நல்ல விஷயம் 4



வளாகம்

அறிய வேண்டிய மனிதர்: விவேக் மூர்த்தி
 
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவர் ஜூலை 10, 1997ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். இவர் பயோகெமிக்கல் சயின்ஸ் பாடப்பிரிவில் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், யேல் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின் விஷன்ஸ் வேர்ல்டு வைடு என்ற தன்னார்வ அமைப்பை அமெரிக்காவில் உருவாக்கி எயிட்ஸ் குறித்த ஆய்வை மேற்கொண்டு அமெரிக்கா மற்றும் இந்திய மக்களுக்குச் சேவை செய்தார்.

நவம்பர் 2013ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரலாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அமெரிக்காவின் 19 வது சர்ஜன் ஜெனரலாக அமெரிக்க அரசாங்கத்திற்கும் , பப்ளிக் ஹெல்த் கேர் சர்வீஸின் வைஸ் அட்மிரலாக அமெரிக்க மக்களுக்கும் சேவையாற்றினார்.

அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரலான முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற பெருமைக்குரிய இவர் செய்த சேவையைக் கவுரவிக்கும் பொருட்டு அமெரிக்க அரசாங்கம் இவருக்குப் பல விருதுகள் வழங்கிப் பெருமை சேர்த்துள்ளது. இவரைப்பற்றி மேலும் அறிய https://en.wikipedia.org/wiki/Vivek_Murthy

வாசிக்க வேண்டிய வலைத்தளம் : https://winmani.wordpress.com
 
முழுக்க முழுக்க தொழில்நுட்பச் செய்திகளால் அலங்கரிக்கப்பட்ட இத்தளமானது தினம் தினம் புதுப் புது தொழில்நுட்பங்களை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. நாள்தோறும் அப்டேட் செய்யப்படும் தொழில்நுட்பங்களை வெறும் செய்திகளாக மட்டும் தராமல் அதன் நிறைகுறைகளைக் கூறி கட்டுரைகளாகத்  தொகுத்து வாசிப்பவர்களுக்கு எளிதாகப் புரியும்படியாக விளக்கப்பட்டிருப்பது சிறப்பு.

இணையதளம் உருவாக்குவதற்கான வழிகாட்டுதல், தொழில்நுட்பச் செய்திகளின் களஞ்சியம், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இ-புக், அன்றாடப் பதிவுகளை இ-மெயிலில் பெறும் வசதி என இத்தளத்தின் சேவைகள் அனைவருக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டிய புத்தகம் : உங்கள் விதியை நீங்களே எழுதலாம் விக்கிரவாண்டி வி.ரவிச்சந்திரன்சாதனைபுரிவதற்கான சக்தி அனைவருக்குள்ளும் இருக்கிறது. அந்தச் சக்தியை எவர் திறமையாகப் பயன்படுத்திக் கொள்கிறாரோ அவரே வெற்றியாளராகத் திகழ்கின்றார் என்பதை எளிய நடையில் விவரிக்கிறார் இந்நூலின் ஆசிரியர் விக்கிரவாண்டி வி.ரவிச்சந்திரன்.

உங்களுக்குள் இருக்கும் சக்தி எப்படிப்பட்டது? அதை எப்படி அறிவது? அதைப் பயன்படுத்தி எப்படி வெற்றி பெறுவது? என்பதை இந்நூல் அழகாக விளக்குகிறது. நமக்குத் தோல்வி ஏற்படும்போது அதை எப்படி எதிர்கொள்வது? அந்தத் தோல்வியையே எப்படி வெற்றிக்குத் துணையாக அமைத்துக்கொள்ள வேண்டும்? மாற்றங்கள் ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு மாற்றத்திற்கும் வெற்றிக்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றியும் விரிவாக உதாரணங்களோடு விளக்கி வழிகாட்டியாகச்  செயல்படுகிறது இந்நூல். (வெளியீடு: மேகதூதன் பதிப்பகம், 7, சின்னப்பா ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600 005. விலை: ரூ.120. தொடர்புக்கு: 044-42155831)

பார்க்க வேண்டிய இடம்:தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்

தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில். கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இச்சைவ கோயிலானது நாட்டிய முத்திரைகளைக் காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்ற வடிவிலமைந்த மண்டபமும் எனப் பல அரிய சிற்பக்கலைப் படைப்புகளைக் கொண்டுள்ளது. சிற்பக்கலை வல்லுநர்களால், ‘சிற்பிகளின் கனவு’ என வர்ணிக்கப்படும் இக்கோயிலானது 2004ம் ஆண்டு யுனெஸ்கோவால், உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் வலதுபுறம் அமைந்துள்ளது. இது வழக்கமான தலங்களைப் போல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், ஆயிரம் வருடங் களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனிக் கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும்.

இக்கோயில் கருவறை விமானம் ஐந்து நிலை மாடங்களுடன் 80 அடி உயரம் உள்ளது. 63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் தகவல்களுக்கு https://en.wikipedia.org/wiki/Darasuram