இளம் ஹீரோக்களோடு ஜோடி சேர ஆசைப்படும் சேச்சி தேசத்து பியூட்டி!



அழகுப் புதையல்களை தமிழ்நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில் முதலிடத்தில் இருப்பது கடவுளின் தேசமான கேரளா. லேட்டஸ்ட்டாக நாம் இப்போர்ட் செய்திருக்கும் ப்யூட்டி வெப்பன் மிருதுளா.பரதநாட்டியத்திலும், மாடலிங்கிலும் கில்லியான இவர் டிவி தொகுப்பாளராகவும் சேச்சி தேசத்தில் புகழ் பெற்றிருக்கிறார்.

தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த முதல் படமான ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சி’, வெளியான சூட்டோடு பெட்டிக்குள் முடங்கிவிட்டது. இருந்தாலும் மலையாளத்தில் ‘ஆயாள் நானல்ல’ படம் மூலம் இழந்த மானத்தை திரும்பப் பெற்றார்.

“சின்ன வயசுலே நீ என்னவாகப் போகிறாய் என்கிற கேள்வியை எதிர்கொள்ளாதவர்களே கிடையாது. நான் மட்டும் விதிவிலக்கா? அப்போதே ‘நான் நடிகை ஆக வேண்டும்’ என்றுதான் சொல்வேன். அப்போதிலிருந்தே சினிமாதான் என் இலட்சியமாக இருந்தது. தமிழில் நாயகிகள் மீது ரசிகர்கள் காட்டும் காட்டுத்தனமான அன்பையும், கோயில் கட்டி கொண்டாடும் பண்பையும் கண்டு வியந்து தமிழில் பெரிய ஹீரோயினாக வேண்டுமென்று ஆசைப்பட்டேன்.

எல்லா தமிழ்ப் படத்தையும் தவறாமல் தியேட்டரில் பார்த்துவிடுவேன். இப்போது பாக்ஸ் ஆபீஸ் டான்களாக வலம் வரும் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி இரண்டு பேரும் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறார்கள். அவர்களோடு இணைந்து நடிக்க ஆசை” என்று சொல்லும் மிருதுளாவுக்கு கோடம்பாக்கத்தின் கதவு மீண்டும் திறந்திருக்கிறதாம்.

- எஸ்