ரஷ்யாவில் படிக்க இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை!



* உதவித்தொகை

இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயில்வது அதிகமாகியுள்ளது. இந்நிலையில் ஒரு சில நாடுகள் தங்கள் நாட்டுக்கு வந்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கி வருகின்றன. அந்த வகையில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பட்டப்படிப்புகளை பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகையை அறிவித்துள்ளது ரஷ்யா.

ரஷ்யாவில் மேலே குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் 100 பேருக்கு 100 சதவிகித கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும் அதற்கு தகுதியும், திறனும் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் கல்வி பயின்றுவருகின்றனர். அவர்களை ஊக்குவிப்பதற்கான  பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டுவருகிறது.

அந்த வரிசையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான ரஷ்ய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை விமான தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் பட்டப்படிப்புகளை மேற்கொள்ளவுள்ள 100 இந்திய மாணவர்களுக்கு 100 சதவிகித கல்வி உதவித்தொகை வழங்க முடிவு  செய்யப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்கள் http://russia.study.ru என்ற இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம். தேர்வாகும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படும். பொதுவாகவே ரஷ்ய மொழியில் கல்வி கற்பவர்களுக்கு  மட்டுமே உதவித்தொகை வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டில் மாஸ்கோ இயற்பியல் மற்றும் தொழில்நுட்பப்  பல்கலைக்கழகமும், டாம்ஸ்க் பாலிடெக்னிக் கல்லூரியும் ஆங்கில வழியில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கும்  உதவித்தொகை வழங்க முன்வந்துள்ளன. இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 044-2499 0050 என்ற தொலைபேசி  எண்ணிலோ அல்லது சென்னையில் உள்ள ரஷ்ய கலாசார மையத்தையோ தொடர்புகொள்ளலாம்.

- க.கதிரவன்