வள்ளியைப் பறிகொடுத்த வாருனீ



‘ப்ளஸ் டூ’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், சுஜா. பிறகு அந்த அந்தஸ்தை அவரால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ஏகப்பட்ட புதுமுகங்களின் வரவு காரணமாக, தொடர்ந்து அவரால் ஹீரோயினாக நடிக்க முடியவில்லை. எனவே, ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடத் தொடங்கினார். இப்படி அவர் கீழிறங்கி வந்ததுதான் அவர் செய்த மாபெரும் தவறு. அதற்குப் பிறகு அவரை குத்தாட்டம் போடுவதற்காக மட்டுமே அழைத்தனர். யாரும் அவரது திறமையை மதித்து, மீண்டும் ஹீரோயினாக நடிக்கிறீர்களா என்று கேட்கவில்லை. மனம் நொந்துபோன சுஜா, ‘இனிமேல் ஒரு பாட்டுக்கு நான் ஆடப் போவதில்லை’ என்று அறிவித்தார்.


ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ் ஹீரோவாக நடித்த ‘மிளகா’ படத்தில் நல்ல கேரக்டர் கிடைத்தது. இதில் சுஜா சொந்தக்குரலில் பேசி நடித்தார். இப்போது கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நகுல், ‘சுப்ரமணியபுரம்’ சுவாதி, சாந்தனு நடிக்கும் ‘அமளி துமளி’ படத்தில் ஒரு அற்புதமான கேரக்டரில் நடித்து வரும் சுஜா, ராசிக்காக தன் பெயரை ‘சுஜா வாருனீ’ என்று மாற்றிக்கொண்டார். அது ஒர்க்-அவுட் ஆனது. பிறகு கோடம்பாக்கத்தில் வசித்த வாடகை வீட்டை விட்டு விட்டு, போரூர் பகுதியில் வாங்கிய சொந்த வீட்டில் குடியேறினார்.

புதுவீடு, புதுப்பெயர் செமையாக ஒர்க்-அவுட் ஆகிவிட்டது. ‘அப்புச்சி கிராமம்’ படத்தில் வித்தியாசமான கேரக்டரிலும், அருண் விஜய்யுடன் ‘டீல்’ படத்திலும் நடிக்கும் சுஜா வாருனீ, தன் ஜாகையை தெலுங்குக்கும் மாற்றினார். அங்கு ரிலீசான‘குண்டெல்லோ கோதாவரி’, ‘தூசுகெள்தா’ படங்கள் அவரை தெலுங்கு ரசிகர்களுக்கு ஓரளவு தெரிய வைத்துள்ளன. காமெடி நடிகர் ஆலி ஜோடியாக ‘அலிபாபா ஒக்கடே தொங்கா’ என்ற படத்தில் ஹீரோயினாகி விட்டார். இதில் வித்தியாசமான ஹேர் ஸ்டைல், வித விதமான கிளாமர் உடைகள், அற்புதமான நடன அசைவுகள் என ஆளே மாறிவிட்டார்.

‘‘இப்ப தமிழிலும், தெலுங்கிலும் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கு. இனிமே ஹீரோயினா மட்டும்தான் நடிப்பேன்’’ என்பதில் உறுதியாக இருக்கும் சுஜா, தன் வீட்டிலுள்ள தொட்டியில் வள்ளி என்ற வாஸ்து மீனை வளர்த்து வந்தார். பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டுக்கு மாறிய சில நாட்களில், வள்ளி இறந்துவிட்டது. உடனே கோல்டு ஃபிஷ்கள் சிலவற்றை வாங்கி தொட்டியில் விட்டுள்ள அவர், ‘‘வள்ளி செத்துப் போனதை மைனசா நினைக்கலை. எங்க குடும்பத்துக்கு வர இருந்த ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து, அதை தான் ஏத்துகிட்டு எங்களை காப்பாத்தி இருக்கிறதா நம்பறேன். இப்ப வந்துள்ள தங்க மீன்கள், எனக்கு நல்லதைத்தான்  நடத்திக்கிட்டிருக்கு’’ என்றார்.

- தேவராஜ்