கலாட்டாவும் கலவரமும்தான் இந்த சீமத்துரை!



‘சீமத்துரை’ என்னும் பெயரைக் கேட்டாலே நமக்கு கிராமங்களும் அங்கே வெள்ளந்தியாகத் திரியும் இளைஞர்களும் தான் நினைவுக்கு வருவார்கள். கிராமங்களில் வாழும் ஒவ்வொரு இளவட்ட வாலிபருமே சீமத்துரை தான். அப்படி எங்கள் பகுதியான பட்டுக்கோட்டையைச் சுற்றி நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்துதான் ‘சீமத்துரை’ படத்தை இயக்கியுள்ளேன் என்கிறார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன். அவரிடம் பேசினோம்.

“கிராமம்தான் கதைக்களமா?”

“காலம் மாறினாலும் பிரச்சினைகள் மட்டும் மாறாது என்பார்கள். அந்த மாதிரி இன்றைக்கும் கிராமங்களில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவானதுதான் ‘சீமத்துரை’ படம்.

கிராம மக்களுக்கு அருவா, கத்தி மட்டும் ஆயுதம் அல்ல; பாசமும் ஒரு ஆயுதம் தான். பாசத்துக்கும் கர்வத்துக்கும் இடையே நடக்கிற போராட்டத்தை வாழ்வியலோடு பதிவு செய்திருக்கிறேன். சீமத்துரை என்னும் தலைப்புக்கேற்றாற்போல் காதல், கலாட்டா, கலவரம் என்று எல்லாம் கலந்த ஒரு படமாக இந்த ‘சீமத்துரை’ இருக்கும்.”

“நடிகர்கள்?”

“கீதன் கதாநாயகனாக நடித்துள்ளார். வர்ஷா நாயகி. சரிதாவின் தங்கையும் நடிகையுமான விஜி சந்திரசேகர் கீதனின் அம்மாவாக நடித்துள்ளார். ஊர் ஊராக சென்று கருவாடு விற்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜி மேடத்துக்கு இந்தப் படம் திருப்புமுனையாக அமையும். ‘நான் மகான் அல்ல’ மகேந்திரன், ‘கயல்’ வின்சென்ட் ஆகியோர் கீதனின் நண்பர்களாக நடித்துள்ளனர்.  ஆதேஷ் பாலா, ‘மதயானைக் கூட்டம்’ காசி மாயன், மேடைக் கலைஞர்களான நிரஞ்சன், பொரி உருண்டை சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.”

“டெக்னிக்கல் டீம்?”

“ஜோஸ் ஃப்ராங்க்ளின் இசையமைத்துள்ளார். திருஞானசம்பந்தம் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். புவன் மீடியா வொர்க்ஸ் சுஜய் கிருஷ்ணா தயாரித்துள்ளார்.”“கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்தினீர்களாமே?”

“தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையைச் சுற்றி 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். பட்டுக்கோட்டையைச் சுற்றி உயர்ந்து நின்ற தென்னை மரங்களை படத்தில் முக்கியமாக பதிவு செய்தோம்.

ஆனால் அந்த தென்னை மரங்களை கஜா புயல் சுத்தமாக அழித்துவிட்டது. நாங்கள் அழகாக படம் பிடித்த பகுதிகள் இன்று அலங்கோலமாகக் கிடப்பதைப் பார்க்கும்போது படக்குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் வேதனை ஏற்பட்டுள்ளது. அந்த கிராமத்து மக்கள் எங்களை அவர்கள் குடும்பங்களில் ஒருவராக நடத்தினார்கள். அவர்கள் மீண்டு எழுந்து வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

- ராஜா