திரிஷா மறுத்தார்; டாப்ஸிபிடித்தார்!



‘வை ராஜா வை’ படத்தை விட, ‘காஞ்சனா 2’ படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறாராம் டாப்சி. பாடல் காட்சிகளில் ராகவா லாரன்ஸ் சொல்லிக் கொடுத்த அசைவுகளை யாரும் எதிர்பாராத வகையில்  அற்புதமாகச் செய்து கைதட்டல் வாங்கியுள்ள அவர், இந்தப்படம் ரிலீசான பிறகே தமிழில் அடுத்த படத்தை ஒப்புக்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஐஸ்வர்யா தனுஷ் கேட்டுக்கொண்டதற்காக ‘வை ராஜா வை’ படத்தில் நடித்த அவர், அது வில்லி வேடமா என்று கேட்டால் முறைக்கிறார்.

‘கேள்விப்பட்டதை எல்லாம் கேட்காதீர்கள். படம் ரிலீசான பிறகு நானா இப்படி நடித்திருக்கிறேன் என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுவார்கள்’ என்கிறார். ஓரிரு நாட்களுக்கு முன் டாப்சி, அகத்தியன் மருமகன் திரு இயக்கத்தில், ஜெய் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். இதற்கு முன் நடிக்க இருந்தவர், திரிஷா. அவர் மறுத்ததால், அந்த வாய்ப்பை டாப்சி பிடித்துக் கொண்டார்.

நாகார்ஜுனா, கார்த்தி நடிக்கும் படத்தில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசன் மீது ஐதராபாத் போலீஸ் நிலையத்தில் வழக்கு இருக்கிறது. இதற்கிடையே அவருக்காக வரிந்துகட்டிய ‘புலி’ படக் குழுவினர், ‘ஸ்ருதி மாதிரி ஒரு நல்ல பெண்ணை எங்கேயும் பார்க்க முடியாது. அவர் வேறு எங்கோ ஓடிவிட்டார் என்று வதந்தி பரப்பு கிறார்கள். விஜய்யுடன் நடிக்கும் ‘புலி’ படத்துக்காக மட்டுமே அவர் வந்திருக்கிறார்.

அவரை நம்பி அவுட்டோரில் மிகப் பெரிய செட் போட்டிருக்கிறோம். தன்னால் ஷூட்டிங்கிற்கு பாதிப்பு வரக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில், முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வருகிறார்’ என்று, ஸ்ருதி ஹாசனுக்கே ஜலதோஷம் வரும்படி ஐஸ் வைத்திருக்கிறார்கள்.

- தேவராஜ்