பேஸ்மேக்கர் இதயத்துடிப்புக்கு ஓர் இனிய கருவி!



பத்திரமா பார்த்துக்கோங்க

பேஸ்மேக்கர்...

இது பல ஆண்டுகளுக்கு முன்பே நாம் அறிந்த வார்த்தை தான். சாதாரணமாக ஒரு மனிதனுக்கு இதயத்துடிப்பானது நிமிடத்துக்கு 72 இருக்க வேண்டும். இந்தத் துடிப்பானது 70க்கு கீழ் குறைந்தாலும் ஆபத்து... 100க்கு மேல் அதிகரித்தாலும் ஆபத்து. இப்படி பாதிக்கப்படுபவர்களுக்கு கை கொடுப்பதே இந்த பேஸ்மேக்கர்.

மருத்துவத் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு வரவுதான் இச்சாதனம். காலம் மாற மாற, மேலும் மேலும் நவீன தொழில்நுட்பங்கள் வந்துகொண்டே இருப்பதால், மேம்பட்ட வசதிகளோடு பேஸ்மேக்கரும் வந்துவிட்டது. இது குறித்து விளக்குகிறார் இதய நோய் மருத்துவர் கே.சுப்ரமணியன்...

இதய நோயாளிகளின் இதயத் துடிப்பு தினம் தினம் மாறுபட்டுக் கொண்டிருக்கும். இதை சரிசெய்ய கண்டுபிடிக்கப்பட்ட கருவி தான் பேஸ்மேக்கர். இதயத்தசைகளை மின்முனைகள் தொடர்பு கொள்ளும் போது வெளிவரும் மின் துடிப்புகளைப் பயன்படுத்தி இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துவது அதன் வேலை. அதாவது, ஒரு இதய நோயாளியின் இதயத் துடிப்பை சம்பந்தப்பட்ட நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ப தானே சரி செய்துகொண்டு கூடுதலாகவோ, குறைவாகவோ தானாகவே இயங்கும்.

ஒரு சிறிய சர்ஜரி மூலம் இதயத்துக்கு வெளியே, மார்பெலும்பு கூட்டுக்கு அருகே பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு, ஒயர்கள் மூலம் இதயத்துடிப்பு சரி செய்யப்படுகிறது. இதயத்தின் மின் அதிர்வை கண்காணித்து இதயத் துடிப்பு மெதுவாகும் போது, பேஸ்மேக்கரில் உள்ள சர்க்கியூட், எலெக்ட்ரிகல் ஸ்டிமுலேஷன் அளித்து இதயத்துடிப்பை வேகப்படுத்துகிறது.

 இது பேட்டரி உதவியுடன் செயல்படுகிறது.ஹார்ட் அட்டாக் என்கிற மாரடைப்பு பொதுவாக30 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரலாம். இதய பாதிப்போ பிறந்த குழந்தைக்குக் கூட இருக்கலாம். வைரஸ் தொற்றினால் கூட, சிறுவயதிலேயே கார்டியோ மையோபதி ஏற்படலாம். அதனால் இதை எந்த வயதினருக்கும் பொருத்தலாம்.

இதைப் பொருத்துவதால் உடலில் வேறு எந்த மாற்றமும் ஏற்படாது. சாதாரணமாகவும் இயல்பாகவும் வாழலாம். இச்சிகிச்சை பெறுபவர்கள்எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை செய்ய முடியாது... அவ்வளவுதான்! பேஸ்மேக்கரில் சிங்கிள் சேம்பர், டபுள் சேம்பர், டிரிபிள் சேம்பர் என்று சில வகைகள் உள்ளன. சிங்கிள் சேம்பர் என்பது வலது கீழறையின் கீழ்ப்பகுதி வரை லீட்ஸ் செலுத்தப்பட்டு அப்படியே வைக்கப்படும். டபுள் சேம்பரில் 2 லீட்ஸ் இருக்கும். ஒரு லீட் மேலறையிலும் ஒரு லீட் கீழறையிலும் வைக்கப்படும். சிங்கிள் சேம்பரை விட இந்த டபுள் சேம்பர் அதிகம் பாதுகாப்பானது.

