ஆரோக்கியம் அளிக்கும் வீட்டுச்செடிகள்!



லைஃப் ஸ்டைல்

சுற்றுச்சூழல் மாசு தற்போது உலகை அச்சுறுத்தும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. காற்றில் அதிக மாசு கலந்திருப்பது புவி வெப்பமயமாதல் அதிகரிக்க வழி வகுக்கிறது. பல்வேறு உயிரினங்கள் அழிந்திருப்பதற்கும், ஏராளமான உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதற்கும் சுற்றுச்சூழல் மாற்றங்களே காரணமாக இருக்கிறது.
முக்கியமாக, காற்றில் கார்பன் மாசு மிகுந்திருப்பதே வெப்பம் உயர்ந்துகொண்டே செல்வதற்கும், இதர பிரச்னைகளுக்கும் அடிப்படை காரணமாக இருக்கிறது. நகர்ப்புற வளர்ச்சி, தொழில் வளர்ச்சி போன்ற காரணங்களால் காடுகள், தாவரங்களின் பெருக்கம் வெகுவாக குறைந்து வருவது, கார்பன் மாசு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெருக காரணமாக உள்ளது.

தற்போது அனைவரும் தீப்பெட்டி போன்ற சின்னச்சின்ன அறைகளிலும், நெருக்கமான பெரிய பெரிய அடுக்குமாடி கட்டிடங்களிலுமாக வாழ்க்கைமுறை மாறி வருகிறது. இதனால் சுத்தமான காற்று என்பது கிடைக்காமல் போவது ஒருபுறமும், மறுபுறம் காற்று மேலும் மாசடைந்துகொண்டே போவதுமாக இருக்கிறது.

இதனால் தாவரங்கள் இல்லாத வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வீட்டைச் சுற்றி அழகான தோட்டமும் அமைக்க முடியாமல் போகிறது. ஆகவே, பலர் வீட்டின் உள்ளே வளர்க்கக்கூடிய சில செடிகளை வளர்க்கின்றனர். இது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய விஷயம்தான்.   

சரி… வீட்டுக்குள்ளே செடி வளர்க்க என்ன செய்ய வேண்டும்? நிபுணர்கள் வழங்கியிருக்கும் ஆலோசனைகளைப் பார்ப்போம்….

பொதுவாக, சாதாரண செடிகளுக்கு சூரிய வெளிச்சம் மற்றும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. ஒரு வேளை அவை முறையாக கிடைக்காவிட்டால், செடிகள் வாடிவிடும். சாதாரண செடிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் காட்டிலும் வீட்டினுள் வளர்க்கும் செடிகளுக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். Spider Plant, Ferns, Ivy, Areca Palm, Golden Pothos, Chinese Evergreen, Snake Plant, Marginata, Peace lily போன்ற வீட்டிற்குள் வளர்க்கிற அலங்கார செடிகள் வீட்டில் உள்ள தூசிகளை நீக்க உதவுகிறது.  

ஒரு வீடு அல்லது அலுவலக கட்டிடத்தில் Areca Palm, Mother-in-Law’s Tongue or Sansevieria, Money Plant ஆகிய மூன்று தாவரங்களை வளர்ப்பதன் மூலம் அந்த கட்டிடத்திற்குள் உள்ள காற்றை தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும். இந்த தாவரங்கள் வீட்டிற்குள் இருக்கும் காற்றிலுள்ள நச்சுப் பொருட்களை தூய்மை செய்து காற்றின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்தியாவில் காற்று மாசு அதிகமுள்ள டெல்லியில் இத்தாவரங்கள் மூலமாக காற்றிலுள்ள நச்சுப் பொருட்கள் கட்டுப்படுவது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார்

ஆராய்ச்சியாளர் Kamal Meattle.  Benzene, Formaldehyde, Trichloroethylene போன்ற நச்சுக்களை நடுநிலையானதாக மாற்றி சுத்தமான காற்றை நாம் சுவாசிக்க இதுபோன்ற தாவரங்கள் உதவுவதாக NASA மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரிய வருகிறது என்கிறார் ஆராய்ச்சியாளர் Schoenberg. படுக்கை அறையில் மேற்கண்ட தாவரங்களை வைத்து சரியான முறையில் பராமரித்து வருவதன் மூலம் நமது அறிவாற்றல் சார்ந்த திறன்களை அதிகரிக்கலாம். இந்த தாவரங்களால் உருவாகிற உயர் தரத்திலான புதிய காற்றில் 6 மணி நேரம் இருப்பதன் மூலம் நமது அறிவாற்றல் திறன்கள் 61 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது.

