கீர்த்தி சுரேஷ்
கேரளத்து நேந்திரத்தையும், சேலத்து மாம்பழத்தையும் சேர்த்து செஞ்ச புது ஃப்ரூட் மாதிரி இருக்கிறார் கீர்த்தி. இருக்க மாட்டாரா பின்னே... அப்பா சுரேஷ் கேரளத்து புரட்யூசர், அம்மா மேனகா தமிழ் நாட்டில் பிறந்து கேரளத்து கனவுக்கன்னியாக இருந்தவர்... 'என்ன திட்டத்தோடு வந்திருக்கீங்க?' என்றால் கலகலவென சிரிக்கிறார் கீர்த்தி.
''முதல்ல நான் கேரளத்து வரவு, மலையாள தேவதைன்னெல்லாம் எழுதாதீங்க. நான் அம்மா செல்லம். அதனால நான் தமிழ்ப் பொண்ணுதான். 50 திருக்குறள் மனப்பாடமா தெரியும், தெளிவா தமிழ் பேசத்தெரியும், பாவாடை தாவணி கட்டத் தெரியும். யாராவது சைட் அடிச்சா வாயையும், கண்ணையும் ஆட்டிகிட்டு வெடுக்குன்னு விலகிப் போகத் தெரியும், தமிழ்ப் பொண்ணா இருக்கிறதுக்கு இது போதும்தானே...
நடிக்கிற ஆசை பிளஸ் 2ல வந்துச்சு. அப்பாகிட்ட கேட்டேன். படிப்புதான் முக்கியம்னு சொல்லிட் டார். அம்மாகிட்ட கேட்டேன். ஃபேஷன் டிசைன், விஸ்காம் ரெண்டுல ஒண்ணு படி. அப்படியே போயிடலாமுன்னு ஐடியா கொடுத்தாங்க.
ஃபேஷன் டிசைன் படிச்சேன். ரெண்டாவது வருஷத்திலேயே "உன் பொண்ணை நடிக்க வைக்கப்போறேன்"னு ப்ரிய தர்ஷன் அங்கிள் கூட்டி வந்துட்டார். முதல்படம் 'கீதாஞ்சலி' யில நல்ல பேர், அவார்டு கிடைச்சுது. அடுத்த படமே திலீப்புடன். அதுவும் பார்வையற்ற பெண்ணாக. பார்த்தார் அப்பா. இவள் சினிமாவுக்கு நேர்ந்து விடப்பட்டவள்னு விட்டுட்டார். இப்போ தமிழுக்கும் வந்தாச்சு.
சிவாஜி பேரனோட 'இது என்ன மாயம்', சிவகார்த்திகேயனுடன் 'ரஜினி முருகன்', அப்புறம் யாரோடன்னு கேட்காதீங்க. அப்படி எந்த முடிவும் கிடையாது. அம்மா தமிழ்ல நடிச்சது கொஞ்சம்தான். நான் நிறைய நடிச்சு அவுங்க இங்க விட்டதை பிடிக்கணும்” என்கிறார்.
-கதிர்