அரவிந்த் ஜெயில்வால் படிக்கும் புத்தகம்!



அமலாக்கத் துறை விசாரணையைத் தொடர்ந்து தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, வரும் 15ம் தேதிவரை சிறையில் அடைக்க, தில்லி ரோஸ் நிழற்சாலை நீதிமன்ற சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா உத்தரவிட்டுள்ளார். 
இதனையடுத்து, கெஜ்ரிவால் சிறைக்குள், தான் வாசிப்பதற்காக கொண்டுபோக மூன்று புத்தகங்களுக்கு அனுமதி கோரினார். அதில், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுடன் நீரஜா சௌத்ரி எழுதிய ‘How Prime Ministers Decide’ என்கிற புத்தகத்தையும் கெஜ்ரிவால் குறிப்பிட்டிருந்தார்.

இராமாயணம், மகாபாரதம் குறித்து நமக்குத் தெரியும். மூன்றாவதாக அவர் எடுத்துச் செல்லும் ‘How Prime Ministers Decide’ புத்தகத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது..?
‘How Prime Ministers Decide’, நீண்ட அனுபவம் வாய்ந்த மூத்த பத்திரிகையாளர் நீரஜா செளத்ரி எழுதி அண்மையில் வெளியான புத்தகம். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், வி.பி.சிங், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகிய ஆறு பிரதமர்கள் பற்றி எழுதியிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன் ஜெய்ப்பூரில் இலக்கிய விழா நடைபெற்றது. அவ்விழாவில் நீரஜா செளத்ரி பங்கேற்றார். அப்பொழுது நடந்த உரையாடலில் ‘How Prime Ministers Decide’ புத்தகத்தில் உள்ள சில செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். 
யூடியூப் காணொலியில் இப்பொழுதும் காணக் கிடைக்கும் இந்த உரையாடலில் நீரஜா செளத்ரி பகிர்ந்துகொண்ட விஷயங்கள் கேட்க சுவாரஸ்யமாகவும் வியப்பாகவும் இருக்கின்றன. அதுமட்டுமல்ல. வேறு பல insightகளும் கிடைக்கின்றன. அவற்றில் சில:

எமர்ஜென்சிக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்தி பெரும் தோல்வியடைந்தார். அதன்பின் ஆட்சிக்கு வந்தது ஜனதா கட்சி. இதன் பிறகு நடந்த தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்று 1980ல் பிரதமரானார். மிகப் பெரிய வெற்றி. இந்தத் தேர்தல் வெற்றிக்குக் காரணம் சஞ்சய் காந்தி வகுத்த உத்திகள் என இந்திரா நினைத்தார். சஞ்சய் காந்திக்கு முக்கியத்துவமும் தரத் தொடங்கினார்.

இந்திரா காந்தி 1977லிருந்து 1980 வரை கோயில் கோயிலாகச் சென்றார். அவரது இஷ்ட தெய்வம் இமயத்தில் உள்ள சாமுண்டா தேவி. தேர்தல் வெற்றிக்குப் பின் சாமுண்டா தேவியை நேரில் சென்று தரிசனம் செய்து வழிபட வேண்டும் என விரும்பினார்.

ஆனால், ஆறு மாதங்கள் வரை இந்திரா காந்தியால் அசைய முடியவில்லை. அதன் பின் அக்கோயிலுக்குச் செல்ல ஜூன் 22 (1980) என்று நாள் குறித்தார். கோயிலுக்கும் தகவல் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோயிலில் ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தன. ஆனால், புறப்பட வேண்டிய அன்று வானிலை சரியில்லை... ஹெலிகாப்டர்கள் இறங்க முடியாது... எனவே, போக வேண்டாம் என சஞ்சய் காந்தி தடுத்துவிட்டார்.

ஆனால், அன்று வானிலை நன்றாகத்தானிருந்தது! இந்திரா காந்தி வரவில்லை என்ற செய்தி கேட்டதும் கோயில் பூசாரி அதிர்ந்தார். தெய்வக் குற்றம் நிகழ்ந்து
விட்டது என்று சீற்றம் அடைந்தார். “சாதாரண மனிதர்கள் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை என்றால் அம்மா (சாமுண்டா தேவி) மன்னித்துவிடுவாள். ஆனால், ஆள்கிறவர்கள் வரவில்லை என்றால் சீற்றம் அடைவாள்...” என பூசாரி சொன்னார்.