மேலும் சுவாசம் சார்ந்த பிரச்னைகள் வராமல் தடுக்கவும், சுவாச மண்டல உறுப்புகளின் சீரான இயக்கம் மற்றும் நமது உடல்நலனை மேம்படுத்தவும் இத்தாவரங்கள் உதவுவதாக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் அழகுக்காக மலர்ச் செடிகளை வளர்ப்பதை நாம் பார்த்திருப்போம். அதன் மூலம் நம் மனதிற்கு புத்துணர்வும்  மகிழ்ச்சியும் கிடைக்கிறது. இதுபோன்ற அழகுச் செடிகள் மட்டுமின்றி உடல்நலனுக்கு உதவும் பயனுள்ள செடிகளையும் வீட்டில் வளர்ப்பது நல்லது.
செடிகளுக்கு காற்று மாசினை குறைக்கும் சக்தி உண்டு.

துளசி, தூதுவளை, சோற்றுக்கற்றாழை, நிலவேம்பு, அருகம்புல், ஆடாதொடை, வேப்பிலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நேத்திரப்பூண்டு, பூலாங்கிழங்கு, ஓமவள்ளி, பூனை மீசை, நொச்சி, தழுதாழை, கழற்ச்சி, செம்பருத்தி, கற்பூரவள்ளி, மல்லிகை, நித்திய கல்யாணி, வெந்தயம், புதினா, வல்லாரைக் கீரை, லெமன் பாம், பாசில், அஸ்வகந்தா போன்ற மூலிகை செடிகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம் காற்று மாசினைக் குறைப்பதோடு, அதன் மருத்துவ பலன்களையும் நாம் பெறலாம்.

வீட்டில் செடிகளை வளர்க்க சில ஆலோசனைகள்

* நாம் எல்லோரும் வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் செடிகளை வளர்க்க வேண்டும். ஏனெனில், அப்போதுதான் நாம் தூய்மையான காற்றை சுவாசிக்க முடியும். தாவரங்கள் கார்பன் டை ஆக்ஸைடை சுவாசித்துக் கொண்டு நமக்கு சுவாசிக்க ஆக்சிஜனைத் தருகின்றன. இதனால் நம் மனதும் வீடும் தூய்மையாக இருக்கும்.
* செடிகளை தொட்டியுடன் வாங்கி அப்படியே வளர்க்காமல் செடியை தனியாக எடுத்து பெரிய தொட்டியில் மாற்ற வேண்டும். அதற்கு முன் தொட்டியில் முதலில் செம்மண், நடுவில் கரிசல் மண், கடைசியில் ஆற்று மண் அல்லது செம்மண் சேர்க்க வேண்டும்.
* செடிகளுக்கு தினமும் காலை, மாலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீரை வெயில் வருவதற்கு முன்பு ஊற்ற  வேண்டும். ஏனெனில், சூரிய ஒளி வந்தவுடன் செடிகள் வளர்வதற்கு தேவையான மூலப் பொருட்களை உற்பத்தி பண்ணும். அதனால் வெயிலில் நீர் ஊற்றினால் செடி வளர்வது தடுக்கப்படும்.
* வாரம் ஒரு முறை செடிகளில் சில இலைகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை மட்டும் பறித்து கீழே போடாமல்  காலியாக உள்ள தொட்டியில் சேகரியுங்கள். அது நாளடைவில் இயற்கை உரமாக மாறிவிடும். அதை நாம் செடிகளுக்கு  போடலாம். அது மட்டுமல்லாது காய்கறி கழிவுகள், வெங்காயத்தோல், முட்டைக்கூடு போன்றவற்றையும்
உரமாக பயன்படுத்தலாம்.
* நாம் செடிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்தை அடிப்பதற்கு பதிலாக காய்ந்த வேப்பிலை இலைகளை போடலாம். இதனால் நமக்கும் பாதிப்பு வராது. இதை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.
* வாரம் ஒரு முறை செடிகளின் மேல் தண்ணீரைத் தெளிக்க வேண்டும். இப்படி தெளித்தால் செடிகளில் படிந்திருக்கும்  அழுக்கு போய்விடும். அழுக்கு போய்விட்டால் சுத்தமான காற்று நமக்கு கிடைக்கும்.
* வாரம் ஒரு முறை மண்புழு உரம் போட்டு மண்ணை சின்ன கரண்டியால் கிளறிவிட வேண்டும். அப்போதுதான் செடி நன்கு வளரும்.
* மாதம் ஒரு முறை தேவையில்லாமல் வளரும் கிளைகளை வெட்டி விடுங்கள். அப்போதுதான் செடிகள் மறுபடியும் வளர்ந்து பூக்கள் நிறைய பூக்கும்.



