ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!



தமிழ்ப் படங்களில் பெரும்பாலும் தமிழ் தெரியாத வில்லன்கள்தான் இடம்பெறுவார்கள். தப்பித் தவறி ஜெயிக்கும் தமிழ் வில்லன்களில் ஒருவர் மதுராஜ்.‘‘எனக்கு மெடிக்கல் பிசினஸ். இயக்குனர் வி.இசட். துரை என்னுடைய நெருங்கிய நண்பர்.
‘நேபாளி’ படத்தில் லைன் புரடியூசர் என்கிற அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அதற்குப் பிறகு ஏற்பட்ட சினிமா தொடர்புகளால் நட்டிகுமார் இயக்கிய ‘எவனவன்’ படத்தில் துப்பறியும் போலீஸ் வேடம் கிடைத்தது.  விஜய் சேதுபதி நடித்த ‘கருப்பன்’ படத்திலும் இயக்குநர் பன்னீர் பேசும்படியான ஒரு கேரக்டரைக் கொடுத்தார்.

‘அங்காடித் தெரு’ மகேஷ் நடிப்பில் விஜய்மோகன் இயக்கும் படத்தில் கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர், போலீஸ் இன்வெஸ்டிகேஷன் ஆபீசர் என மூன்று பரிமாணங்களில் நடிக்கிறேன்.

சித்தார்த் நடிக்க உள்ள ஒரு படத்தில் முக்கிய கேரக்டர் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சாய்சேகர். ‘ரம்மி’ பாலகிருஷ்ணன் இயக்கும் ‘கதாயுதம்’ படத்தில் லீடிங் லாயர் வேடத்தில் நடிக்கிறேன். ரகுவரன் மாதிரி பேர் எடுக்கணும். அதுதான் என் ஆசை, லட்சியம். உள்ளூர் ஆளுக்கும் சினிமா சந்தையிலே விலை இருக்குங்கிறதை நிரூபிக்க நான் எந்த லெவலில் இறங்கி நடிக்கவும் தயாராக இருக்கிறேன்’’ என்கிறார் மதுராஜ்.

- எஸ்