நிர்வாணப்படமில்லை; அரை நிர்வாணம்தான்! இயக்குநர் ஆவேசம்



இப்போதுதான் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ஒரு குத்து குத்திவிட்டு மறைந்தது. அடுத்து வாலிப வயோதிக அன்பர்களை தியேட்டருக்கு வரவழைத்திருக்கிறது ‘x வீடியோஸ்’. இயக்குநர் ஹரியிடம் உதவியாளராக இருந்த சஜோ சுந்தரிடம் அனைவரும் அரிவாளை எதிர்பார்க்க, தடாலடியாக ஆபாச இணையதளங்கள் குறித்த விழிப்புணர்வு படத்தை இயக்கியிருக்கிறார்.

கலர் ஷாடோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்த இதில் அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா போன்ற புதுமுகங்கள் துணிச்சலாக நடித்திருந்தார்கள். பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் இல்லாமல் தமிழ், இந்தி என இரு மொழிகளில் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே பலமான வரவேற்பு கிடைத்திருக்கிறது.

தனது முதல் அனுபவத்தை ‘வண்ணத்திரை’யிடம் பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் சஜோ சுந்தர்.‘‘இன்று இணைய தளத்தில் நிர்வாணப்படங்களை வெளியிட்டு சமூகத்தைச் சீரழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது ‘x வீடியோஸ்’ என்கிற இணைய தளம். இந்த இணையதளம் மூலம் மக்களின் வாழ்க்கையில் எப்படி இவர்கள் விளையாடுகிறார்கள் என்பதைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம்.

அந்தவகையில் இது முழுக்க முழுக்க ‘x வீடியோஸ்’ என்கிற இணையத்தளத்திற்கு எதிரான படம். இப்போது தரமான கதையை படமாக்கினாலும் தலைப்புதான் ஒரு படத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கிறது. ரசிகர்களை ஈர்க்கும் விதமான தலைப்பாக இருக்கட்டும் என இந்த டைட்டிலை வைத்தோம். இருந்தாலும் கூட, ‘x’ என்றால் தவறு என்கிற கருத்தைத்தான் இதில் சொல்லியிருக்கிறோம். இது முழுக்க பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக இருந்தது என்று விமர்சகர்கள் சொன்னதை என் முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.

இந்தப் படத்தில் நிர்வாணக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள். அது முற்றிலும் தவறு. அரை நிர்வாணக் காட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அவை கூட கதையின் தேவை கருதித் தானே தவிர, எதுவும் வலிந்து திணிக்கப்படவில்லை.

இந்தப் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் யாரும் இரண்டாந்தரப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அல்ல. எல்லோருமே கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுக்கும் நடிக்கும்போது ஆரம்பகட்ட தயக்கங்கள் இருந்தன. ஆனால் மக்களுக்கெதிராக நடக்கும் இதுபோன்ற தவறுகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தினால் கதைக்காக மட்டுமே அவர்கள் இந்தப் படத்தில் முழு மனதுடன் ஒப்புக்கொண்டு நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தை சென்சார் போர்டிலுள்ள ஏழு பெண் உறுப்பினர்களும் பார்த்தார்கள். குறிப்பாக சென்சாரில் முக்கிய பொறுப்பில் உள்ள நடிகை கௌதமி இந்தப் படத்தை பாராட்டியதோடு, ‘இதுபோன்ற படம் வெளிவரவேண்டும்’ என வாழ்த்து சொல்லி இந்தப்படத்தை அனுமதித்தார்கள்.
‘இன்னும் நிறைய தகவல்களுடன் இந்தப் படத்தின் 2ஆம் பாகத்தையும் நீங்கள் எடுக்கவேண்டும்’ என ஊக்கமும் கொடுத்தார். இந்தப் படத்தை  இந்த அளவிற்கு மக்கள் பார்த்தால் போதுமானது எனக் கூறி, ஒருசில காட்சிகளை மட்டும் சென்சார் விதிகளுக்கு உட்பட்டு நீக்கினார்கள். மற்றபடி ‘இன்றைய சூழலில் அவசியம் சொல்லப்படவேண்டிய கருத்துள்ள முக்கியமான படம் இது’ என்று பாராட்டினார்கள்.

கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்ட சைபர் உலகம் நமக்குத் தெரியாமல் இயங்கி வருகிறது. அது நம் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, நம்மை அது 24 மணி நேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதன் கண்ணில் நமது அந்தரங்கம் சிக்கிக் கொண்டால் எல்லாமே பகிரங்கம் தான். நம் வீட்டில் குளியல் அறையிலோ படுக்கையறையிலோ நம் ஸ்மார்ட் போனை வைத்துவிட்டால் போதும் அதிலுள்ள வசதி மூலம் எங்கிருந்தோ ஒருவன் உங்கள் கேமராவை இயக்க முடியும். படம் பிடிக்க முடியும்.

இந்த அதீத தொழில்நுட்ப பயங்கரம் யாருக்கும் தெரிவதில்லை. இதற்கெல்லாம் பின்னணியில் இந்த ‘x வீடியோஸ்’ என்கிற இணையதளத்திற்கு பக்கபலமாக செயல்படுவை மொபைல் ‘ஆப்’கள் (Apps ) தான்.

இன்று தொட்டதற்கெல்லாம் ஆப் உபயோகப்படுத்துகிறார்கள். அவற்றை உங்கள் மொபைல் போனில் உள்ளீடு செய்யும்போதே உங்கள் போனில் உள்ள உங்களது அனைத்து தகவல்களையும் எடுத்துக்கொள்வோம் எனக் கூறி உங்கள் அனுமதியுடன்தான் அவர்கள்  உங்கள் அந்தரங்கத்தில் மூக்கை நுழைக்கிறார்கள். மிகப்பயங்கரமான தகவல் திருட்டை உங்கள் அனுமதியுடனேயே அவர்கள் செய்கிறார்கள் என்பதுதான் இதில் வேதனையான விஷயம்.

இதன் பின்னணியில் கோடிக்கணக்கில் வர்த்தகம் இருக்கிறது. இன்று தொண்ணூறு சதவீதம்  மொபைல் ‘ஆப்’கள் (Apps ) பின்னணியில் இந்த  ‘x வீடியோஸ்’ என்கிற இணையதளம்  முக்கிய கருவியாக  இருக்கிறது.

பொத்தாம் பொதுவாக இந்தக் குற்றச்சாட்டை நான் வைக்கவில்லை. இல்லை, நான்  சொல்வது தவறு என சொல்லிக்கொண்டு யாரையாவது வரச்சொல்லுங்கள் பார்ப்போம். அப்படி இதுவரை இந்தக் கருத்தை எதிர்த்து ஒருவரும் வரவில்லை. வரவும் மாட்டார்கள். காரணம் அதுதான் உண்மை.

இயக்குநராக எனக்கு இது முதல் படம். இந்தப் படத்தின் மூலம் வருமானம் சம்பாதிக்கவேண்டும் என்பது என் நோக்கம் கிடையாது. இந்தப் படத்திற்கு நான் செலவழித்த பணம் திரும்ப வந்தாலே, அதுவே போதுமானது.  இந்தப் படத்தைப் பார்க்கும் மக்கள் இதன் பின்னராவது கொஞ்சம்  உஷாராகி விடுவார்கள் என்றால் அதுதான் எனக்கு லாபம்.

‘இருட்டு அறையில் முரட்டுகுத்து’ படத்துடன் இதனை ஒப்பிட வேண்டாம். அந்தப்படத்தைப் பார்ப்பதால் சும்மா சிரித்துவிட்டுப் போவதை தவிர வேறு என்ன லாபம் இருக்கிறது? ஆனால்  இந்த ‘x வீடியோஸ்’ படத்தை பார்க்கிற ரசிகர்களுக்கு இதில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு தகவலும் லாபம்.

இது ஆபாசப்படம் அல்ல; ஆபாசத்தைப் பற்றிய படம். அசிங்கங்களைப் பேசுவது அசிங்கம் என் நாம் நினைத்துக்கொள்வதால்தான் நாட்டில் பல அசிங்கங்கள் நடக்கின்றன என்பதைக் குறிப்பிடுகிற படம் இது.  இதுவரை படம் பார்த்த அனைவரிடமும் இருந்து பாராட்டுகள் மட்டுமே குவிந்துள்ளன. மக்கள் கொடுத்த வரவேற்பில் இரண்டாவது பாகம் எடுக்கும் ஐடியா தூண்டப்பட்டுள்ளது. என்னுடைய அடுத்த படமும் சமூகத்துக்கான படமாகத்தான் இருக்கும்.’’

- சுரேஷ்ராஜா