‘பேட்ட’யை மிஸ் பண்ணிட்டேன்!
மீரா மிதுன் ஆதங்கம்
சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் கலையரச னுக்கு ஜோடியாக நடித்தவர் மீரா மிதுன். அதற்கு முன்பே ‘8 தோட்டாக்கள்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்தப் படத்தின் மூலம் இன்னும் அதிகம் கவனிக்கப்பட்டார்.சினிமாவிற்குத் தான் இவர் புதியவர்.
ஆனால் மாடல் உலகில் கிட்டத்தட்ட இவரை ஒரு நயன்தாரா என்றே சொல்லலாம். சர்வதேச அளவில் மோஸ்ட் வான்டட் தென்னிந்திய மாடல் பட்டியலில் முதல் சாய்ஸாக இருப்பவர் மீரா மிதுன்தான். ‘மிஸ் செளத் இந்திய அழகி’ பட்டம் பெற்றிருக்கும் மீராவிடம் பேசினோம். “பொதுவா மாடல் அழகிகள் ஆங்கிலத்தில்தான் பேசுவாங்க. நீங்க தமிழில் பொளந்து கட்டுறீங்களே?”
“நான் பக்கா சென்னை பொண்ணு சார். படிப்பு, நடனம் என்று மட்டுமே இருந்த என்னுடைய வாழ்க்கையை என்னுடைய உயரமும், நிறமும்தான் விளம்பர உலகத்தில் ஒரு மாடல் அழகியாக காண்பித்தது. என்னோட தோற்றம்தான் ஹைஃபையா இருக்குமே தவிர, மனசளவில் நான் பச்சைத் தமிழச்சி.”
“மாடலிங்கில் எப்படி ஆர்வம்?”
“எங்கேயாவது பொது இடத்தில் என்னைப் பார்க்குறவங்க எல்லாரும் ‘நீங்கள் மாடலா?’ எனக் கேட்கவே, என்னை அறியாமலேயே மாடலிங் மீதான ஆர்வம் தூண்டப்பட்டது. நான் மட்டுமல்ல. என்னோட அப்பாவும் ஃபேமஸ்தான்.‘மிஸ்டர் மெட்ராஸ்’, ‘மிஸ்டர் தமிழ்நாடு’ ஆகிய பட்டங்களை வென்றவர். அதனாலேயோ என்னவோ, நான் மாடலிங்கை தேர்ந்தெடுத்தப்போ வீட்டில் பெரிய எதிர்ப்பில்லை. அந்த வகையில் மாடலிங்கில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டதிலும் அதில் நுழைந்து சாதித்ததிலும் பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை”
“முதல் விளம்பரப்படம்?”
“அரசு துணிக்கடை விளம்பரத்தில்தான் என் முதல் விளம்பரப் படம் வெளியானது. அதில் ஆரம்பித்து படிப்படியாக பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து குறுகிய காலத்தில் மாடலிங் துறையில் புகழின் உச்சியை எளிதாகத் தொட முடிந்தது.”
“சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?”
“என்னை சந்திக்கும் பலரும் சினிமாவில் நடிக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால் நான் அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. ‘கிரகணம்’ படத்தில் ஒரு மாடலாகவே நடித்திருப்பேன். அதன்பின் ‘8 தோட்டாக்கள்’ படத்தில் கொஞ்சம் நெகடிவ் சாயல் கலந்த ஒரு கேரக்டரில் நடித்தேன். தொடர்ந்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தேன்.
அந்தப் படத்தில் என்னுடைய கேரக்டருக்கு பாராட்டுகள் கிடைத்தாலும், அடுத்தடுத்து தேடி வந்த பல பட வாய்ப்புகள் திருப்திகரமாக அமையவில்லை. தற்போது செலக்டிவாக சில படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். 2019ல் வெளியாக உள்ள அந்தப் படங்கள் திரையுலகிலும் என் மீது மிகப்பெரிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் என்ற நம்பிக்கை உள்ளது.”
“எப்படிப்பட்ட கேரக்டர்களில் நடிக்க உங்களுக்கு விருப்பம்?”
“அப்படியெல்லாம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதை கதாநாயகியா, இல்லை குணச்சித்திர நடிகையா என்று கேட்டால் கூட அந்தக் கேள்விக்குள் நான் போக விரும்பவில்லை. காரணம், ஒரு பெண் நடிக்க வந்துவிட்டாலே அவள் கதாநாயகிதான். கதையின் மையக்கருவாக அல்லது கதையின் திருப்பத்திற்கு வழிவகுக்கும் முக்கிய கேரக்டர் என எதுவாக இருந்தாலும் அதில் எனது பங்களிப்பை சிறப்பாகக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.”
“சமீபத்தில் உங்களைப் பத்தி ஒரு விளம்பர சர்ச்சை ஓடுதே?”
“ஆமாம். சார். நகை விளம்பரம் ஒன்றில் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்ததைப் பற்றி எதிர்மறையாக நிறைய பேர் சோஷியல் மீடியாவில் விமர்சிக்கிறார்கள். மாடலிங் என்பது ஒரு கலை. அதை அந்தக் கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும். அந்தப் படத்தை எடுத்த பிரபல போட்டோகிராபர் கார்த்திக் சீனிவாசன் இதில் நடிக்குமாறு என்னை அணுகியபோது, நீங்கள் நடிக்காவிட்டால் நைஜீரியா அல்லது ஆப்பிரிக்கன் மாடல் ஒருவரைத்தான் இதில் நடிக்க வைக்க வேண்டும்.
ஆனால் இயல்பாகவே உங்களுக்கு அந்த உருவம் சரியாகப் பொருந்துகிறது என்றபோது அந்த வாய்ப்பைத் தட்டிக் கழிக்க எனக்கு மனம் வரவில்லை. அந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு என் குடும்பத்தினர் உள்பட பலரும் என்னைப் பாராட்டினார்கள்.”
“சினிமாவா, மாடலிங்கா? எது உங்கள் சாய்ஸ்?”
“மாடலிங், சினிமா இரண்டிலுமே சமமான கவனம் செலுத்தவே விரும்புகிறேன். மாடலிங்கில் இருந்தபோதே என்னை ஊக்கப்படுத்தி அவ்வப்போது உற்சாகம் கொடுத்த நடிகர் விஷால், சினிமாவிற்கு வருமாறு முன்பே அழைப்பு விடுத்திருக்கிறார். சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைச்சது மறக்க முடியாதது. லுக் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் வரை சென்றுவிட்டேன். ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த வாய்ப்பு கைகூடாமல் போய்விட்டது. எனக்குப் பதிலாக பின்னர் அந்த கேரக்டரில்தான் திரிஷா நடித்திருக்கிறார்.”
“சரி. ரஜினி படத்தைத்தான் விட்டீர்கள். இப்போ விக்ரம் படவாய்ப்பையும் இதேமாதிரி விட்டுட்டீங்களே?”
“நமக்கு எது கிடைக்கணுமோ அதுதான் கிடைக்கும். கமல் சார் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் சார் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமானேன். அதுவும் சில காரணங்களால் கடைசி நேரத்தில் கையை விட்டு விலகிப்போனது. விலகிப்போன வாய்ப்புகள் மீண்டும் வேறு வடிவத்தில், வேறு படங்களில் என்னைத் தேடிவரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.’’
- சுரேஷ்ராஜா
|