வண்ணாரப்பேட்டை ஸ்டெல்லா மிஸ்!



சமீபத்தில் வெளிவந்த ‘தரமணி’ படத்தில் தயாரிப்பாளர் ஜே.சதிஷ் குமாரின் மனைவியாக நடித்தவர் லிஸி ஆண்டனி. படத்தில் அந்தக் கேரக்டர் மன அழுத்தம் கொண்ட ஒன்றாக இருக்கும். படத்தின் திருப்பமாக அவருடைய கேரக்டர் இருக்கும். படம் ஹிட் அடித்த மகிழ்ச்சியில் இருந்தவரை சந்தித்தோம்.  “உங்களைப் பற்றி?”

“பூர்வீகம் கேரளா. நான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னைதான். அதுவும் வண்ணாரப்பேட்டையில். எங்கள் குடும்பம் ஆச்சாரமான ஆங்கிலோ இந்தியன் கிறிஸ்தவக் குடும்பம். வீட்ல சினிமா பார்க்க அனுமதி இல்லை. வீட்டில் டிவியில் கூட செய்திகள் மட்டுமே பார்க்க முடியும். அவ்வளவு கட்டுப்பாடு இருக்கும்.

அப்பாவுக்கு விமானப்படையில் வேலை.  பிறகு நேவியில் ஷிப்பிங்கில் எலெக்ட்ரிகல் ஆபீஸர். எனக்கும் ஆகாயத்தில் பறக்கவும், கடலில் பயணம் செய்யவும் ஆசை. என் கனவு கப்பல் கேப்டனாக வேண்டும் என்பதுதான். ஆனால் அம்மா விடவில்லை.

ஷிப்பிங்கில் ஈடுபடும் வரை நானும் சாதாரண சராசரி மனுஷியாகத்தான் இருந்தேன். இந்தியாவை விட்டு புறப்பட்டதும் நான் மொத்தமாக மாறினேன். எனக்குள் இருந்த இன்னொரு மனுஷியைக் கண்டேன். ஆரம்பத்தில் வளைகுடா நாடுகள் போன நான், பிறகு யாரும் அதிகம் போகாத ஆப்ரிக்க நாடுகளுக்கெல்லாம் போனேன்.

சினிமாவுக்கும் எனக்குமான தொடர்பு நடனம்தான். எனக்கு சின்ன வயதிலிருந்தே நடனத்தில் ஆர்வம் அதிகம். முறைப்படி கிளாசிக்கல்  கற்றுள்ளேன்.  ஒரு முறை இந்தியா வந்த போது இயக்குநர் ராம் சாரின் அறிமுகம் கிடைத்தது. அதன் மூலம் ‘தங்க மீன்கள்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் ஸ்டெல்லா மிஸ் கேரக்டரில் நடித்தேன்.

நட்புக்காகத்தான் அந்தப் படத்தில் நடித்தேன். ஆனால் அது பெரிய அளவில் மக்களிடம் போய்ச்  சேர்ந்தது. என்னை எல்லாரும் ஸ்டெல்லா மிஸ் என்று அழைக்க ஆரம்பித்தனர். இயக்குநர் ராம் இப்போதும் அப்படித்தான்  அழைப்பார். அந்தப் படத்துக்குப் பிறகு சுமார் பதினைந்து படங்களில் நடித்திருப்பேன். இப்போது ‘தரமணி’யில் நல்ல பெயர் கிடைத்துள்ளது.”
“தரமணியில் நடித்த அனுபவம்?”

“எனக்கு ராம்சார் மீதும் அவருடைய படைப்புத் திறமை மீதும் பெருமிதம் உண்டு. அவர் மீண்டும் அழைத்தபோது கண்ணை மூடிக் கொண்டு சம்மதம் சொன்னேன். காரணம், அவர் எந்தக் கதாபாத்திரத்தையும்  பேச வைத்து விடுவார். படத்தில் முக்கியமாக ஆறு தம்பதிகள் வருகிறார்கள். எல்லாரையும் மறக்க முடியாதவர்களாகக் காட்டியுள்ளார். என் கேரக்டரும் அப்படித்தான். என்னுடைய காட்சிகளை ஒரு வீட்டில் ஏழு நாட்களில் எடுத்தார்கள்.

