இன்னமும் துடிக்குது இதயம்!
மின்னுவதெல்லாம் பொன்தான்-35
காதல் படங்களை நேர்த்தியாக படைக்கும் படைப்பாளிகள் ஒரு சிலர்தான். எல்லோருக்கும் காதல் படங்கள் கைவந்த கலையாக இருப்பதில்லை. ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பாரதி ராஜா, டி.ராஜேந்தர் உள்ளிட்ட ஒரு சிலரே காதல் படங்களில் காவியம் படைத்தவர்கள். இந்த வரிசையில் வருகிறவர்தான் கதிர்.திருநெல்வேலி மாவட்டம் கீழக்கரையில் இருந்து சென்னை வந்த கதிருக்கு சினிமாதான் எல்லாமுமாக இருந்தது.
சினிமாவில் போஸ்டர் டிசைனராக தன் வாழ்க்கையை தொடங்கினார். ‘மூன்றாம் பிறை’, ‘அந்த 7 நாட்கள்’, ‘டார்லிங் டார்லிங்’, ‘பகல் நிலவு’ உள்ளிட்ட பல படங்களுக்கு போஸ்டர் டிசைனராக இருந்தவர். 1991ம் ஆண்டு முரளி, ஹீரா நடித்த ‘இதயம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அப்போது முரளி பெரிய ஹீரோ. படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் பெரிய நிறுவனம். முரளியின் அடையாளங்களில் ஒன்றாக இன்றைக்கும் இருப்பது இந்தப் படம்தான். காதலை கடைசி வரை சொல்லாமலேயே செத்துப் போனவனின் வாழ்க்கை அந்தப் படம். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. யார் இந்த இளைஞன் என்று சினிமா திரும்பிப் பார்த்தது.
அடுத்து அவர் இயக்கிய படம் ‘உழவன்’. பிரபு, பானுப்ரியா நடித்தனர். காதல் படம் மட்டுமல்ல, வேறு களத்திலும் தன்னால் படம் தர முடியும் என்பதற்காக கதிர் இயக்கிய படம் இது. ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதனால் மீண்டும் காதலுக்கே திரும்பினார் கதிர்.
அடுத்து அவர் இயக்கிய ‘காதல் தேசம்’, வெற்றி தேசமாக அமைந்தது. அப்போதைய பிரமாண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரித்தார். அப்பாஸ், வினித், தபு நடித்திருந்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. கதிரை அசைக்க முடியாத காதல் இயக்குநராக்கியது ‘காதலர் தேசம்.’ அடுத்து அவர் இயக்கிய ‘காதலர் தினம்’, இந்தியிலும் தயாராகி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்துமே காதல் தேசிய கீதமாக அமைந்தன. குணால், சோனாலி பிந்த்ரே என வடக்கத்தி முகங்களை வைத்து வடக்கத்தி பின்னணியிலேயே உருவான காதல் படம் இது. வெள்ளி விழா கொண்டாடிய படம். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்தை உயர்த்திப் பிடித்த படம். அந்தக் காலத்திலேயே 10 கோடி லாபம் சம்பாதித்த படம்.
முரளி மாதிரி நம் மண்சார்ந்த நடிகர்களைக் கொண்டும் குணால், தபு, சோனாலி பிந்த்ரே, அப்பாஸ் என மண்சாரா முகங்களைக் கொண்டும் காதல் வெற்றிகளைக் கொடுத்தவர் கதிர்.ஆனால், அதே காதல்தான் அவரது வேகத்துக்கு அணையை கட்டியது, ‘காதல் வைரஸ்’ மூலமாக. ரிச்சர்ட், தேவி விஜயகுமார் நடிப்பில் அவரே தயாரித்து இயக்கிய படம் தோல்வியைத் தழுவியது.
அவரைப்போலவே திரையுலகமும் அதிர்ச்சி அடைந்தது. இங்கு வெற்றி மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் மூன்று படம் தொடர் வெற்றி கொடுத்தவரை ஒரு தோல்வி கொடுத்ததும் சினிமா வசதியாக மறந்து விட்டது.
மீண்டும் எழுந்து நிற்க பல முயற்சிகள் செய்தார் கதிர். பல வருடங்களுக்குப் பிறகு விநய் நடிப்பில் ‘மாணவர் தினம்’ என்ற ஒரு படத்தை இயக்க முயற்சித்தார். அது பலனளிக்கவில்லை. ஷாம் நடிப்பில் ‘கோடை விடுமுறை’ என்ற படத்தை இயக்க விரும்பினார். அதுவும் நடக்கவில்லை. கதிரின் திறமையும், கற்பனையும் கொஞ்சமும் குறைந்து விடவில்லை. ஆனாலும் சினிமா அவரை விலக்கி வைத்தது. இந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி அவரால் ஒரு நல்ல காதல் படம் கொடுக்க முடியும். அதற்கான முயற்சியில் அவர் இப்போதும் இருக்கிறார். அந்த நாள் விரைவில் வரும் என்று நம்புவோம்.
(மின்னும்)
●பைம்பொழில் மீரான்
|