பாம்பு கடித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் காப்பாற்றியிருக்கிறேன்!



மாண்புமிகு மருத்துவர்

‘‘மனித இனத்துக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் உயிரினங்களில் பாம்பு மிகவும் பிரபலம். அதனால்தான் என்னவோ, ‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்ற பழமொழி இன்றும் பேசப்படுகிறது.

ஆனால், இதுபோன்ற முதுமொழிகளின் தாக்கம் எதுவும் இல்லாமல், பாம்பு கடித்த அடையாளத்தை வைத்தே எந்த பாம்பு கடித்தது என்பதைக் கண்டுபிடித்து சிகிச்சை அளித்துக் காப்பாற்றலாம்’’ என்கிற பொதுநல மருத்துவர் ராஜகோபால் அதற்கான சிகிச்சையை அனுபவத்துடன் விவரிக்கிறார்.

‘‘1965-ம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை என்கிற கிராமம் பாம்பு கடிக்கு மிகவும் பிரபலம். ஏனென்றால், அப்போதைய சூழ்நிலையில், சுற்றுவட்டார கிராமங்கள் உட்பட குஜிலியம்பாறையிலும் விவசாயம்தான் முக்கியத் தொழில். அந்த அளவுக்கு அங்கு வசித்து வந்தவர்களில் ஏராளமானோர் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

குறிப்பாக, காட்டு விவசாயம் செய்து வந்தனர். காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் விவசாயம் நடைபெற்று வந்ததால் நாளுக்குநாள் கண்ணாடி விரியன், கட்டு விரியன், நாகப்பாம்பு போன்ற கொடிய விஷயம் உடைய பாம்புகளால் கடிக்கப்பட்டு உயிரிழப்போரின்
எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது.

மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே, இத்தகைய துயர சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக இருந்தது. எனவே, எம்.பி.பி.எஸ் படித்து முடித்தபிறகு 1978-ம் ஆண்டு  மருத்துவ சேவையைத் தொடங்குவதற்கு குஜிலியம்பாறையைத் தேர்ந்தெடுத்தேன்.

அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொதுநல மருத்துவராக பணியைத் தொடங்கியபோது, பாம்பு கடி சிகிச்சைக்குத்தான் தேவை அதிகம் இருப்பதை அறிந்தேன். எனவே, முழுக்க முழுக்க அதில் கவனம் செலுத்த தொடங்கினேன்.

பாம்பு வகைகளில், கட்டு விரியன், நாக பாம்பு, கண்ணாடி விரியன் என்ற கழுதை விரியன், சுருட்டைப் பாம்பு ஆகிய நான்கும் மிகவும் ஆபத்தானவை. கட்டுவிரியன் மற்றும் நாகப் பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் தன்மை உடையது. கட்டு விரியன் கருப்பு நிறத்தில் கன்னங்கரேல் என்று காணப்படும். இரவில் மட்டும் கடிக்கும் குணம் உடையது. இதனால் கடிபட்டவர்களால் எச்சிலை விழுங்க முடியாது. தொண்டையில் வலி
காணப்படும்.

கண்ணாடி விரியன், சுருட்டைப் பாம்பு ஆகியவை கடித்தால், முதலில் நமது ரத்த மண்டலம்தான் பாதிப்புக்கு உள்ளாகும். இதுதவிர, கண்ணாடி விரியன் நஞ்சு வயிறு உப்புசம், உடல் வீக்கம் ஆகிய பிரச்னைகளையும் ஏற்படுத்தக் கூடியது. இது மட்டுமில்லாமல், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், ரத்த வாந்தி போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.

சுருட்டை பாம்பு விஷத்தால் முதுமைப் பருவத்தினர்தான் அதிகளவில் துன்பப்படுகின்றனர். ஏனென்றால், இவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும். மேலும், இவர்களின் உடல் சார்ந்த செயல்பாடுகள் சரிவர நடைபெறாது’’ என்பவர், பாம்புக் கடியில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது பற்றிய வழிகளைச் சொல்கிறார்.