படப்பிடிப்பில் இயல்பாக நடிக்க முடிந்தது. ராம்சார் எந்த ஒரு ஆர்டிஸ்ட்டையும் இயல்பாக நடிக்க வைப்பார். அவ்வளவு ஏன்? அழுகிற காட்சிகளில் கூட கிளிசரின் தர மாட்டார். நினைத்து அழுகை வர வைக்கும்படி வாழ்க்கையில் கோபமோ, துக்கமோ  எதுவுமே இல்லையா என்பார்.
நான் கிளிசரின் போடாமல் தான் அழுதேன்.

அவர் எப்போதும் தன் படக் குழுவை ஒரு குடும்பமாக உணர வைப்பார். யாருக்கும் எந்த அசெளகரியமும் இருக்காது. ஆண்ட்ரியா மற்றும் அஞ்சலி ஆகியோருடன் சேர்ந்து நடித்தது நல்ல அனுபவம். இப்படி ‘தரமணி’ மறக்கமுடியாத  அனுபவமாக அமைந்தது. முகம் தெரியாதவர்களிடமிருந்து என் நடிப்பை ‘சூப்பர்!  சூப்பர்!’  என்று பாராட்டி ஃபேஸ்புக், மெசேஜஸ் என்று இன்பாக்ஸில் பாராட்டுகள் குவிந்து வருவது பரவசம் தருகிறது.”

“இந்தப் படம் பற்றி பல்வேறு கருத்துகள் சுழன்று அடிக்கின்றன. ஒரு பெண்ணாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
“படத்தில் பெண்களின் பிரச்சினைகளை, குமுறல்களை, வலிகளை, ஏக்கங்களை தைரியமாக ராம் சார் சொல்லியிருக்கிறார். பெண்களின் குரலாக அவர் பேசியிருக்கிறார். இது பலரும் சொல்லத் தயங்கும் பிரச்சினையாகும். ஒரு ஆண் தவறு செய்தால் மன்னித்து ஏற்றுக் கொள்கிற சமூகம்.

ஒரு பெண் தவறு செய்யும்போது ஏற்றுக் கொள்வதில்லை. பாதிக்கப்படும் பெண் யாரோ ஒருவரின் மகள்தானே? யாரோ ஒருவரின் அக்காதானே? என்று அழகம் பெருமாள் பாத்திரம் மூலம் பேசுவது மனதைத் தொட்டது. பெண்களின் மனக்குரலை அவர் பேசியிருக்கிறார். அவர் குரலை ஒரு பெண்ணாக நான் வழிமொழிகிறேன்.”
“நிஜத்தில் நீங்கள் எப்படி?”

“படத்துக்கும் நிஜத்துக்கும் நேர் எதிர் கேரக்டர் நான். தாய் சொல்லைத் தட்டாத செல்லப் பிள்ளையாக இருந்தாலும் சுயத்தை விரும்பும் சுதந்திரப் பறவை. படிப்பு முடிந்ததும் ஷிப்பிங் துறையில் கால் பதித்தேன். பிசினஸ் சம்பந்தமாக உலக உருண்டையில் உள்ள பாதி நாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன். உன்னால் முடியும் என்பதுதான் என் வாழ்க்கையின் தாரக மந்திரம். அந்த வகையில் எனக்கு தன்னம்பிக்கை ஜாஸ்தி. லிஸி அகராதியில் முடியாது என்ற பேச்சுக்கு இடமில்லை.”

“இன்ஸ்பிரேஷன்?”
“உண்மையைச் சொன்னால் அப்படி யாருமில்லை. தோன்றவுமில்லை. நான் நானாக மட்டுமே இருக்க ஆசை. யாரையும் பின்பற்ற ஆசையில்லை. நடிக்கும் பாத்திரத்தின் நீளம் அளவு பற்றி எனக்குக் கவலையில்லை. பாசிடிவ் நெகடிவ் பற்றிப் பயமில்லை. ஒரு காட்சியில் வந்தாலும் அழுத்தமாக மனதில் பதிய வேண்டும்.”

“அடுத்து?”
“ராமின் அடுத்த படமான  ‘பேரன்பு’, ‘சூ மந்திரக்காளி’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பரியேறும் பெருமாள்’, ‘மூடர் கூடம்’ ஒளிப்பதிவாளர்  டோனி இயக்கும் படம் உள்பட கைவசம் நிறைய படங்கள் உள்ளது.”

- சுரேஷ்ராஜா