சேமியா தேங்காய் புலாவ்



என்னென்ன தேவை?

சேமியா - 200 கிராம்,
நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு - தலா 1/4 கப்,
பச்சைப்பட்டாணி - 1/4 கப்,
நறுக்கிய வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பச்சைமிளகாய் - 2,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் - 1 கப்,
நறுக்கிய கொத்தமல்லி, உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு.

தாளிக்க...

பட்டை - 1 துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா 2,
கடல்பாசி - சிறிது,
நெய், எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். இதில் 1 சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் எண்ணெய், சேமியாவை சேர்த்து முக்கால் பதம் வெந்ததும் வடிகட்டி, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசிக் கொள்ளவும். இதை மீண்டும் வடிய விடவும். அடிகனமான கடாயில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், கடல்பாசி, ஏலக்காய் போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி, பச்சைமிளகாய், நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும். பின் தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து நன்கு கலந்து, குழம்பு பதமாக வரும்போது சேமியா சேர்த்து கிளறி, மூடி 3 நிமிடம் கழித்து இறக்கவும். கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.