விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 27

ஆதியின் கண்கள் கூர்மையடைந்தன. ‘‘அவங்க மூணு பேரும் யாரு கார்க்கோடகரே..?’’ ‘‘என் நண்பர்கள்...’’ ‘‘நண்பர்களா..? அனந்தன், குளிகன், பத்மன் பெயர்லயா..?’’ ‘‘ஏன் இருக்கக் கூடாதா..?’’ ‘‘வாய்ப்பேயில்ல...’’ ஆதி அடித்துச் சொன்னான். ‘‘இட்ஸ் பாசிபுள் ஆதி...’’ கிருஷ்ணன் இடைமறித்தான்.

‘‘எது இந்தப் பெயர்களா..?’’ ஆதியின் முகம் சிவந்தது. ‘‘நீ இந்தியாவுல வளர்ந்தவன்தானே..? என்னிக்காவது உன் வாழ்க்கைல அனந்தன், குளிகன், பத்மன் பேரை சுமந்தவங்களை சந்திச்சிருக்கியா?’’ ‘‘இல்ல...’’ யோசித்துவிட்டு கிருஷ்ணன் சொன்னான். ‘‘அப்புறம்? எந்த மனுஷனுக்கும் அந்தப் பெயர்களை வைக்க மாட்டாங்க. ஏன்னா அது பாம்பு களோட அரசர்கள் பேரு!’’

சுவாச ஒலி கூட கேட்காத அளவுக்கு அமைதி நிலவியது. ஐஸ்வர்யா அதைக் கிழித்தாள். ‘‘ஒருவேளை புனைப்பெயரா இருக்கலாமே?’’ ஆதி வாய்விட்டுச் சிரித்தான். அதில் கோபம் கொப்பளித்தது. ‘‘தர்க்கத்துக்கு உதவும். நிஜத்துக்கு இல்ல...’’ கார்க்கோடகர் பக்கம் திரும்பினான். ‘‘நீங்க சொல்லுங்க... அவங்க யாரு..?’’ ‘‘அதான் சொன்னேனே...’’ ‘‘நண்பர்கள்னா? அதை முட்டாள் கூட நம்ப மாட்டான்...’’ கார்க்கோடகர் முறைத்தார்.

‘‘இதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன். நம்ம அமைப்புக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியத்தை முன்பின் தெரியாத தாராகிட்ட நீங்க சொன்னதே தப்பு. அதைக் கூட இறப்புக்கு முன்னாடி வேற வழியில்லாம நீங்க சொன்னீங்கனு எடுத்துக்கலாம். ஆனா...’’ நெருங்கி அருகில் வந்தான். இமைக்காமல் அவர் கண்களை உற்றுப் பார்த்தான்.

‘‘பூத உடல் எரிஞ்சு சாம்பலான பிறகும் அதே மாதிரி உடலைப் படைச்சு மாயமா நடமாடறது ரொம்ப தப்பு. அது இயற்கைக்கு மட்டுமில்ல... நம்ம அமைப்போட விதிகளுக்கும் எதிரானது. இப்படியொரு முடிவை எடுத்த நீங்க தாராகிட்ட ஏன் ரகசியத்தை கடத்தினீங்க? முக்கியமா இந்த அனந்தன், குளிகன், பத்மன் யாரு? உங்களுக்கு நண்பர்களே கிடையாதுனு எங்க எல்லாருக்குமே தெரியும்.

அப்படியிருக்கிறப்ப எங்கேந்து இந்த மூணு பேரும் முளைச்சாங்க? அப்படீன்னா...’’ கார்க்கோடகரின் கழுத்தில் தன் கைகளை வைத்து இறுக்கினான். ‘‘உலூபி தாயார் சொன்ன மாதிரி நீங்க துரோகியா?’’ அழுத்தம் தாங்காமல் கார்க்கோடகரின் கண்கள் சொருக ஆரம்பித்தன. மாய உருவம்தான். இவர்கள் அனைவருக்கும் தெளிவாகத் தெரியும் வடிவம்தான்.

