாய்களின் நுண்ணுயிரிகளின் தொற்று காரணமாகவும் மற்றொன்று நீண்ட கால பால் தேக்கத்தினாலும் வரலாம்.

பால் தேக்கத்தினால் வரும் மார்பக அழற்சியில் குழந்தையை கவனிக்க முடியாமல் தாய்மார்கள் சிரமப்படவும் வாய்ப்புள்ளது. இப்படி பால் கட்டிக் கொண்டு அவதிப்பட்டால் கூட குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். கொடுக்க கொடுக்க கட்டியுள்ள தாய்ப்பால் கரைந்து விடும். இதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மிகுந்த வலி இருந்தால் அடிக்கடி கையை வைத்து லேசாக பிதுக்கி பாலை வெளியேற்றி விடலாம். இது மறுபடியும் பால் கட்டுவதை தவிர்க்கும்.

நுண்ணுயிரிகளால் வரும் மார்பக அழற்சியில் வலியுடன் காய்ச்சல் வரும் வாய்ப்புமுள்ளது. நுண்ணுயிரிகள் பொதுவாகவே தோல் மற்றும் திசுக்களில் தொற்றுகளை உண்டாக்கும். இந்த நுண்ணுயிரிகள் முலைக் காம்புகளில் விரிசல் மற்றும் பிளவுகள் இருந்தாலோ, அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் சோர்வினாலோ, புகை பிடித்தல் மற்றும் புகையிலை பயன்படுத்துதலினாலோ, ஊட்டச்சத்து குறைபாட்டினாலோ, போதுமான தாய்ப்பால் வடிகால் இல்லாததினாலோ, அடிக்கடி ஆன்டிபயோடிக் (Antibiotic) மருந்துகளை பயன்படுத்துவதாலோ, ஈஸ்ட் தொற்றினாலோ அல்லது ஈரப்பதம் ஊட்டும் கிரீம்கள் உபயோகப்படுத்தல் போன்றவற்றின் மூலமாகவோ, தோலில் இருந்து இந்த நுண்ணுயிரிகள் மார்பகத்தினுள் நுழைந்து அழற்சியை ஏற்படுத்துகிறது.

இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் உபயோகித்தல், முறையற்ற பாலூட்டும் முறைகள், நேரடியாக மார்பகத்தில் ஏற்படும் காயம், சர்க்கரை நோய் போன்றவை ஆபத்து காரணிகளாக அமையும். பாலூட்டும் பெண்களுக்கு வரும் மிகவும் பொதுவான நோயாக இது இருந்தாலும் இதை உடனடியாக குணப்படுத்தி கொள்ள வேண்டும்.

பொதுவாக ஒரு மார்பகத்தில் தான் அழற்சி ஆரம்பிக்கும். பின் இன்னொரு மார்பகத்தையும் இது தாக்கலாம். இந்நோயினால் தோல் சிவத்தல், வலி மற்றும் வீக்கம் வரலாம். இரண்டாம் பட்சமாக தொற்று ஏற்படும் பொழுது பெரும்பாலான சமயங்களில் காய்ச்சலுடன்  வரும். இந்த அறிகுறிகளை தவிர்த்து நடுக்கம், மார்பகம் கனமாக உணர்தல், எரிச்சல் மற்றும் மார்பகத்தில் கட்டி போன்ற உணர்வு போன்றவையும் காணப்படலாம். மேலும் கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் காலம் தாழ்த்தாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

*குளிருடன் கூடிய காய்ச்சல்,
*கடுமையான சோர்வு,
*உடல் வலி
*குமட்டல் (வாந்தியுடன் அல்லது இல்லாமல்)
*மிகவும் சிவப்பு, சூடான மற்றும் வலி மிகுந்த மார்பு.
*மார்பிலிருந்து சீழ் வெளியேறுதல்.

மார்பக புண்

மார்பகத்தில் ஏற்படும் புண்ணானது மார்பக அழற்சி முற்றி கட்டியாக மாறி அதில் சமயங்களில் சீழ் பிடித்து வெளியேறுவதாகும். இதுவும் நுண்ணுயிரிகளின் தொற்றின் காரணமாகவே வரும்.  பிரசவத்திற்கு பின் பாலூட்டும் காலத்தில் இது மிகவும் பொதுவாக வரும் ஒரு நோய் என்றாலும், சில நேரங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் என்று இரு பாலினருக்கும், வயது மற்றும் கர்ப்பத்தை பொருட்படுத்தாமல் ஏற்படுகிறது. இந்நோய்க்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் மார்பகத்திலிருந்து சீழ் வழியும்.

ஒரு நபர் மார்பக அழற்சிக்கு தகுந்த காலத்தில் முறையான சிகிச்சையை பெறவில்லை என்றால் நுண்ணுயிரிகள் பால் சுரப்பி (Mammary Gland) திசுக்களுக்குள் பரவி அங்கு சீழ் நிரம்பும். இது தோலின் மேல் கட்டி போல் உணரப்படலாம் இதனால் தாய்ப்பால் உற்பத்தி குறைதல், மார்பகங்களில் வலி, எரிச்சல், மார்பகங்கள் சிவத்தல், சூடான உணர்வு, காய்ச்சல் மற்றும் சீழ் வெளியேற்றம் போன்ற அறிகுறிகளை நாம் உணரலாம்.

