சிவாஜியின் பேரன் சிவாஜி தேவ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘நந்தனம்’. சினிமா ஆர்வம் காரணமாக, அதுநாள்வரை பார்த்து வந்த கல்லூரி விரிவுரையாளர் வேலையை உதறிய என்.சி.ஷியாமளன், இப்படத்தில் பல புதுமைகளை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு பாடலில், வானவில்லின் ஏழு நிறங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கிறதாம். விவேகா எழுதிய ‘ஏதோ ஏதோ உயிரிலே...’ பாடலில் என்ன சிறப்பு என்றால், இப்பாடலை யார் பாடினாலும் சரி, அவர்களுடைய உதடுகள் ஒட்டாது. இதில் மித்ரா குரியன் ஹீரோயினாக நடித்துள்ளார்.
எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நாத்திகக் கருத்துகளை ‘வெங்காயம்’ படத்தில் சொல்லி, திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர வைத்த சங்ககிரி ராஜ்குமார், இப்போது ‘ஒன்’ என்ற தலைப்பில் படம் இயக்க, கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழில் ஏழு படங்களில் நடிக்கும் ஒரே ஹீரோயின், ஹன்சிகா மட்டுமே! சிம்புவுடன் ‘வேட்டை மன்னன்’, ‘வாலு’, சூர்யாவுடன் ‘சிங்கம் 2’, ஆர்யாவுடன் ‘சேட்டை’, கார்த்தியுடன் ‘பிரியாணி’, சித்தார்த்துடன் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, தமிழில் ‘சத்யம்’ ராஜசேகர் இயக்கத்தில் ரீமேக் செய்யப்படும் தெலுங்கு ‘இஷ்க்’ என, ஏழு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
பாலாவின் ‘பரதேசி’ படத்தில், கறுப்பு மேக்கப்பில் மிரட்டுயிருக்கும் வேதிகா, இப்படம் தனக்கு மிகப் பெரிய டர்னிங் பாயின்டாக அமையும் என்று நம்புகிறார். இதையடுத்து தமிழில் வாய்ப்பு வேட்டையாட மேனேஜரை நியமித்து, கவர்ச்சியான தன் போட்டோக்களை பல இயக்குநர்களிடம் காட்டி, அவர்கள் படத்தில் வாய்ப்பு கேட்டு வருகிறார். இந்நிலையில், தெலுங்கில் அவர் நடிப்பில் ரிலீசான ‘தக்கரகா தூரங்கா’ என்ற படத்தை தமிழில் ‘பூவோடும் புயலோடும்‘ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிட ஏற்பாடு நடக்கிறது.
பிரபு சாலமனின் கண்டுபிடிப்பான பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, ‘கும்கி’ ரிலீசுக்கு முன்பே ‘சட்டம் ஒரு இருட்டறை’ ரீமேக்கில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அப்படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. இந்நிலையில், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் சார்பில் சுபாஷ் சந்திரபோஸ் தயாரிக்கும் ‘இவன் வேற மாதிரி’ படத்தில் நடிக்கிறார். ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் எழுதி, இயக்கும் இப்படத்துக்கு ஹீரோயின் முடிவாகவில்லை.
த்ரிஷாவுக்கு ‘பூலோகம்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘சமர்’ படங்கள் இருக்கிறது. இதில் மற்ற படங்களை விட, ‘சமர்’ படத்தின் ஷூட்டிங் மட்டும் மெதுவாக ஊர்ந்தது. என்ன செய்வதென்று யோசித்த த்ரிஷா, ‘உடனே என் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்து விடுங்கள்’ என்று, இயக்குநர் திருவிடம் வற்புறுத்தினார். இதையடுத்து மலேசியாவுக்குப் புறப்பட்டது, ‘சமர்’ குழு. அங்கு விஷால், த்ரிஷா சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. தன் தந்தை கிருஷ்ணனின் திடீர் மறைவுக்குப் பிறகு த்ரிஷா பங்கேற்ற முதல் ஷூட்டிங் என்பதால், அவரிடம் வழக்கமான கலகலப்பு மிஸ்சாகி விட்டதாம்.
‘சாட்டை’யில் அறிமுகமான மஹிமா, கோலிவுட்டில் எதைப் பார்த்தாலும் பயந்து விடுகிறாராம். யாராவது புதுப்பட விஷயமாகப் பேசினால், உடனே மேனேஜரை நோக்கி கை நீட்டுகிறாராம். கதை என்ன? காட்சி என்ன என்று, குடும்பமே உட்கார்ந்து கதை கேட்க விரும்புமாம். எனவே, டெலிபோன் மற்றும் செல்போனில் கதை கேட்க விரும்புவது இல்லையாம். சம்பந்தப்பட்ட இயக்குநர், கேரளாவுக்கு நேரில் வந்து கதை சொல்ல வேண்டும் என்கிறாராம்.
பாடகர் கிரீஷ், சங்கீதா தம்பதியர் அடுத்த மாதத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். காரணம், சங்கீதா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ அவருக்கு குழந்தை பிறக்கும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார்.
சினிமாவில் அடுத்த ரவுண்டு வர தயாராகி விட்டதாக சொல்லும் சுஜா வாருனிக்கு ‘சேட்டை’, ‘அமளி துமளி’, ‘டீல்’, ‘மறந்தேன் மன்னித்தேன்’ படங்கள் இருக்கிறது. ஒரு பாட்டுக்கு ஆட மாட்டேன் என்று திட்டவட்டமாக சொன்னதற்கான பலன், இப்போது பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்கள் கிடைக்கிறதாம். இதையடுத்து, போரூரில் குடியேறியுள்ள சொந்த வீட்டின் ராசி நன்றாகவே ஒர்க்கவுட் ஆகிறது என்று சொல்லி சந்தோஷப்படுகிறார்.
‘அவன்-இவன்’, ‘பாகன்’ படங்களில் நடித்த ஜனனி அய்யர், மலையாளத்தில் சுஜீத் இயக்கும் ‘த்ரீ டாட்ஸ்’ படத்தில், குஞ்சாக்கோ போபன் ஜோடியாக நடிக்கிறார். பிஜூ மேனன், பிரதாப் போத்தன், குஞ்சாக்கோ போபன் மூவரும் ஜெயில் கைதிகள். ஜனனி பிளே ஸ்கூல் டீச்சர். ஒருகட்டத்தில் அவர்களுடன் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஜனனிக்கு மலையாளம் தெரியாது. தற்போது கற்றுக் கொண்டிருக்கிறார்.
அஷ்வின் சேகர், கீர்த்தி சாவ்லா நடிக்கும் ‘நினைவில் நின்றவள்’ படத்தை இயக்கியவர், அகஸ்திய பாரதி. ஐம்பது வயது நிறைவடைந்த அவர், தன் படம் ரிலீசாகும் தினத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தார். அய்யகோ... அதற்குள் எமன் அவரது உயிரைப் பறித்து விட்டான். உடல்நலமின்றி சிகிச்சை பெற்ற அவர், திடீரென்று மரணம் அடைந்து விட்டார்.
- தேவராஜ்