காற்று மாசுகளை உறிஞ்சும் செடி

தாவரங்கள் காற்று மாசுகளை உறிஞ்சும் என்பது நாம் அறிந்ததே. அதிக அளவில் காற்றை சுத்தப்படுத்துவதற்காகவே செயற்கையாக மரபணு மாற்றத்துடன் Pothos Ivy என்ற தாவரத்தை வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். குறிப்பிட்ட புரதப்பொருளை மரபணு முறையில் நீக்கி இந்த தாவரத்தை உருவாக்கியுள்ளனர்.  

இந்த தாவரம் தனது வளர்ச்சிக்காக சுற்றுப்புறத்திலுள்ள கார்பனை அதிகமாக உறிஞ்சுவதுடன் குளோரோபாம், பென்சீன் போன்ற ஆபத்தான நச்சுப் பொருட்களையும் உறிஞ்சிக் கொள்கிறது. புற்றுநோயை உருவாக்கும் நச்சுப் பொருட்களான இவை வீட்டின் சுற்றுப்புறத்தில் இருப்பதை நம்மால் அறியவோ, அகற்றவோ முடியாது. ஆனால், இந்த  செடி வழக்கமாக இயற்கை தாவரத்தைவிட அதிக அளவில் மாசுகளையும், நச்சு வாயுக்களையும் உறிஞ்சிவிடுவது  குறிப்பிடத்தக்கது.

நச்சு வாயுவை உறிஞ்சும் பவுடர்

கார்பன் மாசினைக் கட்டுப்படுத்த தற்போது கார்பன்டைஆக்ஸைடு வாயுவை உறிஞ்சிக் கொள்ளும் ஒரு வகை பவுடரை கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்த பவுடர் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உறிஞ்சுதல், வடிகட்டுதல், பிரித்து நீக்குதல் ஆகிய மூன்று முறைகளில் அப்புறப்படுத்த உதவுகிறது. அதிகமாக மாசு விளைவிக்கும் தொழிற்சாலைகள், மின்சார நிறுவனங்களில் இந்த பவுடரை பயன்படுத்துவதன் மூலம் வெகுவாக கார்பன் மாசினைக் கட்டுப்படுத்த முடியும் என்கிறார் விஞ்ஞானி ஷாங் வெய்.

ஒரு முறை உறிஞ்சிய கார்பனை அது திரும்ப வெளியிடுவதில்லை என்பது அதன் நம்பகத்தன்மையை  அதிகமாக்குகிறது. மேலும் இந்த பவுடர் துகள்கள் ஒரு மீட்டரில் 10 லட்சத்தில் ஒரு பங்கைவிட சிறிதாக இருப்பதால், மிக நுட்பமான இடத்திலும் உள்ள கார்பனை உறிஞ்சி அகற்ற பயன்படுத்த முடியும்.

அதனுடன் இதன் பயன் முடிவதில்லை. மீண்டும் இந்த பவுடரை நீர் வடிகட்டுதல், ஆற்றல் சேமிப்பு கருவியாக பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சங்கள். பலவிதங்களில் பயன்படும் இந்த பவுடரின் தயாரிப்பு முறையை ரகசியமாக வைத்துள்ளனர். சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் இந்தத் தயாரிப்பு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 தொகுப்பு: க.கதிரவன்