தோழர் வெங்கடேசன்



கண்களை கசியவைக்கும் தோழர்!

தமிழ் சினிமா இதுவரை பாத்திராத ஒரு களத்தோடு வெளியாகியுள்ளது இந்த ‘தோழர் வெங்கடேசன்’.காஞ்சிபுரம்  அருகே உள்ள ஒரு கிராமத்தில் சோடா கம்பெனி நடத்துகிறார் நாயகன் ஹரிசங்கர்.  அவர் தினமும் உணவு சாப்பிடும் தள்ளுவண்டி கடைக்காரர் ஷர்மிளா இறந்து போனதால் ஆதரவில்லாமல் தவிக்கும் அவரது மகள் மோனிகா சின்னகொட்லாவை தனது வீட்டுக்கு அழைத்து வருகிறார். இருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது.

இந்தநிலையில் அரசு பேருந்தால் ஏற்படும் விபத்தில் ஹரிசங்கரின் இரண்டு கைகளும் போய்விடுகின்றன. கை இழந்த ஹரிசங்கரின் சோடா நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தும் மோனிகா, அவருக்கு எல்லாவிதத்திலும் உதவியாகவும் இருக்கிறார். இன்னொரு பக்கம் ஹரிசங்கர் இழப்பீடு கேட்டு அரசு போக்குவரத்துத் துறை மீது வழக்கு தொடர்கிறார். ஆனால் இழப்பீடு கிடைக்க தாமதமாகிறது.

இழப்பீட்டுப்  பணத்துக்காக ஹரிசங்கர் எப்படியெல்லாம் போராடுகிறார், அதன் மூலம் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதே மீதிக்கதை.நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஹரிசங்கர், அப்பாவி இளைஞராக இயல்பான நடிப்பின் மூலம் கவர்கிறார். இரண்டு கைகளையும் இழந்தபிறகு இழப்பீட்டுக்காக போராடும் ஹரிசங்கர்,  நடிகராக மட்டும் அல்லாமல் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக படம் முழுவதும் வந்து கேரக்டரை மெருகேற்றியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மோனிகா சின்னகொட்லாவுக்கு வசனங்கள் குறைவு என்றாலும், முகபாவனைகள் மூலமாகவே ஹரிசங்கர் மீதுள்ள காதலை மிக அழகாக வெளிப்படுத்துகிறார்.  பல இடங்களில் அமைதியாக இருந்தே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்.போலீஸ் கான்ஸ்டபிள், ஹரிசங்கருடன் பஸ் ஓட்டுபவர், நாயகனின் நண்பர்கள் என்று படத்தில் நடித்தவர்கள் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற கச்சிதமான தேர்வாக இருக்கிறார்கள்.

சகிஷ்னாவின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும், காதுகளை காயப்படுத்தாமல் மென்மையாக பயணித்திருக்கின்றன. குறிப்பிட்ட சில லொக்கேஷன்களில் முழுப் படத்தையும் முடித்திருந்தாலும் காட்சிகளில் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் வேதா செல்வம், படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

உண்மைச் சம்பவங்களைத் தொகுத்து இந்தப்படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கும் இயக்குநர் மகாசிவன், சட்டம் ஏழைகளுக்கு எட்டாக் கனி என்பதோடு, நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அரசு எந்திரம் சாமானியர்களை எப்படி வாட்டி வதைக்கிறது என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்து இதயத்தை கனக்க வைக்கிறார்.