ஏற்கனவே இறந்த சக்கைதான். ஆனால், அதற்குள் புகுந்த ஆன்மாவின் குரல்வளையை நெரிக்கும் வித்தையை ஆதி கற்றிருக்கிறானே... எல்லாம் அமைப்பு கற்றுத் தந்த பாடம். மாஸ்டரின் கை வண்ணம். மாஸ்டர்... ஏன் இன்னமும் அனந்தனும் பத்மனும் குளிகனும் வரவில்லை..? தன்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா..?

அலைபாய்ந்த கண்கள் கிருஷ்ணனையும் ஐஸ்வர்யாவையும் பார்த்து கெஞ்சின. ‘‘போதும் விடு ஆதி... செத்துடப் போறாரு...’’ கிருஷ்ணன் பாய்ந்து விலக்கினான். ‘‘ஏற்கனவே சவம்தானே..?’’ ஆதியின் முகத்தில் படர்ந்த அருவருப்பு கார்க்கோடகரின் கையிலிருந்த அவிச்ச முட்டையைப் பார்த்ததும் உக்கிரமானது.

‘‘இனி நம்ம ரகசிய எழுத்தை நீங்க... தப்பு... நீ எந்தச் சூழல்லயும் பயன்படுத்தக் கூடாது...’’ கிருஷ்ணனின் பிடியிலிருந்து திமிறி விலகியவன் தாவி அந்த அவிச்ச முட்டையைப் பிடுங்கினான். ‘‘வேண்டாம்... வேண்டாம்...’’ கார்க்கோடகர் கத்தி தடுப்பதற்குள் - அதை கருங்கல் சுவரை நோக்கி வீசினான்.

அடுத்த கணம் அங்கே புகை மண்டலம் சூழ்ந்தது. நால்வரும் கமறவில்லை. இருமவில்லை. புனுகின் வாசனை அனைவரது நாசியையும் ஊடுருவியது. ஆனால், ஒருவரும் முகம் சுளிக்கவில்லை. என்ன காரணத்தினாலோ அப்போது புனுகு மணம் வீசியது. அதற்கான காரணமும் விஸ்வரூம் எடுத்து நின்றது. அதுவும் இருபத்தோரு அடி நீள பாம்பாக... ‘‘க்ருஷ்... நாம கனவுலகுல சஞ்சரிக்கிறோமா..?’’ ஐஸ்வர்யா கிசுகிசுத்தாள்.

நறுக்கென்று கிருஷ்ணன் அவளைக் கிள்ளினான். ‘‘ஆ...’’ என்று அலறியவள் கப்பென்று வாயை மூடிக் கொண்டாள். காரணம், அந்த நீளமான பாம்பு அவள் முகத்தை உரசிவிட்டு நகர்ந்ததுதான். ‘‘நிஜம்னு இப்ப புரிஞ்சிருக்குமே...’’ விளையாட்டாக சொன்னாலும் கிருஷ்ணனின் குரல் பயத்தின் காரணமாக லேசாக நடுங்கியது.

ஆதிதான் விவரணைக்கு அப்பாற்பட்டு காட்சியளித்தான். வந்திருக்கும் நாகம் யாரென்று அவனுக்குத் தெரிந்திருந்தது. முக லட்சணம் அதற்கு வலுவும் சேர்த்தது. ஆனால், எப்படி இங்கே... அதுவும் உலூபி தாயாரின் சிறைக்கூடத்தில்... அனைவரது சிந்தனை ஓட்டங்களையும் தடுத்து நிறுத்தும் விதமாக பாம்பு பேசியது. அதுவும் அழுத்தம்திருத்தமாக.

‘‘எதற்காக என்னை வரவழைச்ச கார்க்கோடகா...’’ ‘‘அம்மா... நான்... நான்... உங்களை கூப்பிடல...’’ கார்க்கோடகர் தடுமாறினார். ‘‘அப்புறம் வேற யாரு அழைச்சது..? ‘KVQJUFS’னு எழுதின அவிச்ச முட்டையை தரைலயோ சுவர்லயோ போட்டா நான் வருவேன்னு உனக்குத் தெரியாதா..?’’ ‘‘தெரியும்மா...’’ ‘‘அப்புறம்..?’’ ‘‘அது வந்து வாசுகிம்மா... ஆதிதான்...’’ எச்சிலை விழுங்கியபடி கார்க்கோடகர் இழுத்தது அதுவரை நிலவி வந்த சந்தேகம் அனைத்தையும் அடித்து நொறுக்கியது.

