கவிதை வனம்



மரம்

சந்தன மரங்கள்
கடத்தப்பட்டன
செம்மரங்கள்
வெட்டப்பட்டன
மலையடிவார மரங்கள்
அழிக்கப்பட்டன
சாலை ஓர மரங்கள்
அகற்றப்பட்டன
எந்த சலனமும் இல்லாமல்
இயல்பாய் இருந்தேன்
பள்ளி ஓவியப் போட்டிக்கு
மகள் வரைந்த வீட்டில்
மரமே இல்லாதபோதுதான்
முதன் முதலாய்
மெல்ல அதிர்ந்தேன்.

- கி.ரவிக்குமார்

நினைவு

இரவெல்லாம்
பாட்டியின்
இருமல் சத்தம்
அவள் இறந்த
பிறகும் கேட்கிறது
அவள் இருந்த
திண்ணையில்.
- சங்கீத சரவணன்