இசையமைப்பாளர் செளந்தர்யனின் 50வது படம்!



புதுமுகங்கள் விஷ்வா, நீரஜா நாயகன், நாயகியாக நடிக்கும் படம் ‘கதிர்’. வில்லனாக சங்கிலி வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில், எட்டு முறை குங்ஃபூ-வில் பிளாக் பெல்ட் வாங்கிய மாஸ்டர் ராஜநாயகம் நடிக்கிறார். ‘சேரன் பாண்டியன்’, ‘சிந்துநதி பூ’ உள்பட ஏராளமான படங்களுக்கு இசை அமைத்த செளந்தர்யன் இசையமைக்கிறார்.

இது இவருக்கு ஐம்பதாவது படம். இயக்கம் தோழர் அரங்கன். விமலா ராஜநாயகம் தயாரித்திருக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், சமூக சேவகருமான விமலா ராஜநாயகத்திற்கு அஜந்தா பைன் ஆர்ட்ஸ் சார்பில் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

‘‘சமூக அக்கறையோடு வாழும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் காதல் கடந்து போனால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் ஒரு வரிக் கதை. யதார்த்தமான இந்தக் கதையை தமிழ் கலாச்சார பண்பாட்டோடும், பெண்கள் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அளவுக்கு ஜனரஞ்சகமான படமாகவும் உருவாக்கியுள்ளோம். தற்போது நான் வாங்கியிருக்கும் விருது எனக்குக் கிடைத்த ஊக்கமாக எடுத்துக் கொண்டு என் அளவில் சமூக மாற்றத்துக்காக போராடுவேன்’’ என்கிறார் விமலா ராஜநாயகம்.

- எஸ்