தாய்ப்பாலூட்டும் பெண்களில் மார்பக சீழ் உருவாவது மிகவும் அரிதாகும். பொதுவாக மார்பக சீழானது, 30 வயதிற்கு மேல் உள்ள பெண்கள், முதல் குழந்தை பெற்ற பெண்கள், தாமதமான பிரசவம் உண்டான பெண்கள் ஆகியவர்களுக்கு இது எளிதாக வரும்.

இந்நோய் ஏற்படும் போது கண்டிப்பாக மார்பகத்தில் ஒத்தடம் கொடுக்கக் கூடாது ஏனென்றால் ஒத்தடம் கொடுக்கும் பொழுது சீழ் வெடிக்கலாம்.ஆயுர்வேதத்தில் மார்பக அழற்சிக்கான சிகிச்சையாக பித்தத்தை குறைக்கும் மருந்துகள் மற்றும் குளிர்ச்சியை உண்டாக்கும் மருந்துகள், அட்டை விடுதல் மூலம் ரத்தத்தை சுத்தப்படுத்துதல், மார்பகங்களின் மேல் களிம்பு தடவுதல், மசாஜ், மருத்துவ கஷாயங்களை நோய் தொற்று இருக்கும் இடத்தின் மேல் ஊற்றுதல் போன்றவை கூறப்பட்டிருக்கிறது. ஆயுர்வேதத்தில் கூட சீழை வெளியேற்றும் அறுவை சிகிச்சை கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தகுந்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னரே  ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
மார்பக அழற்சியை தவிர்க்க பெண்கள் செய்ய வேண்டியவை

*முறையான தாய்ப்பாலூட்டும் நுட்பங்களை பயன்படுத்துதல்.
*தாய்ப்பால் கொடுப்பதை வழக்கமாக தொடர வேண்டும், ஏனெனில் மார்பகத்தை காலி செய்வது, மார்பகத்தை குணப்படுத்துகிறது.
*குழந்தை ஒரு மார்பகத்தின் பாலை முழுமையாக உறுஞ்சிவிட்டது என்று உறுதி செய்த பின்னரே மற்றொரு மார்பகத்திலிருந்து குழந்தையை பால் குடிக்கச் செய்ய வேண்டும்.
*பாலூட்டும் பொழுது குழந்தை சீராக பிடிக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்
*வழக்கமாக  மார்பக மசாஜ் செய்ய வேண்டும்.
*புகை பிடிப்பது மற்றும் புகையிலை போன்றவற்றை தவிர்க்கவும்.
*ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை போதுமான அளவு உட்கொள்ளுதல் வேண்டும்.
*மார்பக காம்புகளை குழந்தை கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
*மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
*தூய்மையான துணிகளைக்கொண்டு எப்பொழுதும் மார்பக காம்புகளை துடைத்து தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உள்மருந்துகள்

ஆயுர்வேத முறைப்படி வெந்தயம் பால் சுரப்பிகளில் நன்றாக செயலாற்றி அவைகளை வலிமைப்படுத்தி அவைகளின் நோய் எதிர்ப்புசக்தியை தூண்டுகின்றன. அதே நேரத்தில் இதிலுள்ள சத்துக்கள் மார்பு அழற்சி போன்ற நோய்களைப் போக்கவும் உதவுகின்றன. 20 கிராம் வெந்தயத்தை 200 மில்லி தண்ணீரில் இரவிலே ஊற வைக்க வேண்டும்.

 ஊற வைத்த வெந்தயத்தை காலையில் அரைத்து ஒரு சுத்தமான துணியில் இந்த வெந்தய பேஸ்ட்டை வைத்து ஆவியில் சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட இடத்தில் நாளொன்றுக்கு 2 முறை ஒத்தடம் கொடுக்க மார்பக அழற்சி குறைவதை காணலாம். வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி பனைவெல்லம் சேர்த்து வெந்தய டீ குடித்து வரலாம்.

ஆயுர்வேத உள் மருந்துகளான திரிபலா குக்குலு, தசமூலாதி கஷாயம், சந்தனாசவம், கூக்குலு பஞ்சபல சூர்ணம், உஷிராசவம், பிரவால பிஷ்டி, சதாவரி லேகியம், திக்தக கிருதம், மகா திக்தக கிருதம், திராயந்தியாதி கஷாயம், மகா சுதர்சன சூர்ணம், அமிர்தாரிஷ்டம், பிரம்மி திராக்ஷாதி கஷாயம், காம தூக ரசம் போன்ற மருந்துகள் நோய் நிலைக்கு தக்கவாறு தகுதி வாய்ந்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப் பெற்று கொடுக்க  நல்ல ஆற்றலுடன் மார்பக அழற்சி மற்றும் புண், சீழ் ஆகிய பிரச்சனைகளுக்கு எதிராக வேலை செய்கின்றன.  