வாசுகி... வாசுகி பாம்பு... ஆதி தாமதிக்கவேயில்லை. தன் இயல்புப்படி சாஷ்டாங்கமாக வாசுகி பாம்பை நமஸ்கரித்தான். ‘‘மேரு மலையை மத்தா வைச்சு பாற்கடலைக் கடைய தன்னையே கயிறா கொடுத்து அமுதத்தை தேவர்களுக்கு பெற்றுத் தந்த வாசுகி அம்மாவை வணங்கறேன்...’’ கிருஷ்ணனும் ஐஸ்வர்யாவும் நிமிர்ந்தார்கள்.

வாசுகி பாம்பு... மனதுக்குள் அலாரம் அடித்தது. தங்களையும் அறியாமல் மண்டியிட்டார்கள். அசைந்தபடி வாசுகி நால்வரையும் ஆராய்ந்தாள். ‘‘தவறுதலா கூப்பிட்டதால இந்த முறை மன்னிச்சிடறேன். திரும்பவும் அப்படி செய்யாதீங்க...’’ ‘‘உத்தரவு மா...’’ ‘‘சரி. வெறுமனே போக முடியாது. ஏதாவது கேளுங்க. செய்துட்டு மறையறேன்...’’ ‘‘இங்கேந்து நாங்க தப்பிக்கணும்மா...’’ கார்க்கோடகர் முந்திக் கொண்டார்.

நாக்கை வெளியில் நீட்டிச் சிரித்த வாசுகி, சிறையில் இருந்து தப்பிப்பதற்கான வழியைச் சொன்னாள். ‘‘நவகிரகமும் எட்டு திசையில் நான்கு மூலையில் ஒன்றுமில்லை நவரத்தினமும் ஒன்றுமில்லை அதிசயமே உலகம் திரிசூலமே நான்காவது லூகாஸ் பஞ்சபூதம்..!’’ சுண்டி விட்டதுபோல் ஆதியும் கிருஷ்ணனும் ஐஸ்வர்யாவும் அதிர்ந்தார்கள்.

‘‘அம்மா...’’ ஆதியின் நாக்கு குழறியது. ‘‘இதுக்கு என்ன அர்த்தம்னு கார்க்கோடகனுக்குத் தெரியும்...’’ வாசுகி மெல்ல மெல்ல பின்வாங்கினாள். வாலில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கினாள். கழுத்தும் தலையும் மட்டும் இருந்த கணத்தில் - ‘‘ம்ரிதாசஞ்சீவனி...’’ நால்வரின் செவியையும் முற்றிலுமாக அது அடைந்தபோது - வாசுகி அங்கில்லை.

ஆதியும் கிருஷ்ணனும் ஐஸ்வர்யாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். விடையற்ற வினாக்கள் மூவரையும் இறுகக் கவ்வின.ஆதியின் கண்களில் இப்போது கோபமோ ஆத்திரமோ வழியவில்லை. நிதானமாக சுவரோடு சுவராக ஒண்டியிருந்த கார்க்கோடகரை நோக்கி நடந்தான்.

‘‘ஆதி... ப்ளீஸ்... அவரை என்ன பண்ணப் போற..?’’ கிருஷ்ணன் குறுக்கே புகுந்து தடுத்தான். ‘‘கொஞ்சம் தள்ளி நில்லு...’’ தடுத்தவனை விலக்கிவிட்டு அவரை நெருங்கினான். அப்படியே சரிந்து அவர் கால்களைப் பற்றினான். ‘‘எல்லாத்தையும் எனக்கு சொல்லிக் கொடுத்த குரு நீங்க. அப்படிப்பட்ட உங்களை கண்டபடி ஏதேதோ பேசிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க.

குரு பாவம் சும்மா விடாது. அதை அனுபவிக்கத் தயாரா இருக்கேன்... ‘Intelligent Design’ அமைப்புல சேர்த்து இயற்கையை எனக்கு புரிய வைச்சது நீங்கதான். அப்படிப்பட்ட உங்களாலதான் உலூபி தாயாரையும் வாசுகி அம்மாவையும் அடுத்தடுத்து பார்க்கிற வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. ஆனா... ஆனா... ஏன் இப்படி... உலூபி உங்களை துரோகினு சொல்றாங்க? 