எனவே இந்திரா காந்தி வராமலேயே அவர் சார்பாக பூஜைகள் நடந்தன. பிரசாதத்தை எடுத்துக்கொண்டு கோயில் பூசாரிகள் தில்லிக்கு வந்தனர். தில்லியை அடைய 50 கி.மீ இருக்கும் போது அந்தச் செய்தி வந்தது.

சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்து விட்டார் என! சிவானந்த மூர்த்தி என்று நரசிம்மராவிற்கு ஒரு குரு இருந்தார். போலீஸ் அதிகாரியாக இருந்தவர், அந்தப் பணியைத் துறந்துவிட்டு விசாகப்பட்டினத்தில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார்.நரசிம்மராவ் அவரை குருஜி என்றே எல்லோர் முன்னிலையிலும் கூப்பிடுவது வழக்கம்.

பாப்ரி மஸ்ஜித் பிரச்னை உச்சத்தில் இருந்த நேரம். நரசிம்மராவ் தன் குருவான சிவானந்த மூர்த்தியைச் சந்தித்தார். பாப்ரி மஸ்ஜித் என்ன ஆகும் எனக் கேட்டார்.
குருஜி சில நிமிடங்கள் கண்ணை மூடிக் கொண்டிருந்து விட்டு பின் திறந்து சொன்னார்: 

“என்னால் அதை அங்கு காணமுடியவில்லை...”வாஜ்பாய்க்கு கேன்சர் இருந்தது. அது 1980லேயே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஆனால், அது யாருக்கும் தெரியாது. அவரது நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்காவிற்குக் கூடத் தெரியாது. ஆனால், அந்த ரகசியம் ராஜீவ் காந்திக்குத் தெரியும்.

ராஜீவ் காந்தி அவரை சிகிச்சைக்காக அமெரிக்கா அனுப்பி வைத்தார். முற்றிலுமாகச் சிகிச்சை முடியும் வரை திரும்பி வரக்கூடாது எனக் கட்டளையிட்டார்.

அதன்பின் ஆண்டுதோறும் ஐநா சபைக் கூட்டத்திற்கு அனுப்புவது போல வாஜ்பாயை அமெரிக்கா அனுப்பி செக் அப் செய்துகொள்ள ராஜீவ் காந்தி ஏற்பாடு செய்தார்.
ராஜீவ் இறந்தபோது வாஜ்பாய் சொன்னது:

“ராஜீவ் என் உயிரைக் காத்தவர்!”2004ம் ஆண்டு. காங்கிரஸ் ஆட்சி அமைக்கப் போகிறது. சோனியாதான் பிரதமர் என்று முடிவாகிவிட்டது. சோனியா, வாஜ்பாய்க்கு போன் செய்து என்னை ஆசீர்வதியுங்கள் எனக் கேட்டார். “உனக்கு என் ஆசீர்வாதங்கள் நிறைய உண்டு. ஆனால், நான் ஒன்று சொல்லலாமா? நீ இந்தப் பதவியை ஏற்க வேண்டாம். ஏற்றால் நாடு பிளவுபடும். அதிகாரிகளிடையே பிரிவினை ஏற்படும்...” என்றார் வாஜ்பாய்.

சோனியா பிரதமராகவில்லை. மன்மோகன் சிங் பிரதமர் ஆனார்!இன்னும் பலவற்றையும் - வாஜ்பாய்- அத்வானி உறவு, ஆர் எஸ் எஸ்ஸும் இந்திரா காந்தியும் பரஸ்பரம் பயன்படுத்திக் கொண்ட விதம்... இப்படிப் பலவற்றை யூடியூப் காணொலியில் நீரஜா பேசியிருக்கிறார்.  அவரது முழு உரையாடலில் இருந்து புரிவது ஒன்றுதான். பலரும் நினைப்பதுபோல் பிரதமர் பதவி அதிகாரம் மிக்கது மட்டுமல்ல... நீரஜாவின் வார்த்தைகளில் பிரதமர்கள் Vulnerable, lonely (பாதுகாப்பற்றவர்கள், தனிமைப்பட்டவர்கள்).  

பேராச்சி கண்ணன்