புற மருந்துகள்

மார்பக அழற்சியை போக்க வெந்நீர் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். இது வீக்கத்தை குறைக்கவும், வலியை போக்கவும், அடைப்பை நீக்கவும் பயன்படுகிறது. மேலும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து பால் கட்டியிருப்பதிலிருந்து சரிசெய்கிறது. மேலும் திரிபலா கஷாயம் வைத்து பிரக்ஷாளனம் செய்ய அழற்சி குறையும், சந்தனாதி தைலம், ரசோதனாதி லேபம், பஞ்சவல்கள லேபம் ஆகியவை மேலே தடவ படிப்படியாக இந்த அழற்சி குறைவதைக் காணலாம்.  மேலும்,

1.வலியுடன் கூடிய மார்பக அழற்சி வந்தால் கண்டங்கத்திரி வேரை நெய் மற்றும் எண்ணையுடன் சேர்த்து அரைத்து அதை வலி இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.
2.மார்பக அழற்சியுடன் எரிச்சலும் இருந்தால் அந்த இடத்தில மாட்டு பால் அல்லது கரும்பு சாறை தெளித்தால் எரிச்சல் குறையும். இதை தவிர பஞ்சவல்கள லேபத்தையும் பயன்படுத்தலாம்
3.காயம் விரைவில் குணமடைய நெய்யோடு அதிமதுரம், வெட்டிவேர், மஞ்சள் பால் ஆகியவற்றை கலந்து அதை உபயோகிக்கலாம்.
4. சீழ் வெளியேறிய பிறகு அவ்விடத்தை பஞ்சவல்கள கஷாயத்தால் கழுவிய பின் அவ்விடத்தில் எள், அதிமதுரம், தேன், நெய் ஆகியவற்றை தடவி கட்டு கட்டலாம்.
5. மார்பக அழற்சியுடன் கணம் இருந்தால் திரிபலா கஷாயத்தோடு குக்குலு உபயோகிக்கலாம்.

நவராத்திரி ஏன் கொண்டாட வேண்டும்?

ஒன்பது நாட்கள் அம்மனை வெவ்வேறு அவதாரங்களாக  அலங்கரித்து, கொலு வைத்து கொண்டாடுவதுதான் நவராத்திரி பண்டிகை. இப்பண்டிகையினை மைசூரில் மிக கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். அதே போல தமிழகத்தில் தூத்துக்குடியில் அமைந்துள்ள குலசேகரன்பட்டணத்தில் இருக்கும் முத்தாரம்மன் கோயிலில் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

சர்வம் சக்திமயம் என கூறுவது வழக்கம். நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகள் என்ற பொருள் உண்டு. அதே சமயம் நவ என்ற சொல்லுக்கு புதுமை என்ற அர்த்தமும் உண்டு.
நவராத்திரியின் நோக்கம்முப்பெரும் தேவியர்களான மலைமகள், அலைமகள், கலைமகள் இந்த மூன்று தேவியரும் ஒரு ரூபமாக வந்து மகிஷாசுரனை வதம் செய்த
திருவிழாதான் நவராத்திரி.

நாம் நம்மிடம் இருக்கும் நல்ல விஷயங்களை எல்லாம் ஒன்று சேர்த்து, நம்மிடம் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிப்பதற்காக நம்மை பக்குவப்படுத்தக்கூடிய தவக்காலமாக நவராத்திரியை எடுத்துக் கொள்ள வேண்டும். நவராத்திரி தினத்தில் நாம் கொலு வைப்பதை வழக்கமாக வைத்துள்ளோம். அதோடு இந்த நவராத்திரி தினங்களில் விரதம் இருந்து தினமும் ஒரு அம்பிகையின் அவதாரத்தை வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு தானியங்களால் நைவேத்யம்

செய்து அம்பாளுக்குப் படைத்து அதை அருகில் உள்ளவர்களுக்கு கொடுப்பது விசேஷம். புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி திருவிழா மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. வெயில் காலத்தை தொடர்ந்து புரட்டாசி மாதத்தில் பொழியும் மழையால், பூமி பல நாட்களாக உட்கிரகித்திருந்த வெப்பத்தை வெளியிடும். இதனால் நம் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். இந்த காலத்தில் அசைவம் சாப்பிட்டால் அது மேலும் உஷ்ணத்தை  அதிகரித்து வியாதிகளை ஏற்படுத்தும் என்பதால் அறிவியல் பூர்வமாக இந்த மாதத்தில் அசைவ உணவினை நம் முன்னோர்கள் தவிர்த்தனர்.
 
நாம் இந்தக் காலத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் போது, தானியங்களால் ஆன பிரசாதம் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கொடுத்து, உடலை வலுப்படுத்துகிறது. இதனால் நவராத்திரி விழாவை நாம் வெறும் ஆன்மிக ரீதியாக மட்டும் பார்க்காமல், அதை அறிவியல் ரீதியாகவும் கொண்டாடுகிறோம்.

- எஸ். நிரஞ்சனி, சென்னை.

உஷா நாராயணன்