மேக்கப்மேன் கமல்!



நெகிழ்ந்து போயிருக்கிறார் திரிஷா. ‘மன்மதன் அம்பு’ படத்துக்குப் பிறகு ‘தூங்காவனம்’ படத்தில் கமலோடு சேர்ந்து நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பின்போது இந்திய சினிமாவில் அத்தனை பெரிய ஆளான கமல்ஹாசன், ஓர் உதவி இயக்குனரைப் போல அங்கும் இங்குமாக ஓடியாடி வேலை பார்த்ததைப் பார்த்து அசந்து போயிருக்கிறார். எந்த பந்தாவுமின்றி திரிஷாவுக்கும், பிரகாஷ்ராஜுக்கும் தன் கையாலேயே மேக்கப் போட்டு விட்டாராம். ‘மன்மதன் அம்பு’ படத்தில் திரிஷாவை வற்புறுத்தி டப்பிங் பேசவைத்த கமல், ‘தூங்காவனம்’ படத்துக்கும் அவரே சொந்தக்குரலில் பேசவேண்டும் என்று அன்புக்கட்டளை இட்டிருக்கிறார்.



“அவர் ஒரு லெஜெண்ட். அவரோடு சேர்ந்து நடித்தது பல்கலைக்கழகத்தில் பாடம் படித்தது போல இருக்கிறது. சினிமாவில் நானறியாத பல விஷயங்களை தினமும் அவரிடம் கற்றுக் கொண்டேன். தொழிலில் சீனியரான அவர், என்னைப் போன்ற நடிகைகளின் திறமையை உணர்ந்து, அதை உற்சாகப்படுத்தும் போக்கு பிரமிக்க வைக்கிறது” என்று இன்னமும் பிரமிப்பில் இருந்து மீளாமல் விழிகளை அகலவிரித்து ஆச்சரியமாக சொன்னார் திரிஷா. கமலோடு சேர்ந்து வேலை பார்த்தவர்கள் அத்தனை பேருமே சொல்லிவைத்தாற்போல இப்படித்தான் சொல்லுகிறார்கள்.

- தேவராஜ்