சப்ளிமெண்ட்டரி ஆபத்து



எச்சரிக்கை

உணவின் மூலம் கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்துக்களை Supplementary foods மூலமும் சிலர் எடுத்துக் கொள்கின்றனர். ‘துணை நிறைவு உணவுகள் என்று குறிப்பிடப்படும் இவற்றை கூடுதலாக எடுத்துக் கொள்வது நல்லதல்ல; அது நீண்ட ஆயுளுக்குக் கேடு’ என்கிறது Annals of Internal Medicine இதழில் வெளியான அமெரிக்க ஆய்வு முடிவுகள்.

வழக்கமாக நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் சப்ளிமெண்ட்ரி உணவு ஆகிய இரண்டிலும் இருந்து உடலுக்குக் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 20 வயது அல்லது அதற்கு மேற்பட்ட 30,899 நபர்களிடமிருந்து இதுகுறித்த தகவல்கள் பெறப்பட்டது.

ஆய்வில் பங்கேற்றவர்கள் பொதுவாக வைட்டமின்கள் C, D, E மற்றும் கால்சியம் ஆகிய துணை நிறைவு உணவுகளை அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆய்வுக்குழுவின் கண்காணிப்பில் இருந்த 3,613 பேர் 6 ஆண்டுகளில் உயிரிழந்தனர். இதில் இதய நோய்களால் 945 பேரும், புற்றுநோயால் 805 பேரும் இறந்தனர். இதன் காரணமாக பெரும் அதிர்ச்சி அடைந்த ஆய்வுக்குழுவினர், சப்ளிமெண்ட்ரி உணவுகள் குறித்த புரிதல் மக்களிடம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கோடு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

‘வைட்டமின் ஏ, வைட்டமின் கே, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்றவற்றை போதுமான அளவு உட்கொள்வது இதய நோய் இறப்புகள் சார்ந்த அனைத்து காரணங்களையும் குறைப்பதுடன் தொடர்புடையதாக உள்ளது. ஆனாலும் அந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நாம் உட்கொள்கிற உணவிலிருந்து கிடைக்கிறபோதுதான் அது நடக்கிறது.

தினமும் குறைந்தது 1000 மி.கி. கால்சியம் சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வது புற்றுநோயால் இறக்கும் அபாயத்துடன் தொடர்புடையது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது மிகவும் முக்கியமானது.  

சத்துக்குறைபாடு இருந்தால் அதனை உணவின் மூலமே சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்வதாக இருந்தால் அது மருத்துவரின் முறையான ஆலோசனையுடன், குறிப்பிட்ட கால அளவுக்கு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் இந்த ஆய்வு புரிய வைத்திருக்கிறது.

- கௌதம்