ஆம்பள



சுந்தர்.சி படம் என்றால் வயிறு குலுங்க, வாய் வலிக்க சிரித்துவிட்டு வரலாம் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உண்டு. அந்த நம்பிக்கையை பொய்யாக்காமல் சிரிக்க மட்டுமே வைத்திருக்கிறார்.

அரசியல் கூட்டங்களுக்கு ஆட்கள் சப்ளை பண்ணுவது தான் விஷாலின் தொழில். கணவனால் கைவிடப்பட்ட அவருடைய தாய் விஷாலை வளர்த்து ஆளாக்குகிறார். ஒரு கட்டத்தில் அம்மாவின் விருப்பத்துக்காக அப்பாவைத் தேடிக் கிளம்புகிறார்.

அப்பாவையும் தம்பியையும் கண்டுபிடிப்பதோடு பிரபுவின் காதலி யின் மகனையும் சேர்த்துக் கண்டுபிடிக்கிறார். எதற்கு இந்த மூன்று பேர் என்று யோசித்தால், பிரபுவுக்கு மூன்று தங்கைகள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மகள். அந்த மூன்று பேரையும் இந்த மூன்று பேரும் திருமணம் செய்து, பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்ப்பது தான் கதை.

ஆடல், பாடல், ஆக்ஷன் என சினிமாவின் அனைத்து கிராஃப்டுகளையும் பிசிறு இல்லாமல் பின்னியெடுக்கிறார் விஷால். லவ் பண்ணுவது எவ்வளவு கஷ்டம் என்று விளக்கம் கொடுக்கும் காட்சியில் மொத்த தியேட்டரையும் சிரிக்க வைக்கிறார். ஹன்சிகாவின் அழகு படத்துக்கு பெரிய பலம். அவரும் தாராளமாக நடித்து ரசிகர் களைக் கவருகிறார். ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் நாயகியின் அழகை எந்தளவுக்கு சிரமம் பார்க்காமல் படமாக்கினாரோ அதேபோல் ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா என மூன்று அத்தைகளின் அழகையும் துளியும் சிதறாமல் அழகாக படம்பிடித்திருக்கிறார். 

படத்தின் ஹீரோ விஷால் என்றாலும் படத்தை தாங்கிப் பிடிக்கும் பொறுப்பை சந்தானம் ஏற்றிருக்கிறார். இன்ஸ்பெக்டர், ஏட்டு, இடை நீக்கம், பணி நீக்கம் என்று படிப்படியாக கீழிறங்கும் அதே வேளையில் அவருடைய காமெடி டாப் கியரில் ஏறுகிறது. ஜமீன் வாரிசாக வரும் பிரபு படத்துக்கு ஸ்பெஷல் அட்ராக்ஷன். அத்தைகளின் கணவர்களாக வரும் ஸ்ரீமன், அபிஷேக், கௌதம் ஆகியோரும் சிரிக்க வைக்க உதவுகிறார்கள்.

ஹிப் பாப் தமிழன் இசையில் பாடல்கள் அருமை. ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா’ ரீ மிக்ஸ் பாடல் அற்புதம். படம் முழுக்க மிகப்பெரிய நடிகர் பட்டாளம், கலர்ஃபுல் பாடல்கள், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் என்று எப்படி திரை நிரம்புகிறதோ, அதுபோல் ரசிகர்களின் மனதும் நிரம்புமளவுக்கு முழுமையான பொழுதுபோக்குப் படம் கொடுத்திருக்கிறார் சுந்தர்.சி