யார் அழைச்சாலும் வராத வாசுகி நீங்க எப்ப கூப்பிட்டாலும் காட்சி தரத் தயாரா இருக்காங்க... எனக்கு எதுவுமே புரியலை. உண்மைல நீங்க யாரு... ஏன் இப்படி நடந்துக்கறீங்க...’’ தழுதழுத்த ஆதியைத்  தூக்கி நிறுத்தினார் கார்க்கோடகர். ‘‘அவங்களும் வந்துடட்டும். சொல்றேன்...’’ ‘‘யாரு?’’ ‘‘அனந்தன், குளிகன், பத்மன்!’’

(தொடரும்)

ஓவியம் : ஸ்யாம்

சறுக்கிய ஸ்கேட்போர்ட் வீரன்!

மனிதர்கள் மட்டும்தான் சாதனைகளுக்கு சொந்தக்காரர்களா என்ன? விலங்குகளும் கூடத்தான். பயிற்சி கொடுத்தால் அவைகளாலும் அதில் கோல்ட் மெடல் வாங்க முடியும். அப்படி ஒரு மாஸ் சம்பவம்தான் இது. இங்கிலாந்தின் எராக் என்ற புல்டாக் வகையைச் சேர்ந்த நாய், ஸ்கேட்போர்ட் சறுக்கல் விளையாட்டில் கில்லி.

அங்குள்ள தனியார் ரேடியோவில் ஒளிபரப்பாகி வரும் பிரபல பார்க்கிங் ஹவர் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க எராக் அழைக்கப்பட்டிருந்தது. எல்லாம் நன்றாகத்தான் தொடங்கியது. ஆனால், ஸ்கேட் போர்டில் ஏறி சொய்ங்கென எராக் சறுக்கி வரும்போதுதான், விதி சதி செய்ய... திடீரென ஆபீஸ் வாசலின் சுழலும் கண்ணாடிக்கதவு லாக் ஆகிவிட... ரிசல்ட்? வீரர் சறுக்கி விழுந்துவிட்டார்!

பின் ரேடியோ குழு பிஸ்கட் ஊட்டி விட்டு, தண்ணீர் குடிக்க வைக்க ஸ்கேட்போர்ட் வீரர் எராக் தெம்பாகியிருக்கிறார். ரேடியோ ஊழியர் படம் பிடித்த எராக் சறுக்கிவரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சறுக்கினாலும் குறையாத மாஸ்தான்!

இது தரமான சுவையான தர்பார்!

இல்லற இன்பத்தை இனிமைப் படுத்திய ‘ஜிங்கா கோல்டு’, சர்க்கரை நோய்க்கு பக்க விளைவுகள் இல்லாத பக்கா மூலிகை மாத்திரையான ‘ஜிங்கா டயாமேட்டிக்’ வரிசையில் இப்போது மக்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த ஹோட்டல் தொழிலில் காலடி எடுத்து வைத்துள்ளனர்.

நம்முடைய பாரம்பரியமான உணவு வகைகளை, அதன் தரமும் சுவையும் குறையாமல் மக்களிடம் கொண்டு சேர்க்க ‘ஜிங்கா தர்பார்’ என்ற பெயரில் பிரமாண்டமாக ஹோட்டலை சென்னை மதுரவாயல் பைபாஸ் அருகில் திறக்கின்றனர். மியான்மர், அந்தமான், மலேசியா போன்ற இடங்களில் கிடைக்கக்கூடிய விதவிதமான கடல் உணவுகள் மற்றும் பிரியாணி வகைகள் குறைந்த விலையில் தரமாகவும் சுவையாகவும் இங்கு கிடைக்கும் என்பது ஹைலைட்.

சமைப்பதற்காக சுத்திகரிக்கப்பட்ட ஆயில், ஃப்ரஷ்ஷான காய்கறிகள், இறைச்சிகளைத்தான் பயன்படுத்துகின்றனர். ஒரு முறை இங்கே சாப்பிட்டால் போதும் மறுபடியும் மறுபடியும் ஜிங்கா தர்பாரைத் தேடி வந்துகொண்டே இருப்பீர்கள்!