‘‘பாம்புகள் எந்தக் காரணத்துக்காகவும் நமது வாழ்விடத்துக்கு இடம் பெயர்ந்து வந்து தொந்தரவு செய்வது கிடையாது. நாம்தான் அவற்றின் இடங்களுக்கு குடியேறி ஆபத்தை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறோம்.

ஏனென்றால், மனிதர்களால் நமக்கு பாதிப்பு, அடித்து கொன்றுவிடுவார்கள் என்ற பயம் காரணமாகத்தான் பெரும்பாலான பாம்புகள் கடிக்க முற்படுகின்றன. இதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, இந்த விலங்கு ஏராளமாக காணப்படுகிற வயல்வெளிகள், புதர்கள், காடுகள், புல்வெளி ஆகிய இடங்களுக்குச் செல்வதை முதலில் தவிர்க்க வேண்டும்.

ஒருவேளை அது போன்ற இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால், முழங்கால் அளவுக்கு பாதுகாப்பான காலணிகள், பெரிய மூங்கில் கொம்பு, டார்ச்(இரவு நேரங்களில்) தவறாமல் உடன் எடுத்து செல்ல வேண்டும்’’ என்றவர், சற்று இடைவெளிவிட்டு, பாம்க்புகடிக்கான முதலுதவி சிகிச்சை பற்றி கூறத் தொடங்கினார்.

‘‘பொதுவாக, மனிதர்கள் விஷம் உள்ள பாம்புகள் எது கடித்தாலும் உடனே கடிவாய் இடத்தைக் கீறி, ரத்தத்தை வெளியேற்றுவதையும், அந்த இடத்துக்கு சற்று மேலே கட்டுப்போடுவதையும் முதலுதவி என்ற பெயரில் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், எல்லாவிதமான கடிக்கும் இவ்வாறு செய்யக்கூடாது.

கண்ணாடி விரியன், சுருட்டைப் பாம்பு போன்றவை கடித்தால், எந்தக் காரணத்துக்காகவும் கடிவாய் மேலே கட்டுப்போடக்கூடாது. காயத்தைக் கீறக்கூடாது. இவை கடித்த இடத்தில் புண் வர வாய்ப்பு உண்டு. எனவே, மருத்துவர் ஆலோசனையுடன் அதற்கான முதலுதவி சிகிச்சை செய்யலாம்.நல்ல பாம்பு கடித்தால் அந்த இடத்தைக் கீறி, கடிவாய்க்கு மேலே மென்மையான பாண்டேஜ் துணியால் கட்டுப்போடலாம்.

ஆனால், இறுக்கக்கூடாது. நாகப் பாம்பு விஷத்தால் ஆறாத புண் வர வாய்ப்பு உள்ளது. ஆகவே, அப்புண்ணைக் குணப்படுத்துவதற்கான முதலுதவி செய்வது அவசியம். அந்த நேரத்தில், பாதிக்கப்பட்டவருக்கு தைரியம் சொல்லி, தாமதிக்காமல் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.என்னுடைய 39 வருட அனுபவத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாம்புக்கடியில் இருந்து காப்பாற்றி உள்ளேன். கடிவாயை வைத்தே, எந்த நச்சுப்பாம்பு கடித்தது என்பதைச் சொல்வேன்.

பாம்புக் கடிக்கு ஆளானவரின் நரம்பு மண்டலம், ரத்தம் பாதிப்பு அடைவதற்கு முன்னால், மருத்துவமனைக்கு கொண்டு வந்துவிட்டால், முதல் உதவி சிகிச்சையோடு, சப்போர்ட்டிங் மெடிசன்(ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள், பெயின் கில்லர் இஞ்ஜெக்‌ஷன், சிறுநீர் வெளியேறுவதற்கான ஊசி) மூலம் முழுமையாக குணப்படுத்தி இருக்கிறேன். மேலும், பாம்புக் கடி சிகிச்சை தொடர்பாக ஆர்வம் உள்ள புதிய மருத்துவ மாணவர்களுக்கு இந்த சிகிச்சையைக் கற்றும் தருகிறேன்’’ என்கிறார்.

- விஜயகுமார்