இதயத் தசைகள் பலவீனமாக இருக்கும் நோயாளிகளுக்கு இதயத் துடிப்பு குறைவாக இருக்கும். இதை கார்டியோ மையோபதி என்போம். இவர்களுக்கு இதயத்தில் அடைப்பும் (LBBB  Left bundle branch block) ஏற்பட்டால் இதயத் துடிப்பு மிகவும் குறைந்து நுரையீரலில் நீர் கோர்த்துக் கொள்ளும்... கால்களில் வீக்கம் உண்டாகும். கொஞ்சம் நடந்தால் கூட மூச்சு வாங்கும் நிலை ஏற்படும். சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அடிக்கடி சேர்க்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இதனால் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படலாம். இந்த நிலை ஏற்படாமல் இருக்க இந்த சிறப்பு சிஆர்டி (Cardiac Resynchroniza tion Therapy) எனப்படும் டிரிபிள் சேம்பர் பேஸ்மேக்கர் பொருத்தப்படுகிறது. இதய பலவீனம் மற்றும் இதயத்தில் அடைப்பால், அதிகம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக அட்வான்ஸ்டு டெக்னிக்கில் வந்திருக்கிறது சிஆர்டி பேஸ்மேக்கர். இது இன்னும் இதயத்தின் தாங்கும் சக்தியை அதிகரிக்கும்.

இதனால் நுரையீரலில் நீர் கோர்த்துக் கொள்ளும் பிரச்னை ஏற்படும் போது, அதன் ஆரம்ப கட்டத்திலேயே நோயாளிகள் உணரும் வண்ணம் பீப் சத்தம் கேட்கும். இந்நிலையை முன்னரே அறிந்து கொள்ளும் போது தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் உணவுக்கட்டுப்பாடு மூலமாகவே,  மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய தேவை ஏற்படாமல், உயிருக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க முடியும். இதை பொருத்தும் போது பத்துக்கு 7 பேருக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

கூடுதலாக சாக்கிங் டிவைஸ் (ICD  implantable cardioverter defibrillator) சேர்த்த காம்போ டிவைஸ் (CRTD) பேஸ்மேக்கரும் இருக்கிறது. இது ஹார்ட் பீட் குறையும் போது, அதனை சமன் செய்து சாதாரண நிலைக்குக் கொண்டு வரும். அதாவது, நோயாளிக்கு தேவையான இதயத்துடிப்பை அளிக்கும். இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 200ஐ தாண்டும் போதும் இதயத்துடிப்பு அளவுக்கு மீறி அதிகரிக்கும் போதும் எலெக்ட்ரிக்கல் ஷாக் கொடுத்து இதயத்தை நார்மல் நிலைக்கு கொண்டு வரும்.

பெரும்பாலும் 5 லிருந்து 8 ஆண்டுகள் வரை இந்த பேஸ்மேக்கர் வேலை செய்யும். அதாவது, பேட்டரியின் வேலைப்பளுவைப் பொறுத்தே அதன் லைஃப் இருக்கும். அதற்குப்பிறகு மாற்ற வேண்டும். MRI  compatible pacemakerஐ பொருத்திக்கொண்ட இதய நோயாளிகள் தேவை ஏற்படும் போது எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து கொள்ள முடியும். இதற்கு வாழ்நாள் வாரன்டி உண்டு. விலை கூடுதலாக இருக்கும். பொதுவாக பேஸ்மேக்கர் ரூ. 1 லட்சத்திலிருந்து 2 லட்சம் ரூபாய் வரை விலை. சிஆர்டி, ஐசிடி போன்ற அட்வான்ஸ்டு தொழில்நுட்பம் உள்ள பேஸ்மேக்கர்கள் விலை ரூ.10 லட்சம் வரை இருக்கும். 

ரிமோட் மானிட்டரிங் சிஸ்டத்துடன் கூடிய பேஸ்மேக்கர் பொருத்திக் கொண்டால் நோயாளிகள் எங்கிருந்தாலும் இதயத் துடிப்புகள் கூடும்போதோ குறையும்போதோ அது பற்றிய தகவல் தானாகவே ஷிவிஷி மூலமோ, மெயில் மூலமோ டாக்டருக்கு உடனடியாகத் தெரியப்படுத்தப்படும்.

டாக்டர் அந்தத் தகவலைப் பெற்று போன் மூலம் நோயாளிக்கு அடுத்த சிகிச்சையை கொடுப்பார்.பேஸ்மேக்கர் பொருத்திக் கொள்வதால் பின் விளைவுகள் எதுவும் இருக்காது. நீரிழிவு உள்ளவர்களும் பொருத்திக் கொள்ளலாம்.

 அலர்ஜி போன்ற ஒரு சில பிரச்னை உள்ளவர்களுக்கு மட்டுமே ஆபரேஷன் செய்யும் போது சிறிய பிரச்னைகள் வரலாம். அதையும் சரி செய்து விடுவார்கள். பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டால் 6 மாதத்துக்கு ஒரு முறை செக்கப் செய்து கொள்வது அவசியம்...’’ பேஸ்மேக்கரை எந்த வயதினருக்கும் பொருத்தலாம். இதைப் பொருத்துவதால் உடலில் வேறு எந்த மாற்றமும் ஏற்படாது. சாதாரணமாகவும் இயல்பாகவும் வாழலாம்...

ஸ்ரீதேவி மோகன்