சிறுநீரகம் காப்போம்!



தேவை அதிக கவனம்

* ஓர் ஆரோக்கியமான சிறுநீரகம், தன்னுடைய சிறுநீர்ப்பையில் சராசரியாக அரை லிட்டர் அளவிற்குச் சிறுநீரைச் சேமித்து வைத்துக்கொள்ளும் ஆற்றல் உடையது என சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

* நாம் உட்கொள்ளும் தண்ணீரை வடிகட்டி, தேவையில்லாதவற்றை வெளியேற்றும் பணியை மேற்கொள்ளும் இவ்வுறுப்பு, நமது விலா எலும்புகளின் அடிப்பக்கத்தை ஒட்டி, முதுகு எலும்புகளின் இரண்டு பக்கமும் அமைந்துள்ளது.

* நமது உடலில் சேர்கிற திட மற்றும் திரவ உணவுப்பொருட்களில் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, மீதமாகும் கழிவுப்பொருட்களை வெளியேற்றுவது மட்டும் சிறுநீரகங்களின் பணி அல்ல. நமக்கு இன்றியமையாத தேவைகளான சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் முதலான ஊட்டச்சத்துக்கள் சரியான விகிதாசாரத்தில் உள்ளதா என்பதைக் கணக்கெடுப்பதும், அவற்றின் அளவு குறைந்தால் எச்சரிப்பதும் இதனுடைய பணிகள்தான்.

* அவரை விதை வடிவில் அமைந்து இருக்கும் சிறுநீரகங்கள் நமது உடலில் ஒரு வேதியியல் தொழிற்சாலை போன்று செயல்படுகின்றன எனலாம். ஏனெனில், இந்த இரண்டு உறுப்புகளும் சராசரியாக ஒரு நாளில், 200 குவார்ட்ஸ் ரத்தத்தை வடிகட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. (ஒரு குவார்ட்ஸ் என்பது 946 லிட்டருக்குச் சமம்.) மேலும், இரண்டு குவார்ட்ஸ் அளவுக்கும் அதிகமான தண்ணீர் மற்றும் கழிவுப்பொருட்களையும் பிரித்தெடுக்க செய்கின்றன.

* சிறுநீரகம் தன்னுடைய அனைத்துப் பணிகளையும் செவ்வனே செய்வதற்கு நெப்ரான்கள்(Nephrons) என்ற மிகச்சிறிய பகுதி உறுதுணையாக இருந்து வருகிறது. இத்தகைய சிறப்புத் தன்மை கொண்ட நெப்ரான்கள் ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் 10 லட்சம் வரை காணப்படுகின்றன.

* ஒருவருடைய சிறுநீரகம் செயல் இழந்துவிட்டால், அதைத் தொடர்ந்து உடலில், பலவிதமான பிரச்னைகள் உடலில் ஏற்பட தொடங்கும். ரத்த அழுத்தம் முதலான உடலின் முக்கிய செயல்பாடுகள் சீராக நடைபெறாமல் போகும் நிலை உருவாகக் கூடும்.

* வழக்கமாக எல்லோரும் போதுமான தண்ணீரை அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஆனால், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவருக்கு இந்த பொதுவிதிமுறையில் கட்டுப்பாடுகள் உண்டு. அன்றாடம் தேவைப்படும் தண்ணீர் அளவான 3 லிட்டரைவிட, அதிகமாக அருந்தக் கூடாது.

ஏனென்றால், இவர்கள் நா வறண்டு போதல், வேட்கை காரணமாக நிறைய தண்ணீரை குடிக்கும்போது, அது உடலில் தங்கிவிடும். அதனை சிறுநீரகத்தால் வடிகட்ட இயலாதபோது நுரையீரலை அவை சென்றடைவதால், சுவாசக் கோளாறுகள் உண்டாகும் வாய்ப்பு உண்டு.

* உடலுக்குத் தேவையான நீரைச் சேமித்து வைத்துக்கொண்டு, சிறுநீரகம் வெளியேற்றும் சிறுநீரில், யூரியா அதிக அளவில் காணப்படும். இதில், நைட்ரஜன் என்ற வேதிப்பொருளும் நிறைய இருக்கும்.

* சிறுநீரக பாதிப்பால் அவதிப்படுபவர்களுக்கு மற்ற உடல் உபாதைகளைவிட பிறரிடம் இருந்து பரவும் நோய்க்கிருமிகளால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, சிறுநீரகம் பழுதடைந்தவர்கள் மக்கள் ஏராளமாக கூடுகிற பொதுவிடங்களுக்குச் செல்வதை முடிந்தவரைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், பச்சிளம் குழந்தைகளைக் காட்டிலும் இவர்கள் கிருமிகளால் மிகக் குறைவான நேரத்தில் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

* இரண்டு சிறுநீரகமும் செயல் இழத்தல், அதனால், உடலில் ஏற்படுகிற பலவிதமான பிரச்னைகள், வலியுடன் கூடிய தொடர் சிகிச்சை, அன்றாட வாழ்க்கை முறையில் திடீர் மாற்றங்கள் எனச் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்  எண்ணற்ற இடர்களை எதிர்கொள்ளக் கூடும். எனவே, இவர்கள் அசாத்திய மன தைரியம் கொண்டவர்களாக இருப்பது அவசியம்.

* சிறுநீரகம் பாதிப்பு அடைந்து விட்டாலே உயிருக்கு ஆபத்து என்று பெரும்பாலானோர் நினைக்கின்றனர். இது மருத்துவத்துக்கு அப்பாற்பட்ட தவறான கருத்து. ஏனெனில், சிறுநீரக செயல்பாடுகள், இவ்வுறுப்பு எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவற்றிற்கான சிகிச்சைகள் போன்றவற்றை ஒருவர் முழுமையாக அறிந்துகொண்டால், பாதிப்புகளுக்கு முன்னரே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். சிக்கல்கள் ஏதேனும் வந்தாலும் உரிய சிகிச்சைகள் பெற்று உயிர் வாழலாம். எனவே, நமக்கு விழிப்புணர்வுதான் முதன்மையான தேவை!

* இந்திய மற்றும் உலக வரலாற்றில், மனிதனின் சிறுநீர் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. குறிப்பாக, பழமையான இந்திய மருத்துவத்தில் தோல் நோய்களைக் குணப்படுத்துவதற்கான ஏற்ற மருந்தாக சிறுநீர் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

* ரோமானியர்கள் அண்டை நாடுகளுடன் போரில் ஈடுபட்டபோது, காயங்களைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள் போதிய அளவு கிடைக்காத சூழலில் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை உடைய சிறுநீரை காயங்களின் மீது பூசிக்கொண்டார்களாம்.

 தொகுப்பு : விஜயகுமார்