தெலுங்கு ஹீரோவுடன் திருமணமா?



அஞ்சலி பேட்டி

கண்ணில் கான்டாக்ட் லென்ஸ், கட்டுடலில் கொஞ்சம் ஏற்றம், மற்றபடி அதே அழகு... சென்னையில் அஞ்சலி. திரைமறைவிலும் தலைமறைவிலும் இருந்த அஞ்சலி, புது தமிழ்ப் பட வாய்ப்புடன் திடீர் தரிசனம் கொடுத்திருப்பது கடந்த வார பரபரப்பில் ஒன்று. நீண்ட இடைவேளைக்குப் பிறகு லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுராஜ் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறார் அஞ்சலி.

 ‘என் படத்தை முடிக்காமல் வேறு பட ஷூட்டிங்கில் அஞ்சலியை நிற்க விட மாட்டேன்’ என்று இயக்குனர் மு.களஞ்சியம் கர்ஜித்ததையும் தாண்டி, அரிதாரம் பூசி கேமரா முன் நின்றுவிட்டார் அஞ்சலி. சாலி கிராமம் செந்தில் ஸ்டூடியோவில் பிரமாண்டமாக போடப்பட்டிருக்கும் தென்காசி காய்கறி மார்க்கெட் செட்டில் காதல், காமெடி கலாட்டா என ஜெயம் ரவியுடன் தனது மார்க்கெட்டை மறுபடி உயர்த்தும் உற்சாகத்தில் நடித்துக்கொண்டிருந்த அஞ்சலியை கொஞ்ச நேரம் சந்தித்தோம்.

‘‘ரெண்டு வருஷத்துக்குப் பிறகு தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன். நல்ல கதை இருந்தா மட்டும் நடிக்கணும்னு காத்திருந்ததே இந்த இடைவேளைக்குக் காரணம். சுராஜ் சார் சொன்ன கதை செம சூப்பரா இருந்ததால் கமிட் பண்ணினேன். இதில் எனக்கு கிளாமர் ப்ளஸ் ஹோம்லி கேரக்டர். கிராமத்துப் பின்னணியில் முதல்முறையா காமெடி பண்றேன். தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடிக்கணும்னு ப்ளான் பண்ணியிருக்கேன். இதோ இவர்தான் என் மேனேஜர் (அஜித்). என் சம்பந்தமான எந்த செய்தின்னாலும் இவர்கிட்ட கேட்டுக்கலாம்’’ என சொன்னபடி கேரவனுக்குள் நுழைந்துகொண்ட அஞ்சலியை சின்ன காத்திருப்புக்குப் பிறகு மறுபடியும் பிடித்தோம்.

‘‘பிரச்னையெல்லாம் முடிஞ்சிடுச்சா?’’
‘‘ஆங்... அதெல்லாம் முடிஞ்சிடுச்சுங்க. இப்போ நான் ரிலாக்ஸ். ஐதராபாத்தில் இருந்தப்போ தெலுங்குப் படங்களில் நடித்தேன். புனித் ராஜ்குமார் ஜோடியா கன்னடப் படம் ஒண்ணு பண்ணினேன். இப்போ தமிழில் ரீ  என்ட்ரி. இனி எல்லாமே நல்லதா நடக்கும். நடக்கணும்!’’
‘‘ஏன் வீட்டை விட்டு வெளியே போனீங்க?’’

‘‘அது எனது பர்சனல் விஷயம். அதெல்லாம் பழசாகிடுச்சு. திரும்பவும் ஏன் அதையே பேசணும்? இப்போ இந்தப் படம் பற்றி மட்டும் பேசலாம்.’’
‘‘உங்களுக்கு யாராவது தொந்தரவு தருவாங்கன்னு பயப்படுறீங்களா?’’

‘‘நான் எதுக்குப் பயப்படணும்? என்னைப் பார்த்தா பயப்படுவது மாதிரியா இருக்கு? பயம் இருந்தா நான் இப்போ இந்த இடத்துக்கே வந்திருக்க மாட்டேனே? என்னோட சோதனையான கட்டங்களில் தமிழ் சினிமாவும் ரசிகர்களும் எனக்கு ஆதரவா இருந்திருக்காங்க. அவர்களுக்கெல்லாம் நன்றி.’’ ‘‘களஞ்சியம் உங்களை நடிக்க விட மாட்டேன் என்று சொல்லியிருக்காரே?’’
‘‘யார் பற்றியும் பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.’’

‘‘அவர் படத்தை முடித்துக் கொடுப்பீங்களா?’’
‘‘நான் நடிக்க மாட்டேன். எனக்கும் அவருக்குமான பிரச்னை கோர்ட்டில் இருக்கு. அதனால் அது பற்றி மேற்கொண்டு நான் பேச மாட்டேன்!’’‘‘ ‘அஞ்சலியை பத்திரமாக பார்த்துக்கொள்வோம்’ என்று ஜெயம் ரவி பேசியது பற்றி?’’
‘‘அவருக்கும் என் நன்றி!’’

‘‘ ‘ஸ்கின் அலர்ஜி சிகிச்சைக்காக அமெரிக்கா போயிருக்கார்’ என்று உங்களைப் பற்றி செய்தி வந்ததே?’’‘‘எனக்கா? ஸ்கின் அலர்ஜியா? இப்போ நேரில் பக்கத்தில்தானே என்னைப் பார்க்குறீங்க. முகம் நல்லாதானே இருக்கு. அந்த செய்தியெல்லாம் சும்மா டூப்புங்க!’’‘‘தெலுங்கு ஹீரோவை ரகசிய திருமணம் செய்துக்கிட்டீங்களா?’’(இதற்கு லேசாக அதிர்ச்சி காட்டியவர், சின்ன இடைவெளி விட்டு சிரிக்கிறார்.) ‘‘ஹா... ஹா... இந்த நியூஸை நான் கேள்விப்படவே இல்லை. எனக்கே புதுசா இருக்கு. அதுவும் ரூமர்தாங்க!’’

அமலன் 
படங்கள்: ஆர